Wednesday, August 11, 2021

ஊர்ல கல்யாணம்..... (Part 2)

 Part 1  படிச்சாச்சா


அந்த என் ஆர் ஐ ஆண்டி புண்ணியாஜன ப்ரோக்ஷணம் முடிச்சு இப்ப தீர்த்தம் குடுக்க ஆரம்பிச்சா (அதான் கைல சானிடைசர் போட்டுக்கர்துக்கு). ‘அடுத்து சடாரி சாதிச்சு துளசி பிரசாதம் மட்டும்தான் பாக்கி’னு நான் சொல்லும்போது’ தங்கமணி என்னோட கையை கிள்ள ஆரம்பிச்சுட்டா. இதுக்கு முன்னாடி லக்கேஜ் போடர இடத்துல கத்தார் ஏர்வேஸ்காரி ‘லக்கேஜ்ல என்ன இருக்கு’னு ஜாரிச்சா. ‘மாமியாருக்கு லிப்ஸ்டிக், மாமனாருக்கு ஸ்ப்ரே, பொண்ணுக்கு விளையாடல் சாமான், மச்சானுக்கு பெர்ப்யூம், கரூர் அத்தைக்கு பவுடர், பாசி ஊசி பீபொறுக்கு புண்ணாக்குகட்டினு உள்ள ஒரு கல்யாணமண்டபமே இருக்கு,  உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ கோந்தை’னு நான் பதில் சொல்லும்போது தங்கமணி ‘வாயைமுடிண்டு இருங்கோ’னு செல்லமா மிரட்டினா. ஏர்போர்ட்டுல நிம்மதியா ஒரு சேர்ல உக்காந்து கண்ணைமூடி தூங்க முடியலை யாராவது திடீர்னு வந்து மூக்கை குடஞ்சு கொராணா டெஸ்ட் எடுத்துடுவாளோனு ஒரே பயம். ‘மொத்த குடும்பத்துக்கும்  மூக்கு குடைஞ்ச பைசாவை மிச்சம் பிடிச்சுருந்தா ரெண்டு பவுண் வாங்கியிருக்கலாம். எல்லாம் இந்த நாசமாபோற சைனாகடங்காரனால வந்தது’னு ஆற்றாமைல ஏர்போர்ட்டுல பொலம்பிண்டு இருந்தேன். கத்தார் ஏர்வேஸ்ல சாப்பாடு நன்னா இருந்தது. புதுசமையக்காரர் போலருக்கு காரம் கம்மியா போட்டு நன்னா பண்ணியிருந்தார். எங்க ஊர் ஏற்கனவே டெஸர்ட்(Desert) அப்பிடிங்கர்தால சாப்பாட்டுல எப்போதுமே டெஸ்ஸர்ட்(Dessert) நன்னா இருக்கும். சாப்பிட்டு முடிஞ்சு கொஞ்சம் கண் அசந்து இருந்தேன் படக்குனு மெட்ராஸ் வந்துடுத்து. கழிஞ்ச ரெண்டு வருஷமா ஏர்போர்ட்ல ஈ காக்கா இல்லை. இப்ப தான் ஆட்கள் வர ஆரம்பிச்சு இருக்கா. கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கெடுபிடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கிலோகணக்குல தங்கம் கடத்தின கேரளத்து சொப்பனசுந்தரிகளை விட்டுட்டு நாம கொண்டு போகும் அருனாகொடியை எடை போட்டுண்டு இருக்கா.


ஒரு வழியா மெட்ராஸ் ஏர்போர்டுலையே மறுபடியும் ஒருதடவை மூக்கு வாய் குடைஞ்சுட்டு ஆத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்க போய் இறங்கினதுக்கு அப்புறம்தான் தெரியர்து தங்கமணி அங்கவேற ஒரு மினி ஆன்லைன் ஷாப்பிங் பண்ணி ஒரு பெட்டி சாமான் தேத்தி வச்சுருந்தா. கல்யாணம் பொள்ளாச்சில வச்சுங்கர்தால இருபது டிக்கெட்டுக்கள் சகிதமா ஒரு மினிபஸ்ல அடுத்த நாளே கிளம்பிட்டோம். பகல் முழுக்க பஸ்ல பிரயாணம். திருமலை தென்குமரினு ஒரு பழைய படம் உண்டு அதுல வரும் பாலகன் மாதிரி இப்ப நாம எங்க வந்துருக்கோம்!னு ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை கேட்டுண்டு இருந்தேன். மத்யானம் ஆச்சு, சாயங்காலம் ஆச்சு, ராத்ரியும் ஆச்சு பொள்ளாச்சிமட்டும் வரவே இல்லை. இதுக்கு நடுல தங்கமணியோட பாட்டிக்கு வாந்தி அப்புறம் கொஞ்ச நேரத்துல மச்சானுக்கு வாந்தி. ‘பாட்டில ஆரம்பிச்சு பேரன் வரைக்கும் வாந்தி எடுத்தாச்சு இன்னும் ஊர் வரலையேடி’னு தங்கமணிகிட்ட சொல்லிண்டு இருக்கும்போதே ஒருவழியா மண்டபம் வந்துடுத்து. பஸ்ஸுல இறங்கின உடனே என்னோட மச்சான் அவனோட வருங்கால மாமியார்கிட்ட போய் ‘மாமி! எப்பிடி இருக்கேள்? சாப்பிட்டேளா?’னு ஜாரிச்சுண்டு இருந்தான். ‘காலேலேந்து குத்துக்கல் மாதிரி கூடவே இருந்த என்னை பாத்து அக்கா சாப்டியானு ஒரு வார்த்தை கேட்டானா? மாமியாரை பாத்த உடனே குசலம் விசாரிக்கரான் பாத்தேளா’னு தங்கமணி குசுகுசுத்தாள். ‘நீ சொன்னதுல குத்துக்கல்லெல்லாம் சரிதான் ஆனா அவன் பொழைக்கத் தெரிஞ்ச புள்ளடி! அத்திம்பேரை பாலோ பண்ணறான்! உங்காத்துல இருந்தும் இவ்ளோ கெட்டிக்காரனா இருக்கானேனு தான் எனக்கு ஆச்சரியம்’னு நான் சொன்னதும் முகத்தை வெட்டிண்டு போயிட்டா. ராத்திரி ஆஹாரம் பண்ணினதுக்கு அப்புறம் ரூம் பிடிக்கர படலம் ஆரம்பம் ஆனது. ‘மாப்பிள்ளை ரூம்ல மட்டும் தான் ஏசி இருக்கு & ரூம் பெரிசாவும் இருக்கு நாம எல்லாரும் இங்கையே தங்கலாம்’னு தங்கமணி தொணதொணத்தாள். கல்யாண மண்டபத்துல மாப்பிள்ளை ரூம்ல சேர்ந்து தங்கினா சில அவஸ்தைகள் உண்டு. யாராவது வந்துபோயிண்டே இருப்பா, நாம கொஞ்சம் கண் அசரலாம்னு நினைக்கும் போதுதான் முருக்கு வைக்கவந்தேன், மொனோகரம் வைக்கவந்தேனு எதாவது ஒரு மாமி வருவா, வந்துட்டு சும்மா போகாம நீங்க தான் அந்த கத்தார்ல ஒட்டகம் மேய்க்கர அத்திம்பேரானு ஆரம்பிப்பா, ஒன்னும் இல்லைனா பொண்ணாத்துலேந்து யாராவது ஒரு தாய்மாமா வந்து’ காபி சாப்டேளானா? டிபன் சாப்டேளானா?’னு வந்து மொக்கைபோடுவா. ‘எள்ளுதான் எண்ணைக்கு காயணும் எலிப்புலுக்கை எதுக்கு காயணும்’னு சொல்லி மாடில ஒரு சிங்கிள் ரூமை நானே கைபற்றி பெட்டியை இறக்கிட்டேன்.




அதிகாலைல ரயில்ல போகர மாதிரி ஒரு கனவு, காபி! காபி!னு சத்தம் வேற வந்தது. கண் முழிச்சு பாத்தா ரூம் வாசல்ல சமையல் மாமா கதவை தட்டிண்டு இருக்கார். 'இன்னும் பல்லே தேய்க்கலைஓய்!'னு சொன்னாலும் விடாம ‘முதல்ல காப்பியை குடிங்கோ அப்புறம் பல் தேய்ங்கோ’னு ஒரே உபசாரம். தங்கமணிக்கு பெருமை பிடிபடலை ‘எப்பிடி கவனிக்கரா பாத்தேளா?’னு கேட்டா. ‘என்னவோ உங்காத்துல ஏற்பாடு பண்ணின மாதிரி பீத்திக்கரை, கேட்டரிங் மாமாவாத்து மாமிக்கு திருனெல்வேலி பக்கமாம் அதான் இப்படி உபசாரம் பண்ரார்’னு ஒரு பிட்டை எடுத்து விட்டேன். ‘காலங்காத்தால உங்க திருனெல்வேலி ஊர் புராணத்தை ஆரம்பிக்காதீங்கோ’னு சொல்லிட்டு போயிட்டா. காத்தால டிபன் சாப்பிட போனோம். ஊத்தப்பம், இட்லி, பொங்கல், வடை, பைனாப்பிள் கேசரினு ஒரு பெரிய லிஸ்டே போச்சு. ஊத்தப்பம் ஏற்கனவே வார்த்து வைச்சதை போடாம நாங்க ஒக்காந்ததுக்கு அப்புறம்தான் “மாமா இருங்கோ கல்லை போடறேன்”னு சொல்லி எத்தம் கூட்டினார்.  ‘நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு’னு சொல்லிண்டே சாப்பிட ஆரம்பிச்சேன். ‘மாமா! அந்த கல் காய்ஞ்ச உடனே சொல்லுங்கோ!’னு தங்கமணி பல்லை கடிச்சுண்டு சொல்லிண்டு இருந்தா. 20-20 கிரிக்கெட் மாட்ச் மாதிரி 25-25 பேர் மட்டும் தான் மண்டபத்துல இருந்தோம். சாயங்காலம் ஜானுவாசத்துக்கு ரெடியாகர்துக்கு தங்கமணி மத்தியானத்துலேந்தே தயார் ஆக ஆரம்பிச்சுட்டா. நான் என்னோட கல்யாணத்துக்கு போட்ட 'ஸ்டோனொர்க்' ஷெர்வானியை பத்திரமா எடுத்து வச்சுட்டு கொஞ்சம் கண் அசரலாம்னு பாத்தேன் அதுக்குள்ள தங்கமணி “நான் இங்க இவ்ளோ கஷ்டப்பட்டு ரெடியாகும் போது உங்களுக்கு எப்பிடிதான் தூக்கம் வருதோ அதுவும் இந்த கல்லிடைகுறிச்சிகாராளுக்கு மத்தியானம் சாப்பிட்ட உடனே தூக்கம் எங்கேந்துதான் வருமோ”னு ஆரம்பிச்சா. “குழந்தை மனசுடி எங்களுக்கு அதான் சாப்பிட்ட உடனே தூக்கம் வருது!”னு நானும் சொல்லிட்டு ‘இப்ப என்ன பண்ணனும் சொல்லு?’னு கேட்ட உடனே ‘சாயங்காலம் சின்னவனுக்கு நீங்கதான் டெரெஸ் போட்டுவிடனும்’ அது இதுனு எல்லாத்தையும் என்னோட தலைல கட்டியாச்சு. 

சாயங்காலம் ரெண்டு கோஷ்டிகளும் ரெடி ஆக ஆரம்பிச்சது….. (கல்யாண கலாட்டா தொடரும்)


6 comments:

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல்! வேறென்ன சொல்ல!

கலாட்டா தொடரட்டும்.

soma said...

இன்னும் பல்லே தேய்க்கலைஓய்!'யானை பல்லா..தேய்த்து கொண்டு இருக்கு...உமக்கு.. பல்தேய்க்கற..பழக்கம் எப்போதும்.. இல்லேயே....ஓய்..ஆத்துக்காரி கிட்ட..அடி வாங்கினால் தானே.. பல் இருப்பது உமக்கு.. தக்குடு..ஞானம்.. வரும்..

ஸ்ரீராம். said...

கண்ணை மூடித் தூங்கினா வந்து மூக்கைக் குடைஞ்சுடறாங்களா!  ஹா..  ஹா..  ஹா...   பொள்ளாச்சில கல்யாணம்னா குளுகுளுன்னுதான் இருந்திருக்கும்.  கல்யாண சூழ்நிலைக்குள் நாங்களும் இறங்கறோம்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கல்யாணத்துக்கு போகும் போதே அட்வான்சா அருனாக்கொடி கிப்ட் பண்றது தான் இப்ப ட்ரெண்டா... நைஸ் நைஸ் 

அதானே...சாப்பிட்டதும் என்ன தூக்கம். புள்ள குட்டிய ரெடி பண்ண ஹெல்ப் பண்றத விட அது முக்கியமா என்ன? ஜெயஸ்ரீ இஸ் ரைட் 

சரி கல்லுல ஊத்தாப்பம் போட்டாங்களா இல்ல.........(fill in the blanks)

இப்போதைக்கு அந்த்தே... நான் போய் டிஃபன் பண்ணனும். மிச்ச கச்சேரி நாளைக்கு 

தக்குடு said...

டில்லி அண்ணாச்சி - சந்தோஷம் அண்ணா!

சோமா அக்கா - கரெக்ட் யானை பல்லா தேய்கர்து :)

அண்ணா - ஆமாண்ணா! சேர்ல உக்காந்துண்டு கையை கட்டிண்டு தூங்க ஆரம்பிச்சாலே யாரோ கொராணா டெஸ்ட் எடுக்க குச்சியோட வரமாதிரியே இருக்கு :)

அடப்பாவி தங்கமணி - அந்த அருனாகொடி விஷ்வஜிதோடுது அக்கா. ஊத்தப்பம் போட்டாங்க போட்டாங்க! :)

Srinivasan J said...

Really good narration

Post a Comment

யெச்சுஸ்மி, comment பொட்டி இங்க இருக்கு.....:)