Thursday, April 29, 2010

எழுத்துத் தேர்வு 2

புதுசா வந்துருக்கேளா?? எழுத்துத்தேர்வு 1

வினாத்தாளை ஒரு HR பிகர்தான் வந்து எல்லோருக்கும் வினியோகம் செய்தது. எனக்கு மட்டும் All the best! எல்லாம் சொல்லி தந்தது. HR பிகரின் ID card ‘ல எழுத்து சைஸ் குட்டியூண்டா இருந்ததால், ஷ்வேதா நாராயணன்!னு போட்டிருந்த அதோட பெயர் எல்லாம் நான் பார்க்க முயற்சி செய்யவே இல்லை(ப்ளட் குரூப் கூட எதோ B+னு பார்த்த ஞாபகம்). பக்கத்து டேபிள்காரன் வினாத்தாளை கையில் வாங்கி அதை திறக்காமல் ஒரு கையால் தொட்டுக்கொண்டு, எதோ ‘நாகாஸ்திரம்’ விடப்போற கர்ணன் மாதிரி கண்ணை மூடிக்கொண்டு ஸ்லோகம் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டாண். நானே பெரிய பழம், இவன் நம்பளவிட பெரிய ‘ஞானப்பழமா’ இருப்பான் போலருக்கே?? நு எனக்கு ஆச்சர்யமா இருந்தது.

அவனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே நானும் என்னுடைய வினாத்தாளை திறந்து வாசிக்கத் தொடங்கினேன். ஒரு 125 கேள்விகள் அதில் இருந்தது.ஆங்கிலஇலக்கணம்,மொழித்திறன்,வார்த்தைபயன்பாடு,கணிதம்,அறிவுக்கூர்மை சோதனை என்று பல தலைப்புகளின் கீழ் கேள்விகளை சரமாரியாக கேட்டு வைத்திருந்தார்கள். நான் முதலில் எனக்குத் தெரிந்த 55 கேள்விகளுக்கான பதில்களை ‘டிக்’ செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய டேபிளில் இருந்தவன் வேக வேகமாக டிக் செய்து கொண்டிருந்தான். சில சமயங்களில், கணிதம் எல்லாம் ஒரு தாளில் போட்டுப் பார்த்து பின்பு டிக் செய்தான்(ம்ம்ம், முடி இருக்கிற சீமாட்டி வலக்கொண்டையும் போட்டுக்கலாம், இடக்கொண்டையும் போட்டுக்கலாம்). அந்தப் பையனுக்கு கொஞ்சம் கூட டேபிள் மேனர்ஸே தெரியவில்லையே?? என்று நான் ஆச்சர்யப்பட்டேன். பரிட்சையெல்லாம் ஒரு Team Effort-டோட செய்யவேண்டிய ஒரு வேலை. ஆனால் அந்தப் பையன் நான் இருப்பதையே கவனிக்கவில்லை.

இருந்தாலும் நான் விடாமல், நீ எழுதி முடிச்சோனே பேப்பரை எங்கிட்ட தா! நீ எல்லாம் கரெக்டா எழுதிருக்கையா?னு நான் செக் பண்ணி தரேன்! என்றேன். அதுக்கும் அந்த ‘இடிச்சபுளி’ பதிலே சொல்லலை,. அந்த சமயத்தில்தான் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். நான் உக்காசுண்டு இருந்த டேபிளுக்கு குறுக்கு வாக்கில் ஆறாவது டேபிளில் ஒரு தேவதை, ஆம்! அது என்னோட முகத்தை பார்த்துக்கொண்டிருந்தது. சே!சே! இதெல்லாம் வெறும் மனப்பிராந்திடா தக்குடு!னு மனசுக்குள்ள சொல்லிக்கொண்டு மீண்டும் எனது வினாத்தாளுக்குள் மூழ்கினேன். என்னோட டேபிள்காரன் எழுதற வேகத்தை பார்த்தா, நேத்திக்கு மாலைமுரசு-ல மாதிரி வினாத்தாள்ல வந்த கேள்விகளே வந்து, பரிட்சை எழுதும் +2 மாணவன் போல இருந்தது. மீண்டும் என்னை யாரோ நோட்டம் விடுவது போல மனதிற்குத் தோன்றியது.

இந்த முறையும் அதே பிகர்தான், இந்த முறை என்னைப் பார்த்து சிரிக்க வேறு செய்தது. என்ன்ன்ன்ன்ன்னடா இது!னு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பச்சைக்கிளிக்கே பச்சைகலர் டிரஸ் போட்ட மாதிரி பச்சைக்கலர் சல்வார், நாலு நாளைக்கு முன்னாடி வைத்த மருதாணியால் சிவந்த உள்ளங்கை,காதில் ஒரு சிறிய தங்கவளையம், வலது கையில் ஒரே ஒரு தங்க வளையல்,இடது கையில் இரண்டு சென்டிமீட்டர் விட்டமுடைய ஒரு குட்டி கைகடிகாரம் அதற்கு உள்ளே சாதாரண முள் இல்லாமல் ஒரு சிறிய குக்கூ பறவையே முள்ளாக இருந்தது. 4.5 ஆரோக்யா பாலை இரண்டு லிட்டர் வாங்கி, அதை குக்கரில் விட்டு, கட்டிதட்டாமல் கிண்டி, 1:2(பால்:ஜீனி) விகிதத்தில் ஜீனி சேர்த்து வந்த திரட்டிப்பாலை,புதிதாக வாங்கிய ஒரு வெள்ளித்தட்டில் போட்டு, அதை அவள் உக்காசுண்டு இருந்த டேபிளில் அவளுக்கு அருகில் வைத்தால்,வெள்ளித்தட்டு&திரட்டிப்பால் இரண்டுமே கொஞ்சம் கறுப்பாகத் தெரியும். சுண்ட வேண்டும் என்று நம்ப மனசுக்குள் நினைத்தாலே ரத்தம் வந்து விடுமோ? என்று எண்ணும் வண்ணம் இருந்தாள். ஆறு டேபிளுக்கு அப்பால் இருந்ததால் தெளிவாக என்னால் அவளை பார்க்கமுடியவில்லை. பரிட்சை அறையில் ரோஜாப்பூ! கைக்கு எட்டும் தொலைவில் நிலவு! கண்ணுக்கு எட்டாத தொலைவில் அவள் அப்பா! என்று பல கவிதை புத்தக டைட்டில் எல்லாம் கன்னா! பின்னா!னு மூளையில் உதயமானது.



நம்ப VGr-ருக்கு பிடிச்ச தாம்பரம் பொண்கள்தான் இந்த டெஸ்டை எல்லாம் கிளியர் பண்ணமுடியும்!எவ்ளோ யோசிச்சும், ஆறு தலைமுறைக்கு முன்னாடி இருந்த தாத்தா,பாட்டி பேரெல்லாம் நினைவுக்கு வந்ததே தவிர சரியான விடைகள் அகப்படவில்லை அதனால், மிச்சம் இருந்த கேள்விகள் அனைத்தும் இங்கி! பிங்கி! பாங்கி! என்னும் நவீன விஞ்ஞான அறிவியல் முறைப்படி குலதெய்வம் பெருவேம்புடையாரின் உதவியுடன் டிக் செய்யப்பட்டது. நம்ப கர்ணமகாராஜா பேப்பரை குடுப்பதற்கு முன்பும் ‘ப்ரம்மாஸ்திரம்’ விடப்போவது போல் ஸ்லோகம் எல்லாம் சொல்லிவிட்டுத்தான் கொடுத்தான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு யாரெல்லாம் அடுத்த சுற்றுக்கு செல்லப்போகிறார்கள் என்ற லிஸ்டை வாசித்தார்கள். நான் எதிர்பார்த்ததை போலவே என்னுடைய பெயர் அதில் இல்லை. இன்டர்வ்யூவுக்கு வந்த 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியையே உங்களுக்கு போதிய தகுதி இல்லை!னு சொல்லி ஓவரா thoughtsஐ apply பண்ணினவாளோட ஞாபகம்தான் வந்தது. மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், பச்சைக்கிளியை பார்த்த சந்தோஷத்தில் மனதை தேற்றிக் கொண்டேன். அறையை விட்டு பல்பு வாங்கிய அனைவரும் வெளியே வந்தோம். சோர்வாக இருந்தவனுக்கு சூப் குடுத்தது போல, ஹாய்! என்று யாரோ புல்லாங்குழலில் வாசித்தார்கள். திரும்பிப் பார்த்தால் விரும்பிப் பார்க்க முயன்ற பச்சைக்கிளி.....! I am வைஷ்ணவி! (உண்மைப்பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று அறிமுகம் செய்துகொண்டாள். பக்கத்தில் அவளுடைய அப்பா/அண்ணன்(அதாவது நம்ப மச்சான்)இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு நானும் ஒரு ஹாய்! சொல்லிவிட்டு, I am தக்குடு! என்று continue செய்தேன். தூரத்தில் பார்க்கும் போது மயில் போல் இருந்தாலும், அவளுடைய குரல் குயில் போலத்தான் இருந்தது, இதனால் என் மனம் ரயில் போல அவளைத் தொடர்ந்தது.

நீங்களாவது செலக்ட் ஆவேள்னு நினைச்சேன்! இது உரிமையோடு அன்பான குரலில் பச்சக்கிளி, நானும் அப்படித்தான் நினைச்சேன், ஆனா என்னோட டேபிள்காரன் ரொம்பமோசம்!இது நான்தான். நான் டிருப்ளிகேன்ல இருக்கேன்! என்றாள்( நினச்சேன்! மூக்கு கருடன் மாதிரி இவ்ளோ தீர்க்கமா இருக்கும் போதே ------ வீட்டு அழகாதான் இருக்கனும்!னு மனசு பேசியது). அப்பா பேரு பார்த்தசாரதியா??னு 'இந்தியன்' கவுண்டமணி மாதிரி கேட்கவேண்டும் என்று வாய்வரைக்கும் வந்துவிட்டது, கச்சேரிக்கு பங்கம் விளையுமோ? என்ற பயத்தில் அமுக்கிவிட்டேன். பொண்களுக்கு அவாளோட நைனாவை மட்டும் நக்கல் அடிச்சா தாங்கிக்கவே முடியாது, இது முக்கியமான பாலபாடம். அவள் பேசும் போது, 3 ராஜேஷ் வைத்யா வீணை, 4 ரமணி ப்ளூட் மோஹன ராகத்தில் ஒன்றாக வாசிப்பது போல இருந்தது. கச்சேரி நல்லபடியாக சென்றுகொண்டிருக்கும் போது, மேலே தூக்கிப்போட்டு பிடிக்கத்தவறிய விக்கு வினாயகராமின் கடம் டமார்!னு கீழே போட்டு உடைத்தது போல எங்கண்ணன் வந்து சேர்ந்தான்.
சபாலக்க்ஷணமே இல்லாமல், என்னடா டெஸ்டு ஒவுட்டா? என்று கத்தினான். அது அவளுக்கும் பொருந்தும் என்பதால் பச்சக்கிளியோட வதனம் அவமானத்தால் இருண்டுவிட்டது. நான் வரேன்!னு சொல்லிட்டு வைஷ்ணவி நகர்ந்தாள். நாங்களும் கம்பேனியின் வாசல் கதவு வரை வந்துவிட்டோம். நான் இந்த பக்கமா போகணும்! என்று சோகமாக சொன்னாள் அவள். எங்கண்ணன் விடாமல், நாங்க அந்த பக்கமா போகனும் என்றான். நான் அவனிடம், நாமளும் டிரிப்ளிகேன் வழியா போய் வெஸ்டு மாம்பலம் போக எதுவும் வழி இல்லையா?னு கேட்டேன். ஒரு முப்பதுகிலோமீட்டர் சுத்திப்போனாலும் பரவாயில்லை!னு சொன்னென்.

அதுக்குள்ள கிளி பறந்து போய்டுத்து. “நீ டெஸ்டு பெயில் ஆனது கூட எனக்கு வருத்தம் இல்லைடா! ஆனா வெளிய வரும்போது ஒரு பிகரோட வந்த பாத்தியா! அதுதான்டா எனக்கு கோவம்!”னு கத்தினான் உடன்பிறப்பு. வடபழனியிலிருந்து வெஸ்டு மாம்பலம் வரைக்கும் மெட்ராஸ் வெயிலில் ‘தண்டி யாத்திரை’ மாதிரி என்னை நடத்தியே கூட்டிக்கொண்டு போய், காலையில் கொடுத்த ஆட்டோ காசை சமன்செய்தான். இதன் பிறகு, “வேலையே கிடைக்காமல் கல்லிடைக்குறிச்சி திண்ணையை தண்டிண்டு இருந்தாலும் இருப்பேனே தவிர, தண்ணி இல்லாத இந்த பொட்டக்காடான மெட்ராஸ் ஊர்ல மட்டும் வேலை பார்க்கமாட்டேன்!”னு ஒரு சபதம் செஞ்சுட்டு ஊருக்கு வந்துட்டேன். இந்த வேலை கிடைக்கலைனாலும் பிற்காலத்தில் வேற ஒரு நல்ல வேலைக்கு பரிக்க்ஷை எழுத இந்த அனுபவம்(அதாவது பரிக்க்ஷை அனுபவம்) உபகாரமா இருந்தது.

பச்சக்கிளியோட அப்பா, எதாவது 'பன்'திண்கற ஒரு அமெரிக்கா மாப்ளைக்கோ(பூனைக்கோ), அல்லது காலங்கார்த்தால ஏழு மணிக்கே 'ஓட்ஸ்' கஞ்சியும் ஒரு வாழைப்பழமும் சாப்டுட்டு, தங்கமணிக்கு டாட்டா! கூட சொல்லாமல், லாப்டாப்பையும் தொங்கவிட்டுண்டு, காலில் கஞ்சியை கொட்டிக்கொண்டது போல 'டுயூப்' ரயிலை பிடிப்பதற்கு ஓடும் ஒரு லண்டன் மாப்ளைக்கோதான் நிச்சயமா பச்சக்கிளியை கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பார்....:(

அம்மாடி வைஷூ குட்டி, நீ எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கனும்!னு இந்த அண்ணா(வரலாறு முக்கியம் அமைச்சரே!!!) ஆசிர்வாதம் பண்ணரேன்மா!....(அவ்வ்வ்வ்வ்வ்......)


இப்படிக்கு,
அண்ணனின் சதியால் கிளியை கோட்டைவிட்ட ‘அப்பாவி’ தக்குடு


குறிப்பு - எழுத்துத்தேர்வுக்குச் செல்லும் வாலிபர்கள் தயவுசெய்து தனியாகவே செல்லவும், அண்ணன் & அக்கா போன்ற அனுகூல சத்ருக்களை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம்.

Friday, April 23, 2010

எழுத்துத் தேர்வு

எங்க ஊர் பக்கமெல்லாம் ஒரு பட்டப்படிப்பு முடிச்சாலே அதுக்கப்புறம் அந்த பையன் வீட்டுல இருக்க முடியாது. அதிகாலையில் நம்ப அம்மா பால் வாங்கப் போகும்போதே, உங்காத்து அம்பிக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியர்து இல்லையோ?? மேற்கொண்டு என்ன பண்ணப்போறான்? அப்படின்னு எதிர்தாத்து மாமி திரியை கிள்ளி சத்தம் இல்லாமல் கில்ட் வெடியை பத்த வைத்துவிடுவார்கள். அதுக்கப்புறம் நாம எங்க நிம்மதியா தூங்க?? காப்பி கலக்கும் போதே, நம்ப வயத்தையும் சேர்த்து கலக்கிவிட்டு விடுவார் அம்மா. இந்த நடைமுறையில் இருந்து நானும் தப்ப முடியவில்லை.

நீங்க இஷ்டப்பட்ட வேலைக்கோ, அல்லது ஒரு சாதாரண கம்பெனி வேலைக்கோ நீங்க போகமுடியாது. அம்புஜா மாமியோட ஓர்படி புள்ளை வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில்(அல்லது மற்ற முன்னணி நாலு கம்பெனியில் எதாவது ஒன்று) வேலை பார்த்தாதான் உங்களை மனுஷஜென்மமாகவே அந்த மாமி மதிப்பா. இதை மீறி அவாளுக்கு தெரியாத எதாவது ஒரு MNC –ல்(For eg Honeywell(தேன்கிணறு))வேலைக்கு நீங்கள் சேர்ந்து விட்டால் அவ்ளோதான் கதை. பாவம் முத்து மாமி புள்ளை! ஏதோ கிணறு வெட்டிக் கொடுக்கிற கம்பெனில வேலைக்கு சேர்ந்துருக்கானாம்! என்பார்கள். புதன் கிழமை வரும் 'இந்து' பேப்பர் வாங்குவதற்கு மட்டும் பெரிய அடிபுடியே நடக்கும், ஏன்னா அன்னிக்கிதான் 'ஆப்பர்சூனிட்டி' இணைப்பும் சேர்ந்து வரும். இரண்டேமுக்கால் ரூபாய் கொடுத்து அந்தப் பேப்பரை வாங்கி நாம பார்த்தா, அதுல ஒரே பல்பு மயமா(நம்ப மங்குனி அமைச்சர் வாங்கினது போக மிச்சம் உள்ளது) இருக்கும். எல்லா வேலைக்கும் குறைந்த பட்சம் மூனுலேந்து ஆறு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் கேட்பார்கள்,அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா நான் ஏன்டா இந்தப் பேப்பரை வாங்கி புறட்டப்போறேன்! என்று நமக்கு தோனும். அதையும் மீறி எதாவது ‘பிரஷ்ஷர்’ ஓப்பனிங் இருந்தாலும் அது B.E,B.Tech,B.Sc அந்த மாதிரி இருக்கும். கணக்கு புள்ளைக்கு வேலை கிடைப்பது/பொண்ணு கிடைப்பது ரெண்டுமே ரொம்ப கஷ்டம்.

ஒரு காலை நேரத்தில் சந்தி எல்லாம் பண்ணி விட்டு, அம்மா சூடாக வார்த்து வச்சுருந்த இட்லியில் ஒரு ஆறு இட்லியை தேங்காய் சட்னியோடு பக்குவமாய் உள்ளே தள்ளிக் கொண்டு இருந்த போது, என்னோட அப்பா, ஒரு குறிப்பிட்ட பக்கத்தை கையில் எடுத்துக் கொண்டு வேகமாக பட்டாசாலைக்கு(டைனிங் ஹால்) வந்தார். Life is calling...... where are you?? னு கிங்பிஷர் சரக்கு விளம்பரம் மாதிரி ஒரு வேலை வாய்ப்பு விளம்பரம் பிரசுரமாகி இருந்தது. விளம்பரத்துக்கு கீழே பார்தால் அது ஒரு முக்கியமான மென்பொருள் நிறுவனத்தின் விளம்பரம். அப்பா அம்மா வெளில போகும்போது என்னமாதிரி சின்னக்குழந்தைகள் எல்லாம் கையை ஆட்டி சொல்லும் ஒரு 2 எழுத்து வார்தையை நாமகரணமாய் கொண்ட கம்பெனியின் மென்பொருள் பிரிவிற்கு ஆள் எடுப்பதற்கான விளம்பரம் அது. இந்த விபரம் அனைத்தும் அப்பா வாசிச்சு சொன்னது, பாதியில் இட்லியை விட்டுட்டு வந்தால் சூடு ஆறிவிடும் என்பதால், எடுத்த காரியத்தை கருமமே கண்ணாக முழுவதுமாக முடித்து விட்டு நிதானமாக வந்து பேப்பரை புரட்டினேன். என் கடமை உணர்ச்சியை கண்டு எங்கம்மா தலையிலடித்துக் கொண்டு போனார்.

முதலில் எழுத்துத்தேர்வு, அதன் பின்பு மூச்சுத் திணறத் திணற யாரெல்லாம் அந்த கம்பெனியில் ப்ரியா(வேலையில்லாமல்)இருக்காளோ, அவாளெல்லாம் நேர்முகத்தேர்வு நடத்துவார்கள் என்று விளாவரியாக விளக்கி இருந்தார்கள். முதலில் நம்முடைய 'பயோடேட்டா' வை அவாளுக்கு மெயிலில் அனுப்பி வைக்கவேண்டும். நம்ப ஜாதகம் அவாளுக்கு மாட்ச் ஆகி இருந்ததுனா, நம்பளை பொண்ணுபார்க்க மன்னிக்கவும், எழுத்துத் தேர்விற்கு அழைப்பார்கள்.

ரிட்டர்ன்டெஸ்டு சென்னையில் வைத்து என்று அந்த விளம்பரத்தில் இருந்தது. அந்த சமயம் எங்க அண்ணா சென்னையில்தான் எதோ ஒரு கேக்ரான்! மோக்ரான்! கம்பெனியில் ப்ளாக் படித்துக்கொண்டே நடுவில் சமயம் கிடைக்கும் போது வேலையும் பார்த்துக்கொண்டிருந்தான். அதுவும் போக எங்க வீட்டில் 'ஆனந்தம்'படத்துல வர மம்முட்டி மாதிரி எங்க அண்ணன். எதுனாலும் பெரியவன்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்! என்று அம்மா, அப்பா ரெண்டுபேரும் சேர்ந்து சொல்லிவிடுவார்கள். அவ்ளோதான் எங்கண்ணனை கையிலையே புடிக்க முடியாது. பயங்கரமா லெவல் காட்டுவான்.(இப்பவும் அவனிடம் கேட்காமல் நான் எதுவும் செய்யமுடியாது). ஒருமாதிரி ரிட்டன்டெஸ்ட் எழுத எனக்கு அழைப்பும் வந்தது. பையை தூக்கிக் கொண்டு சென்னையை நோக்கிப் புறப்பட்டேன்.
மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் என்னை அழைத்துக் கொண்டு போக உடன் பிறப்பு காத்திருந்தது.

அடுத்த நாள் காலையில் அஞ்சு மணிக்கே எனக்கு முழிப்பு வந்துவிட்டது. கசகசனு மேல எல்லாம் ஒரே வியர்வை, காத்தாடி பாட்டுக்கு சுத்திண்டு இருந்தது ஆனா ஒரு பிரயோஜனமும் இல்லை. அடுத்த அதிர்ச்சி எனக்கு காத்துக்கொண்டிருந்தது. ஒரு பிளாஸ்டிக் குடத்தையும்,ஒரு வாளியையும் என்னோட கையில் கொடுத்தான். அடுத்த தெருவில் இருக்கும் குழாயில் போய் நம்ப தண்ணி புடிக்கணும்!னு சொன்னான். எங்க தெரு கோவில் புள்ளையாருக்கு பித்தளை குடத்துல தண்ணி சுமந்துருக்கேனே ஒழிய வீட்ல எல்லாம் 24 மணி நேரமும் தாமிரபரணி குழாயில் களி நடம்புரியும். புடிச்சுண்டு வந்ததுக்கு அப்புறம் ஒரு வாளி தண்ணியை பாத்ரூமுக்குல்ல வச்சுட்டு, இதுல நீ என்ன பண்ணமுடியுமோ அதை எல்லாம் இன்னும் 15 நிமிஷத்துல பண்ணி முடி!னு சொல்லிட்டு போய்ட்டான். அந்தத் தண்ணியில் பட்ட சோப்பில் துணி/உடம்பு ரெண்டுலையும் நுரையே வரவில்லை(இந்த ஊர்ல மட்டும் உப்புல தண்ணியை கலப்பா போலருக்கு! என்று நினைத்துக்கொண்டேன்..). மனமே பொறு!னு சொல்லிட்டு ஒரு மாதிரி குளிக்கும் படலம் முடிந்தது.

ஆட்டோவெல்லாம் வச்சு என்னை அந்த நிறுவனம் இருக்கும் ஜவஹர்லால் நேரு சாலைக்கு கூட்டிண்டு போனான். “அண்ணன் ராமதுரை அழைக்கிறார், அலைகடலென திரண்டு வாரீர்!”னு எல்லா ஊர்லையும் போஸ்டர் அடிச்சு ஒட்டியது போல,உள்ள நுழஞ்சா சுமார் இரண்டாயிரம் பேர் வரிசைல நின்றுகொண்டிருந்தார்கள்(பாவம்! எந்த அம்புஜா மாமியோட பிரஷரோ??). இது எதோ ரயில்வே எக்ஸாம் மாதிரினா இருக்கு!னு நான் வியந்து போனேன். ஊர்ல இருக்கும் நூலகத்திலிருந்து R.S.அகர்வாலோட( நம்ப சோனியா அகர்வாலோட பெரியப்பாதான் அவர் தெரியுமா கொடி??) எழுத்துத் தேர்வு
புக்கெல்லாம் படிச்சுட்டு வந்திருந்தேன். அந்த நிறுவனத்தின் அடையாள அட்டையை மாட்டிண்டு ஒரு நாலு HR தடியன்களும் கூடவே பொறுப்பான நாலு HR பிகர்களும் பிரசவ ஆஸ்பத்திரி மாதிரி அங்கையும், இங்கையுமா உலாத்திக் கொண்டு இருந்தார்கள். பரிட்சை எழுத வந்தவர்கள் எல்லோரும் (என்னைத் தவிர) எதோ மந்திரிச்சுவிட்ட கோழி போல இருந்தார்கள்.

சிறிது நேரத்தில் ஒரு HR மாமா தன் சொம்புகள் புடை சூழ வந்தார். ஒரு பதினாலு நிமிடம், என்னமோ அவருடைய துறையை சேர்ந்தவாதான் அந்த பில்டிங்கையே தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல மைக்கில் பீத்தினார். அதன்பிறகு உணவு உண்ணும் இடத்தில் டேபிளுக்கு 2 பேர் வீதம் நாங்கள் உட்கார வைக்கப் பட்டோம். என்னோட டேபிள்ல இருந்த பையனிடம்(ஆமாம், பையந்தான்), எல்லாம் படிச்சுட்டு வந்துருக்கியா!னு வாஞ்சையாக விசாரித்தேன். அவன் காது செவிடாவன் போல எந்த ரியாக்ஷனுமே பண்ணவில்லை. இந்த ஊர்ல உள்ளவா பேசர்துக்கே பத்து ரூவா கொடுக்கனும் போலருக்கு!னு நினைத்துக் கொண்டேன்.



பரிட்சையோடு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் அடுத்த பதிவில்.........:)

Friday, April 16, 2010

திரட்டிப் பால்

பால்கோவா என்று அழைக்கப்படும் திரட்டிப்பால் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை கொஞ்சம் பார்க்கலாமா??

என்னடா இது பால்கோவா பத்திதான் எல்லாரும் எழுதியாச்சே?னு எல்லாம் சொல்லக்கூடாது, சுப்ரமணியபுரம் படத்துல வரும் 'கண்கள் இரண்டால்' பாட்டு 5000 தடவை நாம ஏற்கனவே கேட்டு இருந்தாலும் 5001-வது தடவை போடும்போதும் ஆர்வத்தோட பாக்கறோம் இல்லையா? அதே மாதிரி திரட்டிபாலை பத்தியும் படிங்கோ எல்லாரும்..:)

தேவையான சாமான்கள் :

பால் - 2 லிட்டர் ( நன்னா திக்கா உள்ள பாலா இருந்தா நல்லது)
ஜீனி - 200- 400 கிராம் வரை(தேவையை பொருத்து உபயோகிக்கலாம், 200 கிராம் மினிமம் போட வேண்டும்)
ஏலக்காய் - பவுடர் செய்தது 2 தேக்கரண்டி (தேவைப்பட்டால் மட்டுமே)

செய்முறை :

பண்ணப்போகும் சாமான் எந்த விக்னமும் இல்லாமல் நல்ல படியாக வரவேண்டும்!னு தொப்பையப்பரை பிரார்தனை பண்ணின்டு காஸ் அடுப்பில் அடிப்பாகம் நன்னா காத்ரமா உள்ள சுத்தமான ஒரு வானலியை அடுப்பில் (சின்ன பர்னர்) வைக்கவும். பாலை அதில் சிந்தாமல் மெதுவாக விட்டுட்டு, 10 நிமிஷம் ஆனதுக்கு அப்பரம் மெதுவாக ஒரு கரண்டியால் கிளர ஆரம்பிக்கவும். நன்னா திரண்டு வந்ததுக்கு அப்பரம் ஜீனியை (தேவைப்பட்டால் கொஞ்சம் ஏலக்காய் பவுடரையும் சேர்த்துக் கொள்ளலாம்)அதில் போட்டு நன்னா கிளரிவிடவும். ஜீனி போட்டதுக்கு அப்பரம் ரொம்ப நேரம் அடுப்புல வச்சுண்டு இருக்காம அதை பக்குவமா (கைல எல்லாம் சுட்டுக்காம) கீழே இறக்கி வைத்து சூடு ஆறிய பிறகு உம்மாச்சி முன்னால் வச்சு ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு(பகவானே! இதை சாப்பட்ரவாளுக்கு ஒன்னும் ஆகாம நீதான் பாத்துக்கனும்). அப்பரம் குட்டி குட்டி கிண்ணத்துல போட்டு சாப்பிட கொடுக்கலாம்.

சில பேருக்கு இப்படி இருந்தா பிடிக்கும்



சில பேருக்கு இப்படித்தான் இருக்கனும்





கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1, திரட்டிப்பால் சர்வ ஜாக்கர்தையாக பண்ண வேண்டிய ஒரு ஸ்வீட் வகை, அதனால் வானலியில் பாலை வச்சுட்டு கடுகு வாங்க போனேன், பெருங்காயம் வாங்க போனேன்னு சில பேர் மாதிரி போனா அப்பரம் திரும்பி வரும் போது பாத்திரம் மட்டும்தான் இருக்கும்....:)
2, பால் நன்னா சூடானதுக்கு அப்பரம் கரண்டியை வச்சு ஒரு இயல்பான வேகத்தில் கிளர வேண்டும். சரியா சொல்லனும்னா இந்த பாட்ல வர சங்கராபரண ராகத்துக்கு தாளம் போடர மாதிரி அந்த வேகம் இருக்கனும். அதே சமயம் பால் நன்னா கெட்டியானதுக்கு அப்பரம் வேகத்தை குறைத்துக் கொள்ளலாம். ஆரம்ப நிலையில் கட்டி தட்டாமல் ஒழுங்கா கிளரவில்லை என்றால் அப்பரம் அந்த வஸ்துவை பால்கோவாவுக்கும் பதிலா 'கல்கோனா'னு தான் எல்லாரும் சொல்லுவா...:)
3, ---யர் மலர்- நு ஒரு பொம்னாட்டிகள் புஸ்தகம் உண்டு, அதுல எல்லா பக்கத்துலையும் சின்ன பெட்டிகளுக்குள் சேலம் ராதிகா, சங்கரன்கோவில் கோமதி போன்ற பெயர்களில் நிறையா பேர் யோசனைகளா அள்ளி விட்டு இருப்பாங்க, உதாரணத்துக்கு // நேத்திக்கு பர்த்துடே கேக் பண்ணும் போது செர்ரி பழம் இல்லைனு கடைசி நிமிஷத்துலதான் தெரிஞ்சது, அப்பரம் ஒரு குட்டி மொளகா வத்தலோட காம்பை எடுத்துட்டு அந்த மொளகா பழத்தையே கேக்குக்கு நடுவில் அலங்காரமா வச்சுட்டேண். அழகா இருக்கு!னு எல்லாரும் பாராட்டியதோடு அல்லாமல், அதையே என்னோட மாமியாருக்கும் கொடுத்ததால் அவங்களும் அடுத்த நாளே ஊருக்கு கிளம்பிவிட்டார்கள், நீங்களும் ட்ரை பண்ணி பாக்கலாமே??//னு அள்ளி விடுவார்கள். அதைமாதிரி யோஜனைகளை எல்லாம் இந்த திரட்டிப்பாலில் முயற்சி செய்து அதை பாழாக்க வேண்டாம். திரட்டிப்பாலுக்கு எந்த அலங்காரமும் வேண்டாம்.
4, மூடி இல்லாத குக்கர்தான் திரட்டிப்பால் செய்ய பெஸ்டு, இல்லைனா உங்க கல்யாணத்துக்கு அல்லது உங்க மாமியார் சீதனமா குடுத்த வெண்கல உருளி ஒசரத்துல பரண்ல இருந்தா அதை உங்க வீட்டு ரங்கமணியின் உதவியுடன் கீழே கொண்டு வரவும்.. குக்கர் பாத்திரத்திலும் சில பிரச்சனை உண்டு, உள்பக்கம் கருக்காத குக்கரா இருக்கனும், புளி, எலுமிச்சை தோடு போட்டு சாதம் வடிச்சு வண்டிமை கலர்ல உள்ள குக்கர் பாத்ரத்துல பண்ணினா அப்பரம் திரட்டிப்பால் யமஸ்வரூபத்தில் இருக்கும்.

திரட்டிப்பாலை பத்தி சொல்லிட்டு பெருமாளை பத்தி சொல்லலைனா அது 'தில்லானா' பாடாமல் முடிச்ச கச்சேரி மாதிரி ஆயிடும் . திரட்டிப்பால்னு சொன்னாலே எனக்கு எங்க ஊர் பெருமாள்தான் நினைவுக்கு வருவார். சித்ரா பெளர்ணமி தேர் திருவிழா கழிஞ்சு சுவாமி நேர தாமிரபரணிக்கு ஆராட்டுக்கு போய்விடுவார். இரவு எட்டு மணி அளவில் பூம்பல்லாக்கில் தாயார் சகிதமாக ஆடி வரும் அழகே அழகு! ஊருக்குள் வரும் ஸ்வாமிக்கு மாமிகள் எல்லாரும் நிவைத்யம் பண்ணர்துக்காக பழம், தாம்பூலத்தோட திரட்டிப்பாலும் பண்ணி கொண்டு வந்துருப்பா, சில மாமிகள் நிவைத்யம் ஆனதுக்கு அப்பரம் யாருக்கும் தரமாட்டா, சில மாமிகள்( நம்ப வல்லியம்மா/ கீதாம்மா மாதிரி) கண்ணா! ராஜப்பா! தக்குடு! இந்தா கோந்தை!னு என்னை தேடி வந்து தருவார்கள்.சில மாமிகள் அம்மா மாதிரி எனக்கு வாய்லயே நேரடியாக ஊட்டியெல்லாம் கூட விட்டுருக்கா, இது மாதிரி பல மாமிகள்/மாமிகளோட அழகான பொண்கள் கையால திரட்டிப்பாலை சாப்பிட்டுக் கொண்டு பெருமாளையும் சேவிச்சுண்டே ஜூனியர் பெருமாள் மாதிரி நானும் கல்லிடை நகர வீதிகளில் உலா வந்ததுதான் நினைவுக்கு வருகிறது.





பி.கு - திரட்டிப்பால் பண்ணிட்டு, ஓ! தக்குடு இல்லையே இதை டேஸ்ட் பண்ணர்துக்கு!!னு வருத்தப்பட வேண்டாம். நான் உங்காத்துக்கு வரும் போது எனக்கு பண்ணி தாங்கோ சரியா???...:)

Saturday, April 10, 2010

கணக்கு! பிணக்கு! சுணக்கு!

பத்தாவது வகுப்பு வரைக்கும் வாழ்க்கை எந்த விதமான போராட்டமும் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. பதினோராவது வகுப்பில் இருந்து தொடங்கியது போராட்டம். (அய்யையோ! லவ்வெல்லாம் இல்லை)ஆறாவது வகுப்பிலிருந்தே நம்ப மனசு கண்ணம்மா! கண்ணம்மா!னு உருகிய முண்டாசுக் கவியிடம் லயித்து விட்டது. அவரது உபாசனை சித்தி பெற்றதாலோ என்னமோ தெரியவில்லை பத்தாம் வகுப்பிற்கு பிறகு கணக்கு பாடம் வில்லனாய் மாறிவிட்டது.

அதுக்காக நான் எங்க அண்ணன் மாதிரி கணக்குல அடிமுட்டாள் எல்லாம் கிடையாது(கீதா பாட்டி வீட்டுல இன்னிக்கி பால் பாயாசம்தான்!). ரூபாய் எண்ணிக்கை சம்பந்தமான எல்லா கணக்கும் ஒழுங்காக வந்தது. ஆனால் இந்த வகை நுண் கணிதம், தொகை நுண் கணிதம்(integeral calculus) போன்ற பகுதிகள் தலை கீழாக நின்னு பாத்தாலும் கொஞ்சம் கூட மண்டைல ஏறவே இல்லை. வாழ்க்கைக்கு சிறிதும் பயன்படாத பகுதிகள் என்று அந்த பகுதிகளை கண்டாலே எனக்கு எரிச்சலும், கோபமுமாய் வரும்(நம்ப மீராஜாஸ்மின் சொல்லுவது போல,இதெல்லாம் எவன்யா கண்டுபுடுச்சது???). எட்டாம்கிளாஸ் படிக்கர காலத்திலேயே எங்கப்பாட்ட நூறு ரூபாய் கட்டு ஒன்னு வாங்கி அதை சிதறாமல்/பதறாமல் எப்படி எண்ணுவது!னு எல்லாம் சுயஆர்வத்துல கற்றுக்கொண்டேன். எங்க அண்ணா ரூபாய் எண்ணும் அழகை பாத்துண்டே இருக்கலாம். அவன் கைல ஒரு அம்பது தாள் உள்ள ஒரு ரூபாய் கட்டை குடுத்து எண்ணச் சொன்னா போதும், நடுல மூனு நோட்டை கீழே விட்டுவிடுவான். எல்லாம் முடிச்சு நாப்பத்தஞ்சு தாள் இருக்கு!னு கரெக்டா தப்பா சொல்லுவான். நல்ல வேளை இப்பொ அவன் வேலை பார்க்கர(அப்படித்தான் சொல்றான்) கம்பெனியில் சம்பளத்தை பாங்க் அக்கவுண்ட்ல வரவு வைக்கிறார்கள், கவர்ல போட்டு குடுத்தா மூனு நாள் ஆகும் அவன் எண்ணி முடிக்க, மேலும் எங்கிட்ட வந்து, ஒரு நாலாயிரம் ரூபாய் எங்ங்ங்ங்ங்கையோ இடிக்குது மாப்ளெ!னு வேற சொல்லுவான்

இவ்ளோவுக்கும் நான் அக்கவுண்டன்சி, காமர்ஸ் ல எல்லாம் 195, 189 மார்க்(200க்கு) வாங்கிவிடுவேன், ஆனால் இந்த எழவு பிடித்த கணக்குதான் எப்போதும் என்னை பார்த்து கண்ணை அடித்து விட்டுப் போய்விடும். பாஸ் ஆகர்துக்குள்ளையே மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கும். ஒருவேளை எனக்கு வாய்த்த வாத்தியார்னால கூட இருக்கலாம். (ராமானுஜத்துக்கு ஒன்னு விட்ட மண்ணியோட, மாமா வழி சொந்தம் அவர்) என்னோட கணக்கு வாத்தியார் ஒரு பெரிய கணக்கு மேதைனே சொல்லலாம்(ஆமா, ஒருத்தர் பேசர்து யாருக்கும் சுத்தமா புரியலைனா அவரு மேதை தானே?). அவர் கேள்வி கேட்டு பதில் சொல்லலைனா அவ்ளோதான், குனியச் சொல்லி கும்மிவிடுவார். தவில் வித்வான் 'ஹரித்வாரமங்கலம்'பழனிவேலுவின் ப்ரதம சிஷ்யர் போல, நம்ம முதுகில் கோடையிடியாய் ஒரு தனியாவர்த்தனக் கச்சேரியே நடத்திவிடுவார். ஒருமுறை அவர் வழக்கம் போல கும்முகையில், என்னோட வாயில அடக்கி வச்சுருந்த ஆரஞ்சு மிட்டாய் வெளியே வந்து மொத்த கிளாஸும் 'கொல்'என்று சிரித்தது. ஆரஞ்சு மிட்டாய் போச்சே!னு எனக்கு ரொம்ப வருத்தம்.

அப்படித்தான் ஒரு நாள் கிளாஸுக்குள்ள நுழஞ்சவுடனே போர்டுல போய் 0நு எழுதினார். என்னடா இது?? நம்ப மார்க்கை எதுக்கு இப்படி பப்ளிக்கா எழுதிக் காட்டறார்னு நான் ஆழ்ந்த சிந்தனைல இருந்தேன். சில வினாடிகளில் அவரே தொடர்ந்தார். கிட்டத்தட்ட ஒரு இருபத்தினாலு ஸ்டெப்பு போட்டு முடிச்சு ஒரு கணக்கு கேள்வில போய் முடித்து விட்டு, கையில் மிச்சம் இருந்த சாக்பீஸ் துண்டை,என் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த காட்டுமன்னார்கோவில்காரன் மீது எரிந்தார். அப்போதான் எங்களுக்கு புரிஞ்சது, தலைவர் பதில்லேந்து ஆரம்பிச்சு ‘ரிவர்ஸ்’ கியர் போட்டு அப்படியே back-ல போய் கேள்வில முடிச்சுருக்கார். எங்களுக்கெல்லாம் கேள்விலேந்து ஆரம்பிச்சு பதில்ல போய் முடிச்சாளே ஒன்னும் விளங்காது, இந்த லக்ஷணத்துல பதில்லேந்து ஆரம்பிச்சு கேள்வியா!னு எனக்கு தலை சுத்தத்தொடங்கியது. கேள்வியின் நாயகனே!னு வாத்தியாரை பார்த்து பாடனும் போல இருந்தது, ஆனால் தவில் கச்சேரி நினைவுக்கு வந்ததால் என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். என்னோட பக்கத்துல உக்காசுண்டு இருந்த காட்டுமன்னார்கோவில்காரன் என்னைவிட கணக்குல படுமோசம், அவன் உடனே ஆத்திரத்துல அந்த கணக்கு வாத்தியாரை ம.....ரு, தயிரு!னு திட்டி தீத்துட்டான்.(no!....no அக்காவை பத்தியெல்லாம் பேசக்கூடாது!னு நான் அவனை அடக்கினேன்))

மத்த எல்லா சப்ஜெக்டுலையும் 170துக்க்கு மேல மார்க் வாங்கிடுவேன், கணக்கு மட்டும் எப்போதும் ஜம்மு காஷ்மீர் தான்(பார்டர்ல பாஸ்- அதை தான் கொஞ்சம் கெளரவமா சொன்னேன்). குவார்டேலிக்கு தான் ராங்கார்டு கொடுப்பார்கள், அதனால் முதல்ல நடந்த இரண்டு மிட்டேர்ம் டெஸ்டுலையும் வந்த மார்க் எல்லாத்தையும் % லேயே வீட்டுல சொல்லுவேன், கணக்கு மட்டும் வந்த மார்க்கையே அப்படியே மொட்டையா சொல்லிருவேன்.(for eg 75 in maths) நூறுக்கா, இருனூறுக்கானு சொல்ல மாட்டேன்.

குவார்டேலிக்கு கையெழுத்து வாங்க கார்டை அப்பாட்ட நீட்டிய போதுதான் என்னுடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறியது. அப்பாவுக்கு கடுமையான கோபம், உங்கண்ணனுக்கு தான் கணக்குனா கச்சு விஷமா கசக்கும், உனக்குமாடா??னு கேட்டார். முதல்ல கொஞ்சம் வருத்தமாதான் இருந்தது, அப்புறம், நம்ப அப்பா, நம்பளை திட்ரார், இதுல வருத்தப்பட என்ன இருக்கு??னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். அவ்வளவு வருத்ததுக்கு நடுவிலும் எங்க அண்ணனையும் சேர்த்து திட்டியதால் எங்கப்பா மேல எனக்கு கோபமே வரலை. பில்கேட்ஸுக்கும் கணக்குதான் வரலையாம்பா!னு பரிதாபமாக முகத்தை வச்சுண்டு சொல்லுவேன்.

இப்படியே ரெண்டு மூனு தடவை கணக்குல கப்பு எல்லாம் வாங்கி +2 வந்தாச்சு. கல்யாணம் ஆகி புக்காதுக்கு போனதுக்கு அப்புறம் சமையலெல்லாம் பண்ணனுமே!னு நிச்சயதார்தம் ஆன ஒரு பொம்னாட்டி திடீர்னு கவலைப்படுவது போல, +2 பொதுத்தேர்வுல நல்ல மார்க் வாங்கனுமே!னு கவலையெல்லம் எனக்கு வந்தது. பைனல் பரிட்சைக்கு முப்பது நாள் முன்பிலிருந்தே, ஒரு வைராக்யத்தோட இந்த தடவை ஜம்முலேந்து, ஒரு மத்யப்பிரதேஷ் வரைக்குமாவது வந்துடனும்!னு சங்கல்பத்தோட கடம் தட்ட ஆரம்பிச்சேன். அம்பாளோட புண்ணியத்துல(TRC மாமா, பக்கத்துல உக்காந்து பரிட்சை எழுதின பொண்ணானு! எல்லாம் கலாய்க்கக்கூடாது) ஒரு 140 மார்க் கணக்குலயும்,200 மார்க் காமர்ஸ்லையும்,189 மார்க் அக்கவுண்டன்சிலயும், இந்தியப் பொருளாதாரம் அந்த சமயம் உலக அளவில் கொஞ்சம் மந்தமாக இருந்ததால் எக்கனாமிக்ஸ்ல ஒரு 160தும் வாங்கினேன்.

“நீ ஒரு நாளும் கணக்குல பாஸாகப் போவது கிடையாது!”னு என்னொட கணக்கு வாத்தியார் பரிபூர்ணமாக ஆசிர்வாதம் பண்ணின முகூர்த்தம், இன்று நான் சொல்லும் பரிந்துரையை நம்பி மில்லியன் கணக்குல டாலரையும், பவுண்டையும் கொட்டி முதலீடு செய்யர்துக்கு அமெரிக்காகாரனும், லண்டன் துரைகளும்(டுபுக்கு அண்ணாச்சி! நான் உங்களை சொல்லவில்லை,நீங்க ‘கிஸான்விகாஸ்’ பத்திரம்னு எனக்கு தெரியாதா??) தயாராக இருக்கிறார்கள். குலதெய்வம் பெருவேம்புடையார் தான் அவாளையெல்லாம் காப்பாற்ற வேண்டும்.


இப்பொழுதும் அந்த கணக்கு வாத்தியார் ‘ரிவர்ஸ் கியரில்’ அடிக்கடி வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

Friday, April 2, 2010

சமையலும் சங்கீதமும்

என்னடா இது?? சக்கரை பொங்கலுக்கும் சங்கராபர்னத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?னு யோசிக்க வேண்டாம். சங்கீதம் & சமையல் இரண்டுமே பல கோணங்களிலும் ஒத்துப் போகக்கூடிய நண்பர்கள்.

சங்கீதத்துக்கும், சமையலுக்கும்தான் உடனடி ரிசல்ட் வந்துவிடும். அருமையான பாடல் தேர்வுடன், அற்புதமான குரல்வளம் உள்ள ஒரு வித்வான் பாடிண்டு இருக்கார்னா, அந்த சபையே நிறைஞ்சு இருக்கும், பல பேர் உக்காச்சுக்கர்துக்கு இடம் இல்லைனா கூட அவ்ளோவா கண்டுகொள்ளமாட்டார்கள். கடைசி வரிசைல ஒரு குட்டியூண்டு இடத்துல கூட அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு கேட்பவர்கள் ஏராளம், உதாரணம் அருணா சாய்ராம் அவர்கள் கச்சேரி. அவருடைய கச்சேரிகளில் இருக்கும் ரசிகர்கள் முகத்தில் ஒரு திருப்தியும், சந்தோஷமும் தாண்டவம் ஆடுவதை நீங்கள் பார்த்து ரசித்ததுண்டா??அதேசமயம் தாளமும் ஸ்ருதியும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டு இருந்ததுன்னா, முதல் வரிசைல அமர்ந்திருக்கும் பெண்மணி," ஓ! கிச்சன்ல காஸை அணைக்காமையே வந்துட்டேன்" என்று சொல்லி(புழுகி)விட்டு மெதுவாக நகர்ந்துவிடுவார்.



சமையல்லையும் அதே மாதிரிதான், சமைத்து வச்சுருக்கர அந்த வஸ்துவை முகரும் அழகிலேயே அதோட ரிசல்டை நாம் தெரிந்து கொள்ளலாம். சாப்பிடுபவருடைய முகத்தை பார்த்தே நாம் புரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிஞ்ச ஒரு மாமாவுக்கு ரசம்னா கொள்ளை பிரியம். ட்ரூர்! ட்ரூர்!னு கையில் வாங்கி உறிஞ்சிவிடுவார். ரசம் அவ்வளவாக சோபிதம் இல்லைனா அந்த மனுஷர் ரொம்ப கடுப்பாகிவிடுவார். சில இடங்களில் தங்கமணிக்கு பயந்து அவர்கள் என்ன ஆக்கிப் போட்டாலும் ஆஹா! அற்புதம்!னு சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சில ரங்கமணிகள்(உண்மையான அப்பாவிகள்) சிக்கிக்கொள்வதுண்டு. எப்படி ஒரு சாமான் நன்னா இருக்கு!னு சொல்லும் போது சந்தோஷமா நாம ஏத்துக்கரோமோ, அதேபோல் குறைகள் சொன்னாலும் ஏத்துக்கொள்ளும் மனப்பக்குவம் சமைப்பவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டும்.

சங்கீதத்தை 'காந்தர்வ வேதம்'னு சொல்லும் வழக்கம் உண்டு. பாடக்கூடிய வித்வான் அந்த பாட்டோட ஒன்றர கலந்து நன்னா லயிச்சு பாடவேண்டும். சங்கீதத்தின் மாதா பிதாவான ஸ்ருதி & தாளம் பிசகாமல் பாடவேண்டும். வித்வான் மோஹன ராகம் பாடரார்னா, அது உண்மையிலேயே மோஹனராகமா இருக்கனும். மஹாராஜபுரம் சந்தானம் அவர்களோட 'குழழூதி மனமெல்லாம்' பாட்டுக்கு தொடக்கத்தில் 'ஒய்யாரக் கண்ணன்'னு ஒரு விருத்தம் வரும். கண்ணை மூடிக் கொண்டு மனம் மயங்கி கேட்டால் அப்படியே கண்ணன் ரூபம் நமக்குத் தெரியும். அதிலும் ‘அந்த செவியிலொரு மகர குண்டலம் ஆட!னு ஒரு வரியில் அந்தக் குண்டலம் ஆடுவது போலவே நமக்கு இருக்கும்.



சமையல் பண்ணக்கூடியவர்கள் அந்த காரியத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். //உன்னை தாளிச்சு கொட்டினேனா இல்லையா?? ஏ! அன்னக்கை! எங்க போனாய்! ஒழுங்கா வெளில வா!னு சில பேர் கடுகு டப்பா, அன்னக்கை கூட எல்லாம் பேசிக் கொள்ளும் அளவுக்கு அதில் ஒன்றிப்போய்விடுவார்கள்( நானெல்லம் நிறைய பேசுவேன்). சின்னச் சின்ன விஷயத்தில் கூட அதீதமான கவனம் எடுத்து செய்வார்கள். ஒரு பதார்த்தம் பண்ணினா அதுக்கு உரிய குணாதிசயங்களோட இருக்க வேண்டும். இல்லைனா எனக்கு தெரிஞ்ச ஒரு பதிவரோட கதையா ஆயிடும். அவரோட வீட்டுக்கு சில பதிவர்களை அழைச்சுட்டு, வந்தவா எல்லாருக்கும் எதோ ஒரு வஸ்துவை சாப்ட கொடுத்து விட்டு, சும்மா இருக்காம கூகுள் பஸ்ல வந்து, " ஸ்வீட் எப்படி இருந்தது?னு கேக்க, சாப்ட அந்த மனுஷர், மைசூர்பாகு நன்னா இருந்தது!னு சொல்ல, 'அய்யையோ! நான் குலோப் ஜாமூன்னா பரிமாறினேன்!னு அந்த அம்மையார் சொல்ல ஒரே காமடியா போச்சு.

சங்கீதம் ரசிகர்களை பொறுத்தும் களை கட்டும், கச்சேரிக்கு வந்தவர்கள் வித்வான் பாடும் 'ஷிரிசக்கரராஜ சிம்ஹாசனேச்வரி' ராகமாலிகையை ரசிக்காமல், நாலாவது வரிசையில் ஆறாவதாக உக்கார்ந்திருக்கும் வைரக்கல் தோடுமாமி கட்டிண்டு வந்திருப்பது அபூர்வாவா? அபர்ணாவா?னு யோசிச்சுக் கொண்டிருந்தால் மூனாவது பாட்டில் மூட்டையை கட்டவேண்டியதுதான். ‘நாதஸ்வர சக்கரவர்த்தி’ வித்வான் ராஜரத்னம் பிள்ளையிடம், நீங்க வாங்கினதுலேயே உயர்ந்த விருதாக எதை கருதுகிறீர்கள்?னு ஒரு சபைல வச்சு கேட்ட போது, 'மைசூர் அரண்மனையில் ஒரு தசரா கலை நிகழ்ச்சியில் தோடி ராகத்தில் ஒரு கஷ்டமான பிருக்காவை நான் வாசித்த போது, பலே!னு தன்னை மறந்து ரசிச்சு சொன்ன பெட்ரமாஸ் லைட்டுக்காரருடைய பாராட்டை!னு பதில் சொன்னாராம். சங்கீத கலைஞரோ, சமையல் கலைஞரோ இருவருக்குமே உரிய அங்கீகாரம் & பாராட்டு மிகவும் அவசியமான ஒரு விஷயம்.

சாப்பிடும் நபர் அந்த பதார்தத்தை நன்றாக ரசித்துப் புசிக்காமல் எதோ திருநெல்வேலி To கொல்லம் வரை போகும் ரயில் வண்டியில் இருக்கும் இன்ஜீனுக்குள் கரி அள்ளிப்போடுவது போல் வாயில் போட்டுக் கொண்டு நடுவில் கொஞ்சம் தண்ணியையும் குடித்துவிட்டு ஜடம் போல செல்பவராக இருந்தால் சமைச்சுப் போட்ட அந்த அம்மாவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும்...:) எப்படி ஒரு திரைப்பாடலில் அந்த இயக்குனர், கதாசிரியர்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர் என்று அனைவரும் ஒரே விதமாக செயல்படும்போது அந்த பாடல் வெற்றி அடைகிறதோ அதே போல் பாடுபவர்,பாட்டை கேட்பவர், சமைப்பவர், சாப்பிடுபவர் என அனைவரும் முழுமையாக ரசித்து செய்யும் போது வாழ்க்கை இனிதாகும்.



குறிப்பு - ராமனையே உயிராக போற்றிய சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையான தியாகராஜ ஸ்வாமிகளுக்கு முன்னால் அவருக்கு அழகாக சமைத்துப் போட்ட அவருடைய தங்கமணிக்குத்தான் 'ஸீதா லக்ஷ்மண பரத ஸத்ருக்ன ஹனுமத் சமேதராய்’ அந்த ராமன் முதலில் காட்சி அளித்தான். அந்த அம்மையாரும் நம்ம கேடி மாதிரி,'ஹை! வடை எனக்குதான்!னு சவுண்டு விட்டதுக்கு அப்புறம்தான் தியாகராஜர் கண்ணை திறந்து பார்த்தார்