Thursday, December 15, 2022

கால்பந்து பைத்தியம் - Qatar FIFA 2022

 

போன மாசம் நவம்பர் 20ம் தேதிலேந்து இங்க தோஹால உலககோப்பை கால்பந்தாட்டம் நடக்கர்து. எனக்கும் கால்பந்துக்கும் ஒரு ஸ்னானப்ராப்தியும் கிடையாது. இங்க இருக்கரவாளுக்கு தெரிஞ்சது Football  எனக்கு தெரிஞ்சது எல்லாம் வெறும் Food balls (குலாப்ஜாமூன், மாலாடு,ரசகுல்லா,பருப்புருண்டை குழம்பு & Etc)  இருந்தாலும் ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’னு இருக்கும் எனக்கு எங்காத்துலையே விஷேஷம்னா சும்மா இருக்க முடியுமா.  இங்க இருக்கரவாளுக்கு கால்பந்துன்னா ஒரே பைத்தியம். இந்த ஊர் பைத்தியங்களையே சமாளிக்கமுடியாதுன்னா உலகத்துல இருக்கர எல்லா ஊர் பைத்தியமும் கடந்த ஒரு மாசமா இங்க தான் கூடி கும்மியடிச்சுண்டு இருக்கா. என்னை தூக்கி ஒரு ரயில்வே ஸ்லேஷன்ல ஒருமாசத்துக்கு ஸ்பெஷல் டூட்டி போட்டுட்டா. 'ரயிவே ஸ்டேஷன்ல என்னடா ஜோலி?'னு எங்க அம்மா போன்ல கேட்டா. ப்ளாட்பாரத்துல நிக்கரவா எல்லாரையும் ரயிலுக்குள்ள ஏத்தி விடனும் ரயிலுக்குள்ள இருக்கரவாளை இது அவா இறங்க வேண்டிய ஸ்டேஷனே இல்லைனு சொன்னாலும் விடாம கீழ இறக்கிவிடனும், எல்லாத்தையும் விட முக்கியமா புதுசா வந்தவாளுக்கு வழி சொல்லனும்னு சொன்னேன். பொதுவா கல்லிடைகுறிச்சிகாராளுக்கு இந்த வழி சொல்லர்து & விலாசம் சொல்லர்து எல்லாம் ரொம்ப பிடிச்ச விஷயம். சுகமா காத்தால தாமிரபரணில ஸ்னானம் பண்ணிட்டு வாசல் திண்ணைல உக்காசுண்டு எங்கேந்து வந்துருக்கேள்? யாராத்துக்கு போரேள்? என்ன ஜோலியா வந்துருக்கேள்?’னு வரிசையா கேள்வி கேக்கர்துன்னா ரொம்ப பிடிக்கும். அதுல இருக்கர சுவாரசியம் வேற எதுல இருக்கு சொல்லுங்கோ!




 விலாசம் சொல்லர்து சாதாரண விஷயம் கிடையாது. வந்து இருக்கும் பாதிபேருக்கு இங்கிலிஷ் தெரியாது பிரன்ஞ் ஜெர்மன் ஜாப்பனிஸ் ஸ்பானிஷ்னு நமக்கு தெரியாத எல்லா பாஷைலையும் பேசுவா. ஒரு பிரஞ்சுக்காரன் போஞ்சூர் போஞ்சூர்னு சொல்லரனே தவிர மேல விஷயம் என்னனே சொல்லமாட்டேன்கரான். நானும் பெண்களூர்ல வெச்சு கத்துண்ட ஓட்டை பிரஞ்சை வச்சு என்னவெல்லாமோ கேட்டாச்சு ஒரு பயனும் இல்லை. மறுபடியும் 'போஞ்சூர்/மூஞ்சூர்'னு வந்து நிக்கரான். கடைசில பாத்தா அவரோட ஆத்துக்காரி அடுத்த ரயில்ல வராளாம் ‘அவாளுக்கு காத்துண்டு நிக்கரேன்’னு சொன்னார். “தங்கமணிக்கு காத்துண்டு இருக்கரவனை தடிபோட்டு கிளப்பினாளும் ஒரு அடி நகரமாட்டான். சொன்ன இடத்துல நிக்கலைனா அப்புறம் என்ன ஆகும்னு அவனுக்கு தெரியும்!”னு சொல்லிட்டு மத்தவாளை போக சொன்னேன். ‘என் இனமடா நீ!’னு அவரை பாத்து சொல்லனும் போல இருந்தது. ஜப்பான்காரனுக்கு பேச ஆரம்பிக்கர்துக்கு முன்னாடி மூனு நமஸ்காரம், பேசும் போது நடுல ரெண்டு நமஸ்காரம் அப்புறம் முடிச்சதுக்கு அப்புறம் மூனு நமஸ்காரம் பண்ணனும். ரொம்ப மரியாதையான மனுஷா. நமக்குதான் பெண்டு கழண்டுரும்.

 

இந்த கூத்து போதாதுனு எனக்கு பேச்சாட்டு துணைக்கு ஒரு இங்கிலிஷ்காரனையும் இதே ஸ்டேஷன்ல போட்டுருக்கா. அப்பிடியே போடர்தா இருந்தாலும் ஒரு லெபனான் லேடியோ இல்லைனா ஸ்பெயின்காரியையோ போட்டா கொஞ்சம் கலகலப்பா இருக்கும் வேலையும்(அதாவது ஸ்டேஷன் வேலை) கொஞ்சம் சுவாரசியமா இருக்கும். ஆம்பிளையும் ஆம்பிளையும் காம்பினேஷன் நன்னா இருக்காதுடா கடன்காரானு எச் ஆர் கிட்ட சொன்னா கேட்டாதானே. அந்த வெள்ளைகாரனுக்கு பதில்சொல்லும்போதெல்லாம் வாய்ல ஒரு பொருவிலங்கா உருண்டையை போட்டுண்டு பேசவேண்டியிருக்கு. இல்லைனா 'பர்டன் பர்டன்'னு சொல்லி கழுத்தை அறுக்கரான்.  நீதான்டாப்பா எனக்கு பெரிய Burdenநு மனசுக்குள்ள சொல்லிப்பேன். ‘ராணி எலிசபத் இப்படி திடீர்னு அல்ப ஆயுசுல போயிட்டாளே உனக்கு எத்தனை நாள் சீதகம்? கோத்ர தாயாதியா?’னு துக்கம் விசாரிச்சேன். அவனும் ‘இப்படி திடீர்னு போவானு யாரும் எதிர்பாக்கலை! என்ன பண்ணமுடியும் எல்லாரும் ஒரு நாள் பகவான்கிட்ட போய்தானே ஆகனும்’னு இங்கிலிஷ்ல சொன்னான். கத்தார்காராளை விட மலையாளத்துகாராளைதான் கைலையே பிடிக்க முடியலை. என்னவோ அவா ஊர்ல எல்லாம் நடக்கரமாதிரி அவர்கள் போடும் சீன் தாங்கமுடியலை. “ஞான் நேற்று ராவுல மெஸ்ஸியை கண்டு! நாளை ரொனால்டொவை காணும்”னு இங்க இருந்து கேரளாவுக்கு போன் போட்டு அவா பண்ணும் அலப்பரைக்கு அளவே இல்லை கேட்டேளா? அதுவும் மலையாள சேச்சிகள் படுத்தரபாடு இருக்கே . ஊர்ல இல்லாத கம்பூனிஷ்டை கட்டிண்டு அழற மாதிரி இந்த சேட்டன்களுக்கு கிரிக்கட்டை விட கால்பந்து பிராந்து (பைத்தியம்) ரொம்ப அதிகம். ஸ்டேஷன்ல உக்காந்துண்டு ஒரு சேட்டன் வாய்ஸ் கால்ல கேரளால இருக்கும் அவரோட ஆத்துக்காரியோட பயங்கர சண்டை “ஞான் இவ்விடே ஒருபாடு பிசி கேட்டோ! ஞனக்கு சம்சாரிக்க இஷ்டமில்லடி! கால் கட்செய்யடி!”னு ஆரம்பிச்சு கத்த ஆரம்பிச்சுட்டார். சிவசிவா ராமராமா! அவரை சமாதானம் பண்ணர்துக்குல்ல போதும் போதும்னு ஆயிடுத்து. ஆத்துக்காரி கிட்ட எதுக்கு தேவையில்லாம சண்டைனு வெள்ளைக்காரன் என்னோட காதுல மெதுவா சொன்னான். சண்டை ஆரம்பிக்கும்போதே சேட்டன் கால் கட்பண்ணிட்டார் அதுக்கு அப்புறம் மனசு சமாதானம் ஆகரவரைக்கும் இங்க கத்தி இருக்கார். சேச்சி மட்டும் நேர்ல நின்னா இவ்ளோ பேச்சு சேட்டனால பேச முடியுமானு கேட்ட உடனே. சூப்பர் ஐடியானு வெள்ளைகாரன் வியந்தான். “வெள்ளைக்கார தம்பதிகளுக்குள்ள சண்டை வந்தா ரெடிகுளஸ்/குடிகுளஸ் என்னத்தையாவது அகராதியில் இல்லாத ரெண்டு கெட்ட வார்த்தையை சசிதரூர் மாதிரி திட்டிட்டு ரூம்ல போய் தனித்தனியா கதவை சாத்திண்டு சரக்கை அடிச்சுட்டு மல்லாக்க படுப்பேள் சண்டையும் சப்புனு முடிஞ்சுடும். ஆனா இந்தியாவுல இருக்கும் ரங்கமணிகள் அப்பிடி கிடையாதுனு சொன்னேன்.




 ஆரம்பத்துல ஒரு போட்டில அர்ஜன்டினாவை ஜெயிச்சுட்டு சவுதிஅரேபியாகாரனுக்கு தலைகால் புடிபடலை. ஒரே கத்தும் கூப்பாடுமா படுத்தி எடுத்துட்டான். தனுர் மாசத்து பஜனை கோஷ்டி மாதிரி எல்லாபயலும் வரும் போதே தாள வாத்தியம் கொட்டு பீப்பி சகிதமா வரான். ரயில்வே ஸ்டேஷன் உள்ள நுழையும் போதே ‘சரணு வேங்கட நாயகா!’னு வாசிக்க ஆரம்ப்பிச்சுருவா. சிலர் வேஷம் போட்டுண்டு வருவா. கிளி மாஞ்சாரோ பாட்டுக்கு ஆடின செட்டு அதே வேஷத்தோட அஹா அஹா!னு வந்துட்டா. இதெல்லாம் பரவாயில்லை ஒரு பிரெஞ்ச்காரன் கஷ்கத்துக்கு நடுல ஒரு சேவலை தூக்கிண்டு வந்துட்டான். கேட்டா போன மேட்ச்ல இந்த சேவல் சகிதமா வந்ததாலதான் எங்க ஊர் போட்டில ஜெயிச்சதுனு சொல்றான். ஒரு பிரெஞ்ச்காரி அப்பிடியே ரெட் வெல்வட் கேக் மாதிரி வந்தா. அடா அடா அடா! மொத்த ஸ்டெஷனும் ஆ!னு வாயை பொளந்துண்டு பாத்தா. ஸ்டேஷன் மாஸ்டர் வராத ரயிலுக்கு கொடி ஆட்ட ஆரம்பிச்சுட்டார். குரேஷியாகாரி மைதாமாவுல பண்ணின பொம்மையாட்டமா வந்தா. நான் டியூட்டில இருந்ததால எதையும் பாக்கலைனு தங்கமணிகிட்ட சொல்லிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்துக்கும் சரி சரினு மாப்பிள்ளையாத்துல சொல்லிட்டு ஜானுவாசம் அன்னிக்கு மைசூர் போண்டாவுக்கு பதிலா வாழக்காய் பஜ்ஜி போட்டு ஏமாத்தர மாதிரி முதல்ல சரக்கு இத்யாதிகள் எல்லாம் உண்டுனு சொல்லிட்டு கடைசி சமயத்துல ‘எங்க அத்திம்பேருக்கு ஹார்ட் ஆப்பிரேஷன் ஆயிருக்கு அதனால தீர்த்தவாரி கிடையாது, மைதானத்துல சுத்தபத்தமா இருங்கோ’னு இந்த ஊர் ராஜா சொல்லிட்டார். அது வேற எல்லா பயல்களுக்கும் செம கடுப்பு. என்ன ஆகுமோ ஏது ஆகுமோ!னு கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா இதுவரைக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் யாவரும் நலம்.

பலவிதமான அழுத்தங்களுக்கு நடுல கத்தார் இந்த போட்டியை  'வளர்ப்புமகன்' கல்யாணம் மாதிரி ஜாம்ஜாம்னு நடத்தரா. எல்லாம் நல்லபடியா செளக்கியமா முடியனும்.

Thursday, October 27, 2022

பயணமும் ஊர் வம்பும் (Part 3)

 

நாம எதுல நிப்பாட்டினோம்? மஞ்சகலர் சுடிதார்.. இல்ல இல்ல இமிக்ரேஷன்ல நிப்பாட்டினோம். இமிக்ரேஷன்ல ரொம்ப நாழியா நின்னுட்டு லக்கேஞ் எடுக்க போனா அங்க அது பத்தாவது தடவையா கன்வேயர் பெல்டுல பிரதக்ஷினம் பண்ணின்டு இருக்கும். ஒருவேளை நமக்கு யோகம் நன்னா இருந்து இமிக்ரேஷன்ல சீக்கரம் முடிச்சு லக்கேஞ்சுக்கு வந்தா நம்ப பெட்டி மட்டும் வரவே வராது . அப்பிடியே வந்தாலும் நாலு பெட்டில கடைசி பெட்டி மட்டும் வராம நம்ப பொறுமையை சோதிக்கும். ஒரு வழியா கடைசி பெட்டியும் வந்து வெளில வந்து மச்சினன் கார்ல ஏறி மாமனாராத்துக்கு ஒரு வழியா போய் சேர்ந்தோம். என்னோட பழைய போஸ்ட்ல சொன்ன மாதிரி எங்க மாமியாராத்து மாடிப்படி பக்கத்துல நின்னு பாத்தாலே எல்லா ஏரோப்ளேனும் எந்த பக்கம் போகர்துன்னு நன்னா தெரியும். இன்னிக்கு கன்னியாகுமரியும் நெல்லையும் கொஞ்சம் லேட்டு போலருக்கேனு கல்லிடைல ரயில் விஷயமா மாமக்கள் சம்பஷனை பண்ணிக்கர மாதிரி இன்னிக்கி துபாய் வண்டி ஏது இன்னும் வரலை? கத்தார் ஏர்வேஸ் காலைலயே போயிட்டானே!னு எங்க மாமியார் சில சமயம் லெவல் காட்டுவா. அதே மாதிரியே ஏர் அரேபியா இறங்கி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆகர்தே? ஏது லேட்டு? பெட்டி வரலையா?னு ஜாரிச்சா. இறங்கர இடத்துல எங்க ஊர் மாமா ஒருத்தரை பாத்தேன் அதான் லேட்டுனு சொன்னேன். உங்க ஊர் மாமாவா? அப்ப நேரம் ஆகத்தான் செய்யும்னு சொல்லிட்டு போயிட்டா.

 

நலம் நலமறிய ஆவல்! மாதிரியான பரஸ்பர சம்பாஷனைகள் எல்லாம் முடிஞ்சது. அன்னிக்கு சாயங்காலமே கல்லிடைக்கு கிளம்பியாச்சு. வழக்கம் போல செல்வம் ஆம்னி பஸ்ல டிக்கெட் போட்டு இருந்தேன். தங்கமணிக்கு பஸ் அவ்ளோதூரம் பிடித்தமில்லை. காத்துவராது தண்ணிவரும்னு கொஞ்ச நேரம் முனகிட்டு அப்புறம் செளக்கியமா செட்டில் ஆயிட்டா. காலையில் கல்லிடை வந்தாச்சு. நாங்கள் ஊருக்கு போன நேரம் சில புண்ணியாத்மாக்கள் ஊர்ல இல்லை. அதனால கொஞ்சம் நிம்மதியா இருந்தது. முக்கியமா தெருக்காத்தான் மாமா & எக்ஸ்ரே மாமி. மச்சினன் பிள்ளைக்கு பாம்பேல பூணல்னு சொல்லிட்டு பாம்பே போயிருந்தாலாம். தெருக்காத்தான் மாமாவுக்கு தெரியாம தெருல யாரும் ..சு கூட போடமுடியாது. காத்தால ஆத்தங்கரைல குளிச்சுட்டு கிழக்க பாத்து திண்னைல உக்காந்தார்னா அவரோட பார்வைலேந்து யாரும் தப்ப முடியாது. யார் யாராத்துக்குள்ள போறா,எங்கேந்து வந்தா,யாரு யாரு கூட பேசறா போன்ற உலக அமைதிக்கு தேவையான அனைத்து சமாசாரங்களுக்கும் மாமா  தான் அத்தாரிட்டி. அவாத்து மாமி புதுசா யாராவது வந்தா அவாளை மேலேந்து கீழ பார்வையாலையே ஒரு எக்ஸ்ரே எடுப்பா. அதோட சோலி முடிஞ்சது. வடிவேல் ஒரு படத்துல சொல்லுவாரே நான் பாத்தாலே பத்திண்டு எரியும்னு அதுக்கு கொஞ்சமும் சளைச்சது இல்லை நம்ப மாமியோட பார்வை. இதுல வேடிக்கை என்னான்னா மாமியோட பார்வைக்கு எல்லாரும் பயந்து நடுங்கிண்டு இருக்கும் போது அந்த மாமி என்னடான்னா காத்தால ரேஷன் கடைக்கு போகும் போது “எதிர்தாப்ல அவதான் வந்தா! ரேஷன் கடைல ஜீனி இல்லைனு சொல்லிட்டான்! போனதே வேஸ்ட்!”னு இன்னோரு மாமியை பாத்து ஆவலாதி சொல்லிண்டு இருப்பா.  ‘செளக்கியமா இருக்கியா’னு போன தடவை கேட்டா. ‘இதுவரைக்கும் செளக்கியம் தான் இதுக்கப்பரம் ஸ்வாமிதான் காப்பாத்தனும்’னு சொல்லிட்டு வந்தேன். நல்லவேளை மாமா & மாமி ரெண்டு பேரும் இல்லாததால கொஞ்சம் நிம்மதியா நடமாடமுடிஞ்சது.




 எங்கையுமே கூட்டிண்டு போகலைனு தங்கமணி எப்போதும் ஆவலாதி வாசிப்பா. அதனால இந்த தடவை ரெஸ்டே இல்லாம திருச்செந்தூர், மதுரை, குலதெய்வம் கோவில், நெல்லையப்பர் கோவில்னு நித்தியம் ஒரு இடம் போயிட்டு வந்தோம். அத்வைதாவும் விஷ்வஜித்தும் பேசி சிரிச்சு விளையாடி பாட்டியை சந்தோஷப்படுத்தினா. ஒரு வாரம் போனதே தெரியலை. போகும் போது சென்னைக்கு தூத்துக்குடில ப்ளைட் ஏறினோம். விஷ்வாவுக்கு ப்ளைட் பிடிக்கலை. அம்மாவை ப்ளைட்ல வரச்சொல்லு நாம செல்வம் பஸ்ல வரலாம்னு கொஞ்சம் மொரண்டு பிடிச்சான். அடுத்த முறை குழந்தேளை காரணம் காட்டி இனிமே தங்கமணி ப்ளைட் புக் பண்ணமுடியாதுனு நினைச்ச போது கொஞ்சம் சந்தோஷமா இருந்தது. அவா எல்லாரையும் சென்னைல கொண்டு போய் விட்டுட்டு இரன்டு நாள் கழிச்சு நான் மட்டும் கல்லிடைக்கு திரும்பி வந்தேன். அம்மாவுக்கு ரொம்ப நாளா கால்முட்டில வலி இருக்கு. அதுக்கு இங்கிலிஷ் வைத்தியம் பாத்தா கொஞ்ச நாள் ஒழுங்கா இருக்கர மாதிரி பாவலா காட்டிட்டு மறுபடியும் பழைய குருடி கதவை திறடினு வந்து நிக்கர்து. இந்த தடவை அதுக்கு எதாவது பண்ணலாம்னு தான் முக்கியமான உத்தேசம். கேரளால போய் ஆயுர்வேத வைத்தியம் பாக்கலாம்னு பாத்தா அம்மாவுக்கு வெளில உள்ள சாப்பாடு எதுவும் வயத்துக்கு ஒத்துக்காது. திருனெல்வெலிக்குள்ள எதுவும் சொல்லிக்கர மாதிரி இல்லை. என்னடா பண்ணர்துன்னு இருந்தப்ப தான் ஆழ்வார்குறிச்சில ஒரு வைத்திய சாலை இருக்குனு கேள்விப்பட்டேன்.

 

அங்க போய் பாத்தேன். நல்ல ரம்மியமான சூழ்னிலை மற்றும் சமையல் இல்லாத சாப்பாடு முறைகள் இருக்கு. அங்க இருந்தவா பாதிக்கு மேல மூட்டுவலி கேஸ் இல்லைனா உடல் எடை பிரச்சனை உள்ளவா. வயசானவானு இல்லை நாற்பது வயசுக்கு குறைவா உள்ளவா கூட சிகிச்சைக்கு வரா. யாரும் இப்ப நடக்கர்தே இல்லை எல்லாத்துக்கும் பைக் பைக்னு வாகனத்துல ஏறினா கடைசில ஆழ்வார்குறிச்சில வந்து அவல் பொறிகடலை சுண்டல்னு சாப்பிட வேண்டிய நிலை வந்துடர்து. அங்க ஒரு சேலத்துகாரர் ‘பத்து பரோட்டா சாதாரணமா சாப்பிடுவேன் இப்ப பத்து நாளா கொத்தமல்லி சாறு தான் காத்தால ஆகாரமா தரா’னு ரொம்ப பாவமா சொல்லிண்டு இருந்தார். ‘இன்னும் பத்து நாள் கொத்தமல்லியோட சேர்த்து இஞ்சி சாறும் சாப்பிட்டாதான் இத்தனை நாளா சாப்பிட்ட பரோட்டாவை சரிகட்டமுடியும்’னு சொல்லிட்டு வந்தேன். ஒரு பெண்களூர்காரருக்கு உடம்பு முழுக்க தேங்காயை அறைச்சு பூசி விட்டுருந்தா இன்னொருத்தருக்கு கொத்தமல்லி பேக் போட்டு விட்டுருந்தா. தக்காளி சட்னியும் வெங்காயசட்னியும் மட்டும் தான் பாக்கி அதுவும் அனேகமா மரத்துக்கு அந்த பக்கமா இருப்பாளோனு கொஞ்சம் சம்சியமா இருந்தது. இட்லி பேக் உண்டானு யாரும் கேக்காதீங்கோ அதுக்கு பதிலா ஆட்களையே இட்லி மாதிரி ஆவில வேகவச்சு பளபளனு ஆக்கரா.

 

நல்லபடியா எல்லாம் முடிச்சு போன சமத்து போல தோஹாவுக்கு திரும்பி வந்தாச்சு.

Thursday, September 22, 2022

பயணமும் ஊர் வம்பும் (Part 2)

 

“எழுந்திரிங்கோ! எழுந்திரிங்கோ! ஊர் வந்தாச்சு!”னு தங்கமணி பின்சீட்லேந்து தட்டினா. உண்மையாவே ஊர் வந்தாச்சு  போலருக்குனு கண்ணு முழிச்சு பாத்தா இந்தியாவுக்கு உள்ள தான் ப்ளைட் நுழைஞ்சுருக்கு. அதுக்குள்ள எழுப்பியாச்சு. தங்கமணிக்கு தூக்கம் வரலைனா பக்கத்துல இருக்கும் என்னையும் தூங்கவிடமாட்டா. ‘எங்கேந்துதான் தூக்கம் வருமோ? அதான் மூனுமணி நேரம் தூங்கியாச்சே போதும்! என்னோட பேசிண்டு வாங்கோ’னு சொன்னா. பகவத்கீதா பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?னு ஆரம்பிச்சா. எனக்கு எங்க தெருல இருக்கும் டாக்டராத்து கீதாதான் தெரியும் அதனால நீயே சொல்லுனு சொன்னேன். ‘ஒருத்தர் இருக்கார் அவருக்கு பகவத் கீதால இருக்கும் எல்லா ஸ்லோகமும் மனப்பாடமா தெரியும். எல்லா அத்தியாயத்திலையும் அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது, நீங்க ஸ்லோகம் சொன்னா அவர் அதுக்கு அர்த்தம் சொல்லுவார், நீங்க அர்த்தம் சொன்னா அதுக்கு உண்டான ஸ்லோகத்தை சொல்லுவார்.கின்னஸ்லேந்து வந்து அவரோட ஞாபகசக்தியை சோதிச்சு பாத்துட்டு உலக சாதனையாளர்னு சர்டிபிகேட் கொடுத்து கெளரவம் பண்ணியிருக்கானா பாருங்கோளேன்’னு சொல்லிண்டே வந்தா. நானும் அரைதூக்கத்துல இருக்கர்தை கண்டுபிடிச்சுடாம இருக்கனுமேனு ‘ம்ம்’ கொட்டிண்டே வந்தேன். ‘ஆனா இதுல ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமோ’னு தங்கமணிமறுபடியும் ஆரம்பிக்கும்போது ‘நான் சொல்லட்டுமா’னு கேட்டேன். சந்தேகத்தோட ‘சொல்லுங்கோ!’னு சொன்னா. ‘அந்த பகவத்கீதா மாமா கல்யாணமே பண்ணிக்காத கட்டைபிரம்மச்சாரி, அவருக்கு குழந்தை/குட்டி எதுவுமே கிடையாது கரெக்டா?’னு கேட்டுட்டு தங்கமணியை பாத்தேன். மேடத்துக்கு பயங்கர ஆச்சரியம் ‘எப்பிடி கரெக்டா சொன்னேள்? உங்களுக்கு ஏற்கனவே அவரை பத்தி தெரியுமா?’னு கேட்டா.’அதெல்லாம் ஒன்னும் இல்லை’னு நான் சொன்னேன். ‘பொய் சொல்லாதீங்கோ! எதாவது நியூஸ்ல படிச்சுட்டு எப்பொதும் போல கமுக்கமா என்கிட்ட வந்து கதையளக்காதீங்கோ!’னு சொன்னா.

 

‘எங்க ஊர் வாய்க்கால் மேல சத்தியமா அவர் யாருன்னே எனக்கு தெரியாது’னு நான் சொன்னேன். ‘அப்ப எப்பிடி கரெக்டா சொன்னேள் சொல்லுங்கோ!’னு தங்கமணி விடவேயில்லை. ‘எல்லாம் ஒரு அனுமானம் தான், அவருக்கு மட்டும் கல்யாணம்னு ஒன்னு ஆகி தங்கமணி வந்துருந்தாங்கன்னா அவங்கள சமாளிக்கவே அவருக்கு ஒரு ஆயுசு பத்தாது, அப்புறம் எங்கேந்து விபூதி யோகம், ராஜயோகம் எல்லாம் மனப்பாடம் பண்ண, நேரா பதினெட்டாவது யோகமான மோக்ஷ யோகம் தான், புள்ளைகுட்டியும் இருந்தா அவ்வளவு தான் ஜோலி முடிஞ்சது. அதனால தான் அவர் சிங்கிள் சிங்கமா இருக்கனும்னு யூகிச்சேன்’னு சொல்லிட்டு பக்கத்துல பாத்தா தங்கமணி அந்த பக்கமா திரும்பிண்டு ‘கொஞ்ச நேரம் நானும் தூங்கரேன் நீங்களும் தூங்குங்கோ’னு சொல்லிட்டா. நாம நியாய தர்மத்தொட பேசினா பதிலே வராது. கடைசியா பைலட் மாமா “எல்லாரும் சீட்டை கெட்டியா பிடிச்சுக்கோங்கோ! நாங்க ப்ளைட்டை கீழ இறக்கப் போறோம்னு சொல்லிட்டார். எல்லா குழந்தேளும் வானத்துல வண்டி பறந்துண்டு இருக்கும் போது ஒன்னும் தூங்காது. நை நைனு அழுதுண்டே இருக்கும் இல்லைனா முழு அகலத்துக்கு கண்ணை முழிச்சுன்டு படம் பாத்துண்டே வரும் ஆனா ப்ளைட் கீழ இறங்கும் சமயம் சொல்லி வச்ச மாதிரி எல்லாம் விழுந்து விழுந்து தூங்கும். மேல வச்ச பெட்டியை நாம தட்டுத்தடுமாறி தேடிண்டு இருக்கும் போது “பையன தூக்குங்கோ! தூங்கரான் பாருங்கோ!”னு தங்கமணி நம்பளை பிடுங்க ஆரம்பிச்சுடுவா.   




 

இந்த இமிக்ரேஷனுக்கும் லக்கெஜுக்கும் எப்பொதும் ஏழாம் பொருத்தம் தான். நாம போயி இமிக்ரேஷன்ல நிக்கும் போது தான் லண்டன், ஜெர்மனி, சவுத் ஆப்பிரிக்கானு எல்லா ப்ளைட்டும் வந்துடும். எல்லாரும் போய் இமிக்ரேஷன்ல போய் மொத்தமா நிக்கும் போது திருப்பதி தேவஸ்தானத்துல பிரம்மோத்ஸவ தரிசனத்துக்கு நிக்கர மாதிரியே இருக்கும். அதுலையும் எந்த வரிசைல போய் நிக்கர்துன்னு ரெண்டு நிமிஷம் யோசிச்சு ஒரு கட்டம் போட்ட சட்டை அணிந்த சுப்பிரமணியம் கவுண்டர் வரிசையை தேர்ந்தெடுத்து  நிக்க ஆரம்பிச்சு  ‘அப்பாடா’னு நாம பெருமூச்சு விடும்போது சொல்லிவச்ச மாதிரி நம்ப வரிசை நகரவே நகராது. “பெரிய புத்திசாலி மாதிரி இந்த வரிசைக்கு வந்தேள், நமக்கு அப்புறம் வந்த மஞ்ச கலர் சுடிதார் பேமிலி எல்லாம் பக்கத்து வரிசைல நகந்து போயாச்சு”னு தங்கமணி சொல்லும்போது நம்ம வரிசை இன்னும் நகரலையேனு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், ‘எந்த மஞ்ச கலர் சுடிதாரை சொல்லரா நாமா பாக்கவே இல்லையே’னு கொஞ்சம் வருத்தமா ‘வடை போச்சே!’ வடிவேல் மன நிலைல இருப்போம். ‘என்ன பண்ண சொல்லு நான் எடுக்கர முக்கியமான முடிவுகள் எல்லாமே சொதப்பலாதான் இருக்கு. கல்யாணத்துக்கு பொருத்தம் பாக்கும் போது கூட’னு நாம ப்ளோவா பேசும் போது ‘வரிசை நகந்தாச்சு முன்னாடி போங்கோ’னு பேசர்தை கவனிக்காத மாதிரியே முகத்தை வச்சுண்டு தங்கமணி ஆட்டையை கலைச்சு விட்டுடுவா. கவுண்டர்ல போய் நின்னதும்...... (பயணம் தொடரும்)

Thursday, August 25, 2022

பயணமும் ஊர் வம்பும்

 

போன வருஷம் மச்சினன் கல்யாண கதையை வச்சு போஸ்ட் எழுதினது அதுக்கு அப்புறம் ‘கப்சிப்’ காராவடை ஆயிடுத்து. ஆபிஸ்லையும் ஜோலி ஜாஸ்தி ஆயிடுத்து. பத்து ஒட்டகம் மேய்ச்சுண்டு இருந்தவனை முப்பது ஒட்டகம் மேய்க்க சொன்னா போஸ்ட் எங்கேந்து எழுத முடியும். சமுத்ரத்துல அலை ஓஞ்சதுக்கு அப்புறம் ஸ்னானம் பண்ண முடியுமா அதனால குலதெய்வம் பெருவேம்புடையார் மேல பாரத்தை போட்டு இந்த வருஷ ஊருக்கு போன வம்பை கொஞ்சம் அளக்கலாம். ஜூலை முழுசும் லீவு கிடைச்சது. கடைசி ரெண்டு வருஷமா கொராணா புண்ணியத்துல ஒரு பயலும் ஊருக்கு போகாததால இந்த வருஷம் ஜூன் கடைசி வாரத்துல இருந்தே எல்லாரும் புள்ளைகுட்டிகளை கூட்டிண்டு ஊருக்கு கிளம்ப ஆரம்பிச்சுட்டா. ஏர்லைன்ஸ்காரனும் அவனோட பங்குக்கு கடைசி ரெண்டு வருஷத்துல நாங்க வாங்காத டிக்கெட் பணத்தையும் சேர்த்து இந்தவருஷம் உருவர்துக்கு ப்ளான் போட்டுட்டான். பல்லாவரத்துலேந்து  குரோம்பேட்டை போகும் M52 பஸ் மாதிரி இருக்கும் இன்டிகோ ஏரோப்ளேன்லையே டிக்கெட் போடனும்னா காரை அடகு வச்சாதான் முடியும் அப்பிடிங்கர அளவுக்கு கிராக்கி. சரி ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்ல சகாய விலைக்கு போகலாம்னா நடுவானத்துல பெட்ரொல் இல்லாம நின்னுருமோனு பயம். ஏர் அரேபியால டிக்கெட் போட்டு ஷார்ஜா வழியா போகலாம்னு தோஹா ஏர்போர்ட் போனா GRT வளையல்மேளா மாதிரி ஒருவண்டி கூட்டம்.

 

அனேகமா எல்லாருமே இந்த வருஷம் கனெக்டிங் ப்ளைட் கோஷ்டி தான் நினைக்கறேன். தனியா போனா பிரச்சனையில்லை பிள்ளைகுட்டிகளை கூட்டிண்டு கனெக்டிங் ப்ளைட் ரூட் கொஞ்சம் ரிஸ்க். எதாவது ப்ளைட் லேட் ஆனாலோ நடுவழில கேன்சல் ஆனாலோ தங்கமணிகிட்ட திட்டு வாங்கும் தைரியம் இருந்தால் துணிந்து இறங்கலாம்.செக்கிங்-கிக்கிங் எல்லாம் முடிஞ்சு உள்ள போனா போர்டிங் ஆரம்பிக்கவே இல்லை. நாளைக்கு கல்யாணத்துக்கு இன்னிக்கே மண்டபத்துக்கு போய் நின்னவா மாதிரி நாங்க திருதிருனு முழிச்சுண்டு இருந்தோம். கேட்ல நிக்கர தடித்தாண்டவராயன்  நிச்சலனமா முகத்தை வச்சுண்டு மொளுக்கா நிக்கரான். ஆஜானுபாகுவா ஒரு மாமா முதுகுபையை போட்டுண்டு மெதுவா என்பக்கத்துல வந்து ‘என்ன ஆச்சாம்?’னு ஜாரிச்சார். நானும் "பாவம் காத்தால வரைக்கும் நன்னா தான் இருந்தாராம் அவாத்து மாமி கையால காபி குடிச்சதுக்கு அப்புறம் பேச்சுமூச்சு இல்லையாம்”னு சொல்லர தொணில “கேட் திறக்கர சாவியை காணுமாம்! கதவை உடைக்கலாமானு அவாளுக்குள்ள பேசிண்டு இருக்கா. உங்களை மாதிரி ஸ்ட்ராங்கானவாளா நாலு பேர் வேணுமாம்”னு நான் சிரிக்காம சொல்லிண்டு இருந்ததை அவரும் ரொம்ப சீரியஸா கேட்டுண்டு இருந்தார். ‘கனெக்டிங் ப்ளைட் வெயிட் பண்ணுமா? வெயிட் பண்ணுமா?’னு ஒரு தங்கமணி அவாளோட ரங்கமணியை பிடிச்சு உலுப்பிண்டு இருந்தா. ‘நானும் கேட் வரைக்கும் உன்னோட தானே வந்தேன் எனக்கு மட்டும் எப்பிடி தெரியும்’னு ரங்கமணி மொனகிண்டு இருந்தார். ‘கேள்விகேக்கர்துக்குதானே உங்க மாமனார் பெத்து அனுப்பியிருக்கார்’னு வாய் வரைக்கும் வந்துருத்து அப்புறம் என்னோட மாமானார் பெத்து அனுப்பின ஆள் பக்கத்துல இருக்கர ஞாபகம் வந்ததும் உசாராயிட்டேன்.




ஒருவழியா ப்ளைட் வந்து எல்லாரும் உள்ள ஏறி உக்காந்தாச்சு. பைலட் மாமா வழக்கம் போல "வரவழில கொஞ்சம் நாழியாயிருத்து! கவலையேபடாதீங்கோ! அரபிக்கடல் தாண்டியாச்சுன்னா அப்புறம் பைபாஸ் ரோடுதான்! சல்லுனு போய் கனெக்டிங் வண்டியை பிடிச்சுடலாம்”னு பொருவிலங்கா உருண்டையை வாய்ல போட்டுண்டு பேசும் இங்கிலீஸ்ல சொல்லிண்டு இருந்தார். ஏர் அரேபியால ஏறி உக்காந்தாச்சு. இந்த வண்டில முன்னாடியே புக் பண்ணி வச்சவாளுக்கு மட்டும் தான் சாப்பாடு தருவா மத்தவா கூப்பாடு போட்டுண்டு இருக்க வேண்டியது தான். தலையை எண்ணி இட்லி வார்த்த மாதிரி கணக்கா இருக்கா. பைசா குடுத்து கேட்டாலும் ஒன்னும் கிட்டாது.மசாலா தோசையும் சுலைமானி டீயும் குடிச்சு முடிக்கர்துக்குள்ள ஷார்ஜா வந்துடுத்து. ஏர்போர்டுக்குள்ள போனா திருனெல்வேலி ஆர் எம் கே வி கடைல நவராத்ரி சமயம் புடவை செக்ஷன்ல நுழைஞ்ச மாதிரி ஒரே கூட்டம். “எதை எடுத்தாலும் பத்து ரூபா! எதை எடுத்தாலும் பத்து ரூபா!” ராகத்துல மாடிப்படி பக்கத்துல ஒரு ஏர்போர்ட் ஆசாமி “சென்னை கொச்சி கல்கத்தா!”னு கூவின்டுண்டு இருந்தார். மறுபடியும் அந்த ஊர் ஏர்போர்ட் செக்யூரிட்டி செக்ல வேட்டியை உதறி காமிச்சுட்டு கனெக்டிங் ப்ளைட்டை பிடிக்க ஓட்டமும் நடையுமா போனோம். இருக்கர அவசரத்துல அந்த ஏர்போர்ட் ஆசாமி கல்கத்தா ப்ளைட்ல ஏத்திவிடாம இருக்கனுமேனு கவலையா இருந்தது. காத்தால கல்கத்தா வந்தா அப்புறம் “திண்டுக்கல் ராஸ்தா குஷ் குஷ்!”னு ஜப்பான் துணைமுதல்வர் போனவருஷம் பேசின மாதிரி பெங்காலிதான் பேசனும். என்னமோ எல்லாம் என்கிட்ட கேட்டு தான் பண்ணர மாதிரி தங்கமணி “பாத்ரூம் போயிட்டு வரட்டுமா"னு இழுத்தா. வேண்டாம்னு சொன்னாலும் கேக்கபோகர்து இல்லை இருந்தாலும் எல்லா தங்கமணிகளும் சம்ப்ரதாயத்துக்கு  ஒரு தடவை கேட்பார்கள். நல்லவேளை ஒரு ஏர்போர்ட் ஆசாமி ஆபத்பாந்தவனா வந்து “சென்னை வண்டி கிளம்பபோகர்து! பாத்ரூம் போனேள்னா வண்டியை விட்டுட்டு உக்காந்துண்டு இருக்கவேண்டியது தான்”னு பயம்குடுத்தினதால நேர வண்டில போய் உக்காந்துட்டோம். அடுத்த நிமிஷமே பைலட் மாமா “எல்லாரும் வந்தாச்சு கதவை சாத்து ராசாத்தி!”னு ஏர்ஹோஸ்டஸ் பொண்ணு கிட்ட மைக்ல சொல்லிட்டார்.

 

நல்ல மிருதுவான பரோட்டாவும் கொண்டைகடலை குருமாவும் முழுங்கிட்டு ஆழ் நிலை தியானத்துல  இருந்தபோது “எழுந்திரிங்கோ! எழுந்திரிங்கோ! ஊர் வந்தாச்சு!”னு தங்கமணி பின்சீட்லேந்து தட்டினா..... (பயணம் தொடரும்)

Tuesday, August 17, 2021

ஊர்ல கல்யாணம்..... (Part 3)

 Part 2  படிச்சாச்சா


தங்கமணி மேக்கப் போட்டு முடிச்சு அவளோட சேர்ந்து நாம போய் டிபன் சாப்பிடலாம்னு இருந்தா அதுக்குள்ள மச்சினனுக்கு புள்ளையே பொறந்துடும் அதனால கொழந்தகுட்டியோட சேர்ந்து நேரா டைனிங் ஹால் போயிட்டு காபி வித் பஜ்ஜி, போண்டா, காசி அல்வா மற்றும் சிலபல அயிட்டங்களை உள்ள தள்ளிட்டு கமுக்கமா ரூமுக்கு போயிட்டேன். “கீழ போய் மாப்பிள்ளை ரூம்லேந்து ஊக்குபின் வாங்கிண்டு வாங்கோ”னு அனுப்பிவிட்டுட்டா. ‘ஒரு அதிகாரியை ஊக்கு வாங்கிண்டு வா! பாக்கு வாங்கிண்டு வா!னு அனுப்பரையே நியாயமா’னு கேட்டா அவள் காதுலையே வாங்காம ‘நீங்க இன்னும் போலையா?’னு கேட்டா. தொலையர்து போ! வாங்கிண்டு வருவோம்னு அங்க போனா, எங்க மாமானார் ஒரு பக்கம் ஜிப்பாவுக்குள்ள மண்டையை விட்டுண்டு வெளில வராமா தவிச்சுண்டு இருக்கார், இன்னொரு பக்கம் மாமியாருக்கும் அவாளோட தோழிகளுக்கும் நிக்க வச்சு ‘ஏஷியன் பெயிண்ட்ஸ்’ வால்பட்டி வச்சு “சுவத்துக்கே லாமினேஷன் பண்ணி பாத்துருக்கேளா”னு கேக்காம ஒரு பியூட்டிஷியன் அக்கா எல்லாரோட முகத்துக்கும் வெள்ளை அடிச்சுண்டு இருந்தா. மேக்கப்புக்கு அப்புறம் ஒருத்தரையும் அடையாளமே தெரியலை. மாப்பிள்ளை அவன் பங்குக்கு அவனோட அக்காகாரி வாங்கி குடுத்த பெர்பியூமை சாம்பிரானி புகை மாதிரி உடம்பு பூரா அடிச்சிண்டு இருந்தான். அந்த ரூம்ல அதுக்கப்புறம் யாரும் பெர்பியூமே போடவேண்டாம் அவ்ளோ புகை. இதுக்கு நடுல அந்த பியூட்டிஷியன் என்னோட மோவாக்கட்டையை பிடிச்சுண்டு எனக்கும் வெள்ளையடிக்க பிரெஷ்ஷோட வந்துட்டா. ‘என்னோட சொந்த கல்யாணத்துக்கே ஸ்பின்ஸ் பவுடரும் ஒரு சீப்பும் தான் கொண்டு வந்தேன் நாங்க எல்லாம் born beauty’நு சொல்லிட்டு அவாள்டேந்து தப்பி பொழச்சு ஓடி வரர்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. கல்யாணப்பொண்ணு ரெடியாகி வெளில வந்துடுத்து ஆனா என்னோட தங்கமணியும் மாமியாரும் மெக்கப் முடிஞ்சு வெளில வந்தபாடா இல்லை. “மாமா! நீங்களாவது சொல்லகூடாதா”னு என்னோட மாமனார்கிட்ட சொன்னா அவர் மாமியோட மேக்கப்புல அடையாளம் தெரியாம வேற எதோ மாமிகிட்ட போய் ‘இன்னும் எவ்ளோ நேரம்மா ஆகும்’னு கேட்டுண்டு இருந்தார். ஒரு வழியா எல்லாரும் மேடைக்கு வந்து ஆடி, பாடி, ஓடி எல்லாம் பண்ணினா. திடீர்னு எங்க மாமனார் அவரோட ஆத்துக்காரி கையை புடிச்சுண்டு ஆட ஆரம்பிச்சுட்டார். அந்த மனுஷன் கவனிக்காம வேற யாரோட கையையாவது மறுபடியும் புடிச்சுண்டு ஆடாம இருக்கனுமேனு எனக்கு கவலையா இருந்தது. ‘கல்யாணம் யாருக்கு’னு தெரியாம என்னோட மச்சினன் திருதிருனு முழிச்சுண்டு இருந்தான்.

 

ராத்திரி சாப்பாடும் ரொம்ப நன்னா இருந்தது. ‘கல்யாணத்துக்கு வந்ததுக்கு உங்கப்பா எட்டுமுழம் வேட்டியை குடுத்துட்டு ஆச்சுனு ஆக்கிட்டார், வந்த செலவை சாப்பிட்டுதான் சரிகட்டணும்’னு சொல்லிண்டே ‘பேபிக்கார்ன்’ காரக்கறி, பொன்னிறமா மெல்லிசான நெய்தோசையை சாப்பிட்டேன். காய்ஞ்சமாடு கம்புல பாய்ஞ்சமாதிரி ரவுண்ட் கட்டி அடிச்சாச்சு. அடுத்த நாள் காத்தால சீக்கரமே முகூர்த்தம், ‘வழக்கம் போல விடியவிடிய புடவை கட்டிண்டு இருக்காதே! பொண்ணு பொறுமையா இருந்தாலும் உன் தம்பி காத்துண்டு இருக்கமாட்டான். படக்குனு எடுத்து தாலியை கட்டிட்டு நாலு முடிச்சு போட்டாலும் போடுவான் அதனால மரியாதையை காப்பாத்திக்கோ’னு தங்கமணிட்ட சொல்லிண்டு இருந்தேன். மறு நாளும் கதவைதட்டி நாலு மணிக்கே அந்த மாமா காப்பியை குடுத்தார். ‘நீ என்னிக்காவது இப்படி தந்திருக்கையாடி?’னு கேட்டதுக்கு “திரும்பி தோஹா போகும் போது அந்த மாமாவையே கையோட கூட்டிண்டு போங்கோ! நித்யம் காப்பி போட்டுதருவார்”னு சொல்லிட்டா. வழக்கம்போல பொண்ணு ரெடி, “அத்திம்பேர்! அக்கா ரெடியா?”னு அந்த பொண்ணு பாவமா கேட்டுது. “ரெடி ஆயிண்டே இருக்கா! ‘எங்க திரும்பினாலும் ஷஷ்டயப்த பூர்த்தி சதாபிஷேகம் டிக்கெட்டா இருக்காளே, கல்யாணத்துக்கு உன்னோட ஒன்னுவிட்ட மாமா பொண்ணு ஒன்னு விட்ட அத்தை பொண்னெல்லாம் வரலையா? வந்துருந்தா மண்டபம் கொஞ்சம் கலர்புல்லா இருந்துருக்கும்’னு தயாள சிந்தனையோட சொல்லிண்டு இருக்கும் போதே, “இவனுக்கு ஆய் வருதாம்! போய் அலம்பி விடுங்கோ! நீங்கதான் அலம்பனுமாம்’னு தங்கமணி சொல்லிட்டு போயிட்டா. ‘யார் அலம்பினா என்ன? “நான் மட்டும் என்ன இங்கு நல்ல முறையில் ஆய் அலம்பித்தரப்படும்னு போர்டுமாட்டிண்டா உக்காந்துண்டு இருக்கேன்”னு சொல்லிண்டே போய் விஷ்வஜித்துக்கு அலம்பிட்டு வெளில வந்தா அத்வைதாவும் ‘அப்பா ஆய்!’னு நிக்கரா. “மண்டபத்துல இன்னும் யாரோட புள்ளகுட்டிக்காவது ஆய் அலம்பனுமா? இப்பவே வந்து லைண்ல நில்லுங்கோனு!”னு புலம்பிண்டே வெளில வந்தேன், ‘இந்த மொகரகட்டைக்கு ஒன்னுவிட்ட மாமா பொண்ணு கேக்கர்து”னு தங்கமணி வஞ்சுண்டு இருக்கா.  ‘இப்படி குறுகின மனசு இருந்தா கொராணா மூனாவது அலை ஏன் வராது’னு மனசுல நினைசுண்டேன். நானும் ஒரு சந்தனகலர் ஜிப்பா & மறுபடியும் ஆய் அலம்பர்துக்கு அழைப்பு வந்தாலும் வரலாம் அப்பிடிங்கர்தால மடிச்சு கட்டிண்டு போகர்துக்கு தோதா ஒரு ஜரிகை வேஷ்டியை கட்டிண்டு மண்டபத்து ஜோதில ஐக்கியம் ஆகிட்டேன். தாலி கட்டும் போது பொண்ணோட அம்மாவும் அப்பாவும் அழவே இல்லை திடீர்னு பாத்தா தங்கமணியோட பெரியப்பா ரெண்டுபேரும் அழுதுண்டு இருக்கா. ‘இந்த சீன்ல சம்பந்தமே இல்லாம இவா ஏன் அழுதுண்டு இருக்கா’னு வீடியோகாரனுக்கு ஒரே குழப்பம். அப்புறம் மாப்பிள்ளையும் பொண்ணும் அக்கா அத்திம்பேர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கும் போது அக்காகாரி “நிம்மதியா சந்தோஷமா நன்னா செளக்கியமா இருக்கனும்”னு ஆசிர்வாதம் பண்ணினா. ‘கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நிம்மதியா இரு!சந்தோஷமா இரு!னு ஆசிர்வாதம் பண்ராளே! கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதைதான்’னு நினைச்சுண்டேன். ‘நன்னா பொறுமையா இரு! எது சொன்னாலும் சரிம்மானு சொல்லு! அவளே தப்புபண்ணினாலும் சாரிம்மானு சொல்லு ஓஹோனு இருக்கலாம்!’னு மச்சினனுக்கு ஸ்பெஷலா ஆசிர்வாதம் பண்ணினேன். ‘பொண்ணு பாக்கர்துக்கு பேசர்துக்கு நல்ல சாதுவா இருக்கால்லியா’னு எங்க மாமியார் என்கிட்ட தனியா வந்து மெதுவா கேட்டா. ‘உள்ள வரும்போது எல்லாரும் பாக்க சாதுவாதான் இருப்பா போகபோக தான் லெக்ஷ்மியா துர்காவானு தெரியும்’னு அவாளுக்கு தைரியம் சொன்னேன். “நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் மாப்ளே”னு சொல்லிட்டு போயிட்டா.



 கல்யாணம் கழிஞ்சு கட்டுச்சாதக்கூடையை வாங்கிண்டு நேரா மெட்ராஸ் வந்துட்டு அடுத்த நாளே ‘சிங்கம் சூர்யா’ மாதிரி பத்து மணி தூத்துக்குடி ப்ளைட்டை பிடிச்சு குடும்பம்குட்டியோட கல்லிடை வந்துட்டேன். கல்லிடைல போய் ஆத்தங்கரைல கால் நினைச்சுட்டு தெரு வம்பை பேசிட்டு வந்தாதான் பிரயாண பலன் நமக்கு கிட்டும். கல்லிடை மாமாமாமிகள் எப்போதும் போல “ஏது திடீர்னு வந்துட்டை, சும்மாதானா? ஆத்துக்காரி வந்துருக்காளா?னு குடைய ஆரம்பிச்சுட்டா. வந்தா ஏது வந்துட்டைனு கேப்பா வரலைனா வரவேஇல்லையேடானு மறிப்பா, ஏது ஆத்துக்காரியை கூட்டிண்டு வரலைனு பேசுவா, வந்தா எல்லாரும் வந்துருக்காளேனு பேசிப்பா. எத்தனை வருஷம் ஆனாலும் இவாளை திருத்தவே முடியாது. அம்மாவும் விஷ்வஜித்தும் நன்னா பேசிண்டா. பத்து நாள் போனதே தெரியலை. போன சமத்து போல திரும்பி ஊரை பார்த்து போகர்துக்கு ப்ளைட்டை பிடிக்க மூக்கு குடையர்துக்கு போனா கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆன ஒரு ஆம்பளைகிட்ட போய் வாழ்க்கைனா சிலபல அடிகள் விழத்தான் செய்யும்னு சொன்னா அது எவ்ளோ வேடிக்கையோ அதை மாதிரி அங்க டெஸ்ட் எடுக்கர  பையன் “பயப்படாதீங்க சார் ஒரு செகண்டுல முடிஞ்சுடும்”னு எனக்கு ஆறுதல் சொன்னான். “வலது பக்கம் வேண்டாம் இடது பக்கம் கொஞ்சம் லேசா அடச்சாப்பல இருக்கு கொஞ்சம் குத்திவிட்டைனா சரியாகிடும்”னு சொன்னேன். ஹோட்டல் குவாரண்டைன் இல்லாததால நேரா ஆத்துக்கு வந்தாச்சு. இந்த கல்யாணத்தை வச்சு ரொம்ப நாளைக்கு அப்புறம் மூனு போஸ்டும் போட்டாச்சு.   (சுபம்)

Wednesday, August 11, 2021

ஊர்ல கல்யாணம்..... (Part 2)

 Part 1  படிச்சாச்சா


அந்த என் ஆர் ஐ ஆண்டி புண்ணியாஜன ப்ரோக்ஷணம் முடிச்சு இப்ப தீர்த்தம் குடுக்க ஆரம்பிச்சா (அதான் கைல சானிடைசர் போட்டுக்கர்துக்கு). ‘அடுத்து சடாரி சாதிச்சு துளசி பிரசாதம் மட்டும்தான் பாக்கி’னு நான் சொல்லும்போது’ தங்கமணி என்னோட கையை கிள்ள ஆரம்பிச்சுட்டா. இதுக்கு முன்னாடி லக்கேஜ் போடர இடத்துல கத்தார் ஏர்வேஸ்காரி ‘லக்கேஜ்ல என்ன இருக்கு’னு ஜாரிச்சா. ‘மாமியாருக்கு லிப்ஸ்டிக், மாமனாருக்கு ஸ்ப்ரே, பொண்ணுக்கு விளையாடல் சாமான், மச்சானுக்கு பெர்ப்யூம், கரூர் அத்தைக்கு பவுடர், பாசி ஊசி பீபொறுக்கு புண்ணாக்குகட்டினு உள்ள ஒரு கல்யாணமண்டபமே இருக்கு,  உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ கோந்தை’னு நான் பதில் சொல்லும்போது தங்கமணி ‘வாயைமுடிண்டு இருங்கோ’னு செல்லமா மிரட்டினா. ஏர்போர்ட்டுல நிம்மதியா ஒரு சேர்ல உக்காந்து கண்ணைமூடி தூங்க முடியலை யாராவது திடீர்னு வந்து மூக்கை குடஞ்சு கொராணா டெஸ்ட் எடுத்துடுவாளோனு ஒரே பயம். ‘மொத்த குடும்பத்துக்கும்  மூக்கு குடைஞ்ச பைசாவை மிச்சம் பிடிச்சுருந்தா ரெண்டு பவுண் வாங்கியிருக்கலாம். எல்லாம் இந்த நாசமாபோற சைனாகடங்காரனால வந்தது’னு ஆற்றாமைல ஏர்போர்ட்டுல பொலம்பிண்டு இருந்தேன். கத்தார் ஏர்வேஸ்ல சாப்பாடு நன்னா இருந்தது. புதுசமையக்காரர் போலருக்கு காரம் கம்மியா போட்டு நன்னா பண்ணியிருந்தார். எங்க ஊர் ஏற்கனவே டெஸர்ட்(Desert) அப்பிடிங்கர்தால சாப்பாட்டுல எப்போதுமே டெஸ்ஸர்ட்(Dessert) நன்னா இருக்கும். சாப்பிட்டு முடிஞ்சு கொஞ்சம் கண் அசந்து இருந்தேன் படக்குனு மெட்ராஸ் வந்துடுத்து. கழிஞ்ச ரெண்டு வருஷமா ஏர்போர்ட்ல ஈ காக்கா இல்லை. இப்ப தான் ஆட்கள் வர ஆரம்பிச்சு இருக்கா. கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கெடுபிடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கிலோகணக்குல தங்கம் கடத்தின கேரளத்து சொப்பனசுந்தரிகளை விட்டுட்டு நாம கொண்டு போகும் அருனாகொடியை எடை போட்டுண்டு இருக்கா.


ஒரு வழியா மெட்ராஸ் ஏர்போர்டுலையே மறுபடியும் ஒருதடவை மூக்கு வாய் குடைஞ்சுட்டு ஆத்துக்கு வந்து சேர்ந்தோம். அங்க போய் இறங்கினதுக்கு அப்புறம்தான் தெரியர்து தங்கமணி அங்கவேற ஒரு மினி ஆன்லைன் ஷாப்பிங் பண்ணி ஒரு பெட்டி சாமான் தேத்தி வச்சுருந்தா. கல்யாணம் பொள்ளாச்சில வச்சுங்கர்தால இருபது டிக்கெட்டுக்கள் சகிதமா ஒரு மினிபஸ்ல அடுத்த நாளே கிளம்பிட்டோம். பகல் முழுக்க பஸ்ல பிரயாணம். திருமலை தென்குமரினு ஒரு பழைய படம் உண்டு அதுல வரும் பாலகன் மாதிரி இப்ப நாம எங்க வந்துருக்கோம்!னு ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை கேட்டுண்டு இருந்தேன். மத்யானம் ஆச்சு, சாயங்காலம் ஆச்சு, ராத்ரியும் ஆச்சு பொள்ளாச்சிமட்டும் வரவே இல்லை. இதுக்கு நடுல தங்கமணியோட பாட்டிக்கு வாந்தி அப்புறம் கொஞ்ச நேரத்துல மச்சானுக்கு வாந்தி. ‘பாட்டில ஆரம்பிச்சு பேரன் வரைக்கும் வாந்தி எடுத்தாச்சு இன்னும் ஊர் வரலையேடி’னு தங்கமணிகிட்ட சொல்லிண்டு இருக்கும்போதே ஒருவழியா மண்டபம் வந்துடுத்து. பஸ்ஸுல இறங்கின உடனே என்னோட மச்சான் அவனோட வருங்கால மாமியார்கிட்ட போய் ‘மாமி! எப்பிடி இருக்கேள்? சாப்பிட்டேளா?’னு ஜாரிச்சுண்டு இருந்தான். ‘காலேலேந்து குத்துக்கல் மாதிரி கூடவே இருந்த என்னை பாத்து அக்கா சாப்டியானு ஒரு வார்த்தை கேட்டானா? மாமியாரை பாத்த உடனே குசலம் விசாரிக்கரான் பாத்தேளா’னு தங்கமணி குசுகுசுத்தாள். ‘நீ சொன்னதுல குத்துக்கல்லெல்லாம் சரிதான் ஆனா அவன் பொழைக்கத் தெரிஞ்ச புள்ளடி! அத்திம்பேரை பாலோ பண்ணறான்! உங்காத்துல இருந்தும் இவ்ளோ கெட்டிக்காரனா இருக்கானேனு தான் எனக்கு ஆச்சரியம்’னு நான் சொன்னதும் முகத்தை வெட்டிண்டு போயிட்டா. ராத்திரி ஆஹாரம் பண்ணினதுக்கு அப்புறம் ரூம் பிடிக்கர படலம் ஆரம்பம் ஆனது. ‘மாப்பிள்ளை ரூம்ல மட்டும் தான் ஏசி இருக்கு & ரூம் பெரிசாவும் இருக்கு நாம எல்லாரும் இங்கையே தங்கலாம்’னு தங்கமணி தொணதொணத்தாள். கல்யாண மண்டபத்துல மாப்பிள்ளை ரூம்ல சேர்ந்து தங்கினா சில அவஸ்தைகள் உண்டு. யாராவது வந்துபோயிண்டே இருப்பா, நாம கொஞ்சம் கண் அசரலாம்னு நினைக்கும் போதுதான் முருக்கு வைக்கவந்தேன், மொனோகரம் வைக்கவந்தேனு எதாவது ஒரு மாமி வருவா, வந்துட்டு சும்மா போகாம நீங்க தான் அந்த கத்தார்ல ஒட்டகம் மேய்க்கர அத்திம்பேரானு ஆரம்பிப்பா, ஒன்னும் இல்லைனா பொண்ணாத்துலேந்து யாராவது ஒரு தாய்மாமா வந்து’ காபி சாப்டேளானா? டிபன் சாப்டேளானா?’னு வந்து மொக்கைபோடுவா. ‘எள்ளுதான் எண்ணைக்கு காயணும் எலிப்புலுக்கை எதுக்கு காயணும்’னு சொல்லி மாடில ஒரு சிங்கிள் ரூமை நானே கைபற்றி பெட்டியை இறக்கிட்டேன்.




அதிகாலைல ரயில்ல போகர மாதிரி ஒரு கனவு, காபி! காபி!னு சத்தம் வேற வந்தது. கண் முழிச்சு பாத்தா ரூம் வாசல்ல சமையல் மாமா கதவை தட்டிண்டு இருக்கார். 'இன்னும் பல்லே தேய்க்கலைஓய்!'னு சொன்னாலும் விடாம ‘முதல்ல காப்பியை குடிங்கோ அப்புறம் பல் தேய்ங்கோ’னு ஒரே உபசாரம். தங்கமணிக்கு பெருமை பிடிபடலை ‘எப்பிடி கவனிக்கரா பாத்தேளா?’னு கேட்டா. ‘என்னவோ உங்காத்துல ஏற்பாடு பண்ணின மாதிரி பீத்திக்கரை, கேட்டரிங் மாமாவாத்து மாமிக்கு திருனெல்வேலி பக்கமாம் அதான் இப்படி உபசாரம் பண்ரார்’னு ஒரு பிட்டை எடுத்து விட்டேன். ‘காலங்காத்தால உங்க திருனெல்வேலி ஊர் புராணத்தை ஆரம்பிக்காதீங்கோ’னு சொல்லிட்டு போயிட்டா. காத்தால டிபன் சாப்பிட போனோம். ஊத்தப்பம், இட்லி, பொங்கல், வடை, பைனாப்பிள் கேசரினு ஒரு பெரிய லிஸ்டே போச்சு. ஊத்தப்பம் ஏற்கனவே வார்த்து வைச்சதை போடாம நாங்க ஒக்காந்ததுக்கு அப்புறம்தான் “மாமா இருங்கோ கல்லை போடறேன்”னு சொல்லி எத்தம் கூட்டினார்.  ‘நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு’னு சொல்லிண்டே சாப்பிட ஆரம்பிச்சேன். ‘மாமா! அந்த கல் காய்ஞ்ச உடனே சொல்லுங்கோ!’னு தங்கமணி பல்லை கடிச்சுண்டு சொல்லிண்டு இருந்தா. 20-20 கிரிக்கெட் மாட்ச் மாதிரி 25-25 பேர் மட்டும் தான் மண்டபத்துல இருந்தோம். சாயங்காலம் ஜானுவாசத்துக்கு ரெடியாகர்துக்கு தங்கமணி மத்தியானத்துலேந்தே தயார் ஆக ஆரம்பிச்சுட்டா. நான் என்னோட கல்யாணத்துக்கு போட்ட 'ஸ்டோனொர்க்' ஷெர்வானியை பத்திரமா எடுத்து வச்சுட்டு கொஞ்சம் கண் அசரலாம்னு பாத்தேன் அதுக்குள்ள தங்கமணி “நான் இங்க இவ்ளோ கஷ்டப்பட்டு ரெடியாகும் போது உங்களுக்கு எப்பிடிதான் தூக்கம் வருதோ அதுவும் இந்த கல்லிடைகுறிச்சிகாராளுக்கு மத்தியானம் சாப்பிட்ட உடனே தூக்கம் எங்கேந்துதான் வருமோ”னு ஆரம்பிச்சா. “குழந்தை மனசுடி எங்களுக்கு அதான் சாப்பிட்ட உடனே தூக்கம் வருது!”னு நானும் சொல்லிட்டு ‘இப்ப என்ன பண்ணனும் சொல்லு?’னு கேட்ட உடனே ‘சாயங்காலம் சின்னவனுக்கு நீங்கதான் டெரெஸ் போட்டுவிடனும்’ அது இதுனு எல்லாத்தையும் என்னோட தலைல கட்டியாச்சு. 

சாயங்காலம் ரெண்டு கோஷ்டிகளும் ரெடி ஆக ஆரம்பிச்சது….. (கல்யாண கலாட்டா தொடரும்)


Monday, August 2, 2021

ஊர்ல கல்யாணம்.....

சைனா வைரஸ் இரண்டாம் அலைல எட்டிப் பார்த்துட்டு மூன்றாம் அலைல வந்துருக்கேன். எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? ஜுலை மாசம் ரெண்டாவது வாரத்துல என்னோட மச்சினனுக்கு பொள்ளாச்சில கல்யாணம். ஏப்ரல் மாசத்துல இருந்து எப்பிடி போகர்துனு தெரியாம ஒரே குழப்பமா இருந்தது. ஜுன் மாச ஆரம்பத்துல ஆன்லைன்ல பாத்துக்கலாம்னு என்னோட தங்கமணியே சொல்லிண்டு இருந்தா. அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நிலைமை சரியாகர மாதிரி வந்த உடனே, “நீ மட்டுமாவது போய்ட்டு வந்துடு! வாயும் கையுமா ஒரு நாத்தனார் மண்டபத்துல குறுக்கையும் நெடுக்கையும் லாந்தினாதான் கல்யாணம் களைகட்டும்!”னு சொன்னேன். அவளுக்கும் ஆசைதான் ஆனா போயிட்டு திரும்பி வந்தா 10 நாளைக்கு ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கி யார் முகத்துலையும் முழிக்காம அக்ஞாதவாசம்(அதான் கோரன்டைன்)இருக்கனும், மூனு நாளைக்கு ஒரு தடவை மூக்குலையும் நாக்குலையும் குச்சியை விட்டு சுத்துவா அதுதான் தங்கமணிக்கு பிரச்சனை. ஆத்தோட 'ஹவுஸ் ஹஸ்பென்ட்' மாதிரி 15 நாள் லீவு போட்டு அத்வைதாவையும் விஸ்வஜித்தையும் நானே பாத்துக்கறேன்னு சொல்லியும் அவள் மசியலை. ஜூன் மாச கடைசி ஆகும் போது மாத்தி மாத்தி மெட்ராஸுக்கும் தோஹவுக்கும் ஒரே போன் கால் சம்பாஷனைகள். ரிஷப்ஷனுக்கு கொண்டை போடனுமா, சவுரி வேணுமா வேண்டாமா, பிஸ்தா க்ரீன் வேணுமா இல்லைனா காபிகொட்டை க்ரீன் வேணுமானு அல்லோகலப்பட்டது. பந்தில உக்காந்தவனுக்கு பாயாச கவலை பாரின்ல இருக்கரவனுக்கு எதுக்கு கவலைனு நான் எதையும் காதுல வாங்கலை.


 “நான் மட்டும் போனா நன்னா இருக்குமா? எல்லாரும் மாப்பிள்ளை வரலையா? வரலையா?னு கேப்பா, என்னோட ஹேன்ட் பாக்கை யாரு பத்ரமா பாத்துப்பா?”னு வரிசையா வில்லுப்பாட்டு பாட ஆரம்பிச்சா. நானும் யோசிச்சேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த அந்த சம்பவத்துக்கு அப்புறம் (அதான் என்னோட கல்யாணம்) இதுவரைக்கும் கல்யாணமே போகலை. இதே கதில போனா காசியாத்திரை கல்யாணத்துக்கு முதல் நாளா இல்லைனா மறு நாளானு சந்தேகம் வர்ர அளவுக்கு ஞாபகமில்லாம போயிடும்னு முடிவு பண்ணி. “கல்யாணத்துக்கு எல்லாருமே போயிட்டு வரலாம்”னு சொன்னவுடனே தங்கமணிக்கு பல்லெல்லாம் வாய். இந்தியால ஒரு பிரச்சனையும் இல்லை ஆனா கத்தார்ல இந்தியா போயிட்டு வந்தவாள 10 நாள் சீதகம் ஒரு வார சீதகம்னு ரகம் வாரியா பிரிச்சி ஹோட்டல்ல தங்கிட்டு டெஸ்ட் பண்ணிதான் வெளில விடுவா. 10 நாளைக்கு நாலு பேருக்கு இங்க ரூம் போடர ரூபாய்க்கு நான் ஒரு கல்யாணமே பண்ணிடலாம் (அதாவது கல்யாணத்துக்கு செலவு பண்ணலாம்னு சொன்னேன்). இருந்தாலும் இந்த கல்யாணத்துல நான் செலவை பாத்தேன்னா ஜென்மத்துக்கும் எல்லா விஷயத்திலையும் “என்னோட ஒரே தம்பி கல்யாணத்துக்கே நீங்க வரலை, பெரிசா பேச வந்துட்டார்”னு தங்கமணி எகிறி அடிக்கும் வாய்ப்பு வந்துடும் (இப்ப மட்டும் என்ன வாழர்துனு கேக்காதீங்கோ!). “எனக்கு இருக்கர்து ஓரே தம்பி”னு தங்கமணி திரும்பி ஆரம்பிச்சா. “அதுக்கு நான் என்னமா பண்ணமுடியும் உங்க அப்பா தான் யோசிச்சு எதாவது பண்ணி இருக்கனும். இப்ப வந்து கவலைபட்டு என்ன பண்ண?”னு நான் நக்கல் அடிச்ச போது தங்கமணி சரியா கவனிக்கலை.
'எல்லாரும் போலாம்'னு சொன்னதுதான் தெரியும் தங்கமணி அழுகாச்சி 'மோட்'லேந்து மாறி ஷாப்பிங் மோடுக்கு போயிட்டா. அடுத்த மூனு நாள்ல தோஹால இருக்கும் ஷாப்பிங் சென்டர்கள் சூரையாடப்பட்டது, கிரிடிட் கார்டு தேய்க்கும் மிஷினில் இருந்து தீப்பொறி பறந்தது,நேபாளி டெய்லர் மூனு நாள்ல எத்தனை உருப்படி தைக்கர்து / பிடிக்கர்துனு தெரியாம பேந்த பேந்த முழிச்சார். “எங்க அப்பாவுக்கு வறுத்த முந்திரியும் பாதாமும் வாங்கனும் சாயங்காலம் கடைக்கு போலாம்”னு தங்கமணிடேந்து ஆபிஸுக்கு போன். “கல்யாணம் உங்க அப்பாவுக்கா இல்லைனா தம்பிக்காமா?”னு நான் கேட்டதை எல்லாம் அவள் காதுலையே வாங்கலை. என்னிக்கி வாங்கியிருக்கா இன்னிக்கி வாங்கர்துக்கு. எது வாங்கினாலும் ஒரு கேள்வியும் கிடையாது. கேட்டா “எனக்கு இருக்கர்து ஒரு தம்பி, அவனோட கல்யாணத்துல நான் நன்னா இருக்க வேண்டாமா சொல்லுங்கோ”னு ஆரம்பிச்சுடுவா. நான் மனசுக்குள்ள “பகவானே நல்லவேளை எங்க மாமனார் பெரிய மனசு பண்ணி ஒரு தம்பியோட நிப்பாடினார்”னு சொல்லி மனசை தேத்திப்பேன்.” நீங்க புது சட்டை, குர்தா எதுவும் வாங்கலையா”னு கேட்டு இன்ப அதிர்ச்சி குடுத்தா. ‘பரவாயில்லையே ஆத்துக்காரரை பத்தியும் கவலைபட ஆரம்பிச்சுட்டாளே’னு நான் சந்தோஷப்படர்துக்குள்ள “எப்போதும் போடர பழசுபொட்டெல்லாம் போட்டுண்டு வந்து என்னோட போட்டோ எல்லாத்தையும் வம்பாக்கிடாதீங்கோ! என்னோட மெடிரியல் கலருக்கு மெட்சிங்கா நல்லதா நாலு வாங்கிக்கோங்கோ!”னு சொன்னா. “உன்னோட ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சு அக்கவுண்ட்ல என்ன மிச்சம் மிஞ்ஜாடி இருக்குனு பாக்கனும். அனேகமா 4 முழம் வேஷ்டிதான் வாங்கமுடியும் போலருக்கு”னு சொன்னேன்.

 வழக்கம் போல எல்லா சாமான் செட்டுகளையும் அள்ளி போட்டுண்டு ஏர்போர்ட்டுல போய் இறங்கியாச்சு. அங்க இருக்கும் கொராணா கெடுபிடிகள் பாக்கவே பயமா இருந்தது. எல்லாரும் தலையோட காலோட போத்திண்டு முகமூடி திருடன் மாதிரி இருந்தா. அழகான ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் ஏர்'கோஸ்டஸ்' மாதிரி வெள்ளை அங்கில இருந்தா பாவம். கத்தார் ஏர்வேஸ்ல குடிக்க ஜலம் தருவாளா இல்லைனா இன்டர்னேஷனல் மெடிக்கல் ப்ரோட்டோகால்னு சொல்லி அரை டம்பளர் டெட்டால் தந்துடுவாளோனு ஒரே பயம். சில என் ஆர் ஐ ஆண்டிகள் புண்ணியாஜனம் பண்ணவந்த ஆத்து வாத்தியார் மாதிரி ஏரோப்ப்லேன் உள்ள போற வழி நெடுக ஸ்ப்ரே அடிச்சுண்டே போனா. கல்லிடைல “எங்காத்து வாசல்லையும் சேர்த்து தெளிங்கோனு” பக்கத்தாத்து மாமி சொல்லர மாதிரி ‘எங்க சீட்லையும் கொஞ்சம் மருந்து அடிங்கோ’னு சொல்ல வந்தேன்…… (கல்யாண கலாட்டா தொடரும்)