Friday, May 28, 2010

விருது பாண்டியர்கள்

தக்குடுவுக்கு 2 விருது கிடைச்சிருக்கு! விருதை தந்தவர்கள் LK & பிரசன்னா Award 1 Award 2 . இங்க வந்துட்டு மனசு விட்டு ஒரு தடவையாவது சிரிச்சுருக்கமாட்டேளா? அதுதான் உண்மையான விருது தக்குடுவுக்கு. கிடைத்த இரண்டு விருதுகளையும் இங்கு வந்து சிரித்து விட்டுச் செல்லும் நண்பர்களுக்கும், தங்களின் நேர்மையான கருத்துகள் மூலம் என்னை திருத்திக்கொள்ள உதவும் பாஸ்டன் அண்ணா & Life is beautiful அக்கா போன்ற நல்லவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.




வந்த விருதை ஒரு 6 பேருக்கு குடுக்கனும்னு ஆசைபடுகிறேன். விருது எல்லாம் தரும் போது வாங்குபவருடைய சிறப்புகள் எல்லாம் கொஞ்சம் சொல்லிட்டு அப்புறம் குடுக்கர்துதான் அழகு. சும்மா கதவை தட்டி சார் போஸ்டு! மாதிரி குடுக்க கூடாது. திருனெல்வேலி பக்கமெல்லாம் நாம எவ்ளோ பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் பெரிய வித்வான்களுக்கு நாமே நேரடியா மாலையோ/சால்வையோ எல்லாம் போட முடியாது, அந்த வித்வானுக்கு சமமான/உயர்வான வித்வத் உள்ள ஒருத்தர்தான் மரியாதை செய்யமுடியும். அதேபோல் இந்த விருதையும் வயது&அறிவு முதிர்ச்சி உடைய மரியாதைக்கு உரிய திவா அண்ணா தனது பொற்கரங்களால் வழங்கி கெளரவம் செய்வார். விருது வாங்கின வித்வான்களோட விருது,சால்வை மற்றும் பொற்கிழி எல்லாத்தையும் மேடைலேந்து அவா உக்காசுண்டு இருக்கர இடத்துக்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டுமே தக்குடுவோட வேலை..:) விருது பெறும் அனைவருக்கும் தக்குடு செலவில் அரைகிலோ தோஹா தங்கம் பொற்கிழியாக வழங்கப்படுகிறது...;)




திருமதி.வல்லிசிம்ஹன்

வல்லியம்மா! என்று பதிவுலகில் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இந்த அம்மையாரை விரும்பாதவரே இல்லை!னு சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த திரட்டிப்பால் கூட சில சமயம் திகட்டிப் போகலாம், ஆனால் இந்த அம்மாவோட தித்திப்பான அன்பும், பரிவும் மிக்க பதிவுகள் திகட்டாத தெள்ளமுதேளோரெம்பாவாய்! எல்லாரும் நல்லா இருக்கனும்!னு இவாளோட பதிவுகள்ல வார்த்தைகளா மட்டும் இல்லாமல் மனதாலும் வாழ்த்தக்கூடிய அற்புதமான ஒரு பெண்மணி & பெண்களில் மணி! குறை என்பதே கண்ணுக்கு தெரியாமல் எல்லாவற்றையும் நிறைவாகவே பார்க்கும் நம்ப வல்லியம்மா எப்போதும் நிறைவான வாழ்வே வாழனும்னு கல்லிடை ஆதிவராகப் பெருமாளை நான் சேவிச்சுக்கறேன். ‘யதார்த்தம் கூடிய பாசம்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திரு.மதுரையம்பதி அவர்கள்

அம்பிகையை பற்றி அணு அணுவாக அலசி ஆராயக்கூடிய அற்புதமான ஒரு சாக்தர். பெங்களூர்வாசியான இந்த மதுரைக்காரர் பதிவுக்குள்ள நாம போனோம்னா நம்மையும் அறியாம அம்பாள் சம்பந்தமா நிறைய விஷயங்களை அறியலாம். இவருடைய செளந்தர்யலஹரி பதிவுகள் ஒவ்வொன்னும் அற்புதமான ஒரு அனுபவத்தை நமக்கு தரும். கொஞ்சம் கூட விளம்பர மோஹமே இல்லாமல் ஆத்மார்த்தமா எழுதக்கூடிய மிகச்சிலரில் இவரும் ஒருவர். இவருக்கு எல்லா ஸ்ரேயஸும் வாரி வழங்கவேண்டும் என்று பச்சைகிளியை கையில் பிடிக்கும் செல்லக்கிளியாம் மீனாட்சியையும் அவளின் ஆத்துக்காரரையும் பணிந்து துதிக்கிறேன். ‘அருள் மணக்கும் ஆன்மீகம்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திருமதி. ஷைலஜா அவர்கள்

'குழல் இனிது யாழ் இனிது என்பர் ஷைலஜாவின்
குரலை கேளாதோர்'
Shy + Lajjaa இங்கிலீஷ் & சமஸ்க்ருதம் என இரண்டு மொழியில் அர்த்தம் பார்த்தாலும் நாணம் எனும் அர்த்தம் வரும்படியான ஒரு பெயரை உடைய இந்த பெண்மணி ஒரு பன்முக படைப்பாளி. சிறுகதை, நாவல் என்று எல்லா பிரிவிலும் முத்திரை பதித்துக்கொண்டிருப்பவர். பக்கத்தாத்து மாமாவோட பையன் கல்யாணத்து ஜானுவாச போட்டோல நாம இருக்கர மாதிரி இந்த அக்கா ஜெயகாந்தன், இந்திரா செளந்தர்ராஜன் மாதிரியான பெரிய படைபாளிகளோடு ஒரே மேடையில் அமரும் வல்லமை உடையவர். இவருடைய வீட்டுக்கு நாம போனோம்னா அவருடைய தங்கக்கரங்களால் செய்த சூடான தூள் பக்கோடாவும், காசி ஹல்வாவும் நமக்கு கிட்டும். உங்களுக்கு யோகம் இருந்தா மதுரமான குரலில் ஒரு பாட்டும் கிட்டும். ‘பன்முக படைப்புகள்’ என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திருவாளர் VGR அவர்கள்

என்னடா இது எதோ பெரிய MGR மாதிரி பேரு இருக்கே?னு போய் எட்டிப்பார்த்து நான் தேடிப்பிடித்த ஒரு நல்ல பதிவர். யாருக்கும் அவ்வளவாக பரிச்சயம் இருக்க வாய்ப்பு இல்லை. இவர் இங்கிலிபீஸில் மட்டுமே எழுதுவார் அதுவும் துரைமார்கள் பாணியில் இருக்கும். முழுவதும் இங்கிலிபீஸ்ல இருக்கும் அந்த வலைபூவில் முத்து முத்தா தமிழ்ல கமண்ட் போட்டு தக்குடு வேடிக்கை பார்க்கும்....:)இருந்தாலும் எனக்கு ‘தாம்பரம் பொண்கள்’ பதிவு மூலம் பரிச்சயமாகி, இவருடைய ‘A question’ பதிவு ஆத்ம விசாரம் போல ஆழமாக சிந்திக்க வைத்த ஒன்று. இவரோட The Lonesome house கதையை படிச்சுடனும்னு நானும் முயற்சி பண்ணித்தான் பாக்கறேன், ஆனால் வேலை பளுவின் காரணமாய் இயலவில்லை..;( 'வித்தியாசமான சிந்தனையாளர்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது

திரு. அண்ணாமலையான் அவர்கள்

'மலை வாத்தியார்'னு பிரியத்தோடு இவரை தக்குடு அழைப்பதுண்டு. விவேகானந்தர் மாதிரி கையை கட்டிக்கொண்டு போஸ் குடுக்கும் இவருடைய பதிவுகள் எதாவது ஒரு முக்கியமான சமுதாய பிரச்சனை தொடர்பாக ஆராயும் நோக்கில் இருக்கும். இவர் ஒரு பதிவுல போடர விஷயம் மட்டும் தக்குடு மாதிரி கத்துக்குட்டிகள் கைல இருந்ததுன்னா 6 பதிவு போட்டுடலாம். நித்தியமும் எதாவது ஒரு மொக்கை போடுபவர்களுக்கு நடுவில் வருஷத்துக்கு மொத்தத்துல 6 பதிவு இவர் போட்டார்னா அதிசயம்தான். ஆனால் இவர் பதிவு போட்டு 4 மாதங்களுக்கு தொடர்ந்து கமண்ட் விழுந்து கொண்டே இருக்கும். சமீபகாலங்களாக ஆளையே காணும், அனேகமா உண்ணாமலையம்மன் சமேதராக வந்து காட்சியளிக்கப் போறாரோ என்னவோ?..:) 'சிறந்த சமுதாய சிந்தனையாளர்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

திருமதி.மதுரம் அவர்கள்

பெயருக்கு ஏற்ற மாதிரியே நல்ல நகைச்சுவை உணர்வு இவருக்கு உண்டு. 'உடம்பை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே' என்னும் திருமூலர் வாக்குப்படி உடம்பை நல்ல முறையில் வைத்துக் கொள்ளும் அருமையான சைவ உணவு பதார்த்தங்களை செய்து அதை போட்டோவுடன் போட்டு என்னை போன்ற சிறுகுழந்தைகளின் நாவில் எச்சில் ஊறச்செய்பவர். சைவ உணவுவைகைகள் மட்டுமே செய்து வருவது பாராட்டுதலுக்கு உரிய ஒரு விஷயம். 'சமையல் கலை திறன்' என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

முக்கியக் குறிப்பு - இன்னோரு விஷயத்தையும் இந்த சமயம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம், உண்மையான ஆசிரியரின் குணாதிசியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவம்தான் தக்குடு! எல்லா மனுஷாளையும் சந்தோஷப்படுத்தி பாக்கர்துக்காக ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஒரு கானல் நீர். இங்கு பதியப்படும் செய்திகள் ஹாஸ்யத்தின் பொருட்டுமட்டுமே, எனவே படித்து/சிரித்துவிட்டு( நன்றாக இருந்தால் மட்டும்)அதை மறந்துவிடவும். இதை அடிப்படையாக கொண்டு ஆசிரியரின் உண்மையான உடன்பிறப்பிடம் கேள்விகள் எல்லாம் கேட்டு அவனுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம். உண்மையான ஆசிரியருக்கு தெரிந்தது மட்டுமே எழுத வேண்டும் என்றால் Breakeven point in investment, Portfolio management, Institutional investors, Revised international accounting standard, Project inspection போன்றவை மட்டுமே எழுத முடியும்...:) மறுபடியும் சொல்கிறேன் தக்குடு ஒரு கற்பனை கதாபாத்திரம் & முற்றிலும் நிஜ ஆசிரியருக்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஸ்ருஷ்டிப்பு.

Friday, May 21, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும் 2

புதுசா வந்திருக்கேளா? நோ ப்ராப்ளம் இதோ Part 1 உங்களுக்காக..;)

அங்க இருந்த பெரிய மணியை டைண்! டைண்!னு யாரோ அடிச்சா, இசை வந்த திசை பார்த்து திரும்பினேன். அங்க பார்த்தா அழகான கேடயத்துல ஸ்வாமியையும் தாயாரையும் வச்சு எழப்பண்ணி கொண்டுவந்துண்டு இருந்தா!னு வரதாச்சாரி சொன்னார்.
அப்பா! கேடயம்னா என்னது? என்ன விஷேஷம் அன்னிக்கு?னு வரதாச்சாரி முடிக்கர்துக்குள்ள நம்ப வைஷூ சந்தேகம் கேட்டுது.
லவ்ஸ்டோரிக்கு நடுல இதெல்லாம் உங்களாலதான் சொல்லமுடியும்!னு விஜி மாமி பெருமைபட்டுக்கொண்டாள்.
இருடி கோந்தை! அவசரபடாம கேக்கனும், எனக்கும் ஸ்வாமியை எதுக்கு எழபண்ணறானு தெரியாததால வேற வழி இல்லாம ஒரு மாமிட்ட கேட்டேன்!னு வரதாச்சாரி தொடர்ந்தார்.
அன்னிக்குதான் வசந்தோத்ஸவம்!னு அந்த மாமி சொன்னா. உன்னோட கேடயம் கேள்விக்கு பதில் சொல்லறேன் மொதல்ல. கேடயம்ங்கர்து ஸ்வாமியை எழப்பண்ணர்துக்கு உபயோகபடுத்தர ஒரு குட்டி சப்பரம் மாதிரி, விஸ்தாரமா எல்லாம் எடம் இருக்காது. ஸ்வாமியும் தாயாரும் மட்டும்தான் அதுல அமர்த்த முடியும்.
அப்போ! திருப்பதி பெருமாள் வாகனம் மாதிரி 4 ஐயங்கார் மாமா எல்லாம் சைடுல உக்காரமுடியாது இல்லையா?னு வைஷு தொடர்ந்தாள்.
ஆமாம், அப்புறம் அந்த கேடயத்தை நன்னா ‘ஜிங்கு’னு இருக்கும் 6 பேர்தான் தூக்கிண்டு வருவா. வஸந்தோத்ஸவம் 10 நாள் நடக்கும். பத்து நாளும் ஸ்வாமிக்கு ஹாலிடே மாதிரிதான். உற்சவர் தாயார் ஸஹிதமா வசந்த மண்டபத்துலதான் சேவைசாதிப்பார். ஸ்வர்ணகவசம்,வெள்ளிகவசம் எல்லாம் போட்டுக்க மாட்டார். இப்போ இருக்கும் கம்பெனிகளோட வெள்ளிக்கிழமை காஷுவல் ட்ரெஸ் மாதிரி ரொம்ப சிம்பிளா இருப்பார். இதை பத்தி திருப்பாவைல கூட ஆண்டாள் சொல்லிரிருக்காளே தெரியுமா நோக்கு?னு வைஷுவை கேட்டார் வரதாச்சாரி.

எந்த பாசுரத்துல வருதுப்பா?னு அவசரமா கேட்டாள் வைஷ்ணவி.

'ஓங்கி உலகளந்த உத்தமன் bare body!'நு வருது பாத்தியா!னு சொல்லிட்டு விஜி மாமியை பார்த்து கண்ணை சிமிட்டினார் மாமா.
இந்த வக்கில்களே இப்படித்தான்! எதாவது சாதுர்யமா சொல்லி நம்மை சொக்கவச்சுருவா!னு தன்னை அறியாமல் மாமாவை பற்றி விஜிமாமி உருகினாள்.
அப்பா! இப்போ தெரியர்து! நம்ப கோமளா மாமியை எப்பிடி கைபிடிச்சேள்னு! என்று வைஷு கொக்கரித்தாள்.
அதுமட்டும் இல்லாம நித்யம் திருமஞ்சன கைங்கர்யம் ஸ்வாமிக்கு ஆனதுக்கு அப்பரம் ஒரு உருண்டை சைஸ் உள்ள நன்னா அறைச்ச சந்தனத்தை குளுர்ச்சிக்காக ஸ்வாமியோட திருமார்புள சாத்திடுவா!னு வரதாச்சாரி தொடர்ந்தார்.
பெருமாளோட ஹ்ருதயகமலத்துலதான் குளுர்ச்சியே உருவான மஹாலெக்ஷ்மி தாயார் இருக்காளேப்பா! அதை விடவா அந்த சந்தனம் குளுர்ச்சியை தரபோர்து பெருமாளுக்கு!னு ஸ்ரீவத்சன் கேள்வி கேட்டு தான் வரதாச்சாரி பரம்பரை என்பதை நிரூபித்தான்.
சரிதான்டா கோந்தை! அந்த சந்தனம் அடுத்த நாள் காத்தால மண்டகப்படிகாராளுக்கு பிரசாதமா குடுப்பா,பெருமாள் & தாயாரோட பிரஸாதமா அதை அவாளும் ஆசையோட ஸ்வீகரிச்சுப்பா!னு வரதாச்சாரி சொன்னார்.
சாயங்காலம்தான் ரொம்ப நன்னா இருக்கும். வஸந்த மண்டபத்துக்கு எதிர்ல இருக்கும் ஒரு தோட்டம் மாதிரியான ப்ருந்தாவனத்தை ஸ்வாமி தாயார் சகிதமா 10 தடவை சுத்தி வருவார். முதல் இரண்டு தடவை ஸ்வாமி பிரதக்ஷிணம் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் பிரபந்த கோஷ்டிகாரா ஸ்வாமிக்கு பிரபந்தம் சாதிச்சு சந்தோஷபடுவா. திருனெல்வேலி வேதமும் சங்கீதமும் நன்னா தழச்சு இருக்கும் ஊர் அதனால அடுத்த 2 பிரதக்ஷிணம் கழிஞ்சு வேதபாராயணமும்,பஜனையும்,ஒரு பாட்டும்,சங்கனாதமும் அதை தொடர்ந்து கடோசில நாதஸ்வரத்துல ஒரு ராகத்தோட முடியும்.
னு சொல்லிட்டு வரதாச்சாரி மேலும் தொடர்ந்தார்.
இந்த உத்ஸவத்துக்கு நடுவுல சம்பந்தமே இல்லாத ஒரு முகத்தை நான் பார்த்தேன். அந்த பொண்ணோட மூக்கை பாத்தோனையே அது ஸ்ரீரங்கத்து தேவதைனு எனக்கு புரிஞ்சுடுத்து!னு பொடி வச்சார் மாமா.
மூக்கை பார்த்து எப்பிடி நாம முடிவு பண்ணமுடியும்!னு வைஷு கேட்டாள்.
ஈஸியா பண்ணளாம்டி கோந்தை! ஸாமுத்ரிகா லக்ஷணவிஷேஷப்படி மூக்கையும் முழியையும் வச்சே அவா எப்பிடிபட்டவானு சொல்லிடலாம், அதுலையும் நம்ப ஐயங்கார்கள்ல மூக்கை வச்சே அவா எந்த ஊர் ஐயங்கார்னு சொல்லிடலாம்!னு பெரிய ஆராச்சியாளர் மாதிரி மாமா அள்ளிவிட்டார்.
ஸ்ரீரங்கத்துகாராளுக்கு மூக்கு எப்பிடி இருக்கும்?னு விஜி மாமி எதோ சம்பூர்ணராமாயணம் மண்டோதரி மாதிரி மாமாட்ட கேட்டாள்.

ஸ்ரீரங்கத்து பொண்களுக்கு மூக்கு நன்னா தீர்க்கமா இருக்கும், நான்குனேரி பக்கமா இருந்தா கொஞ்சம் மூக்கு சின்னதா இருக்கும், திருக்கணங்குடி பொண்களா இருந்தா அவாளோட மூக்கு பளபளப்பா இருக்கும், திருக்கோஷ்டியூர் பொண்களுக்கு மூக்கு நார்மலா இருக்கும்!னு மாமா டேட்டாபேஸ்லேந்து எடுத்து விட்டார்.
அப்பா, நீங்க அட்வகேட்டா இல்லைனா ENT specialistஆ!னு ஸ்ரீவத்சன் நக்கல் அடித்தான்.
இதெல்லாம் ஜென்ரல்னாலேட்ஜ்ரா கண்ணா! இவ்ளோ தெரிஞ்சுருந்தாலும் மனசுல விகல்பம் கிடையாதுடா கோந்தை!னு சொன்னார் வரதாச்சாரி.
சரி சரி! அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?னு வைஷூ கரெக்டா பாய்ன்டை பிடிச்சா.
இந்தகாலத்து பொண்கள் மாதிரி கண்ணுக்கு தெரியாத இல்லைனா பாம்பு/பல்லி பொட்டு எல்லாம் வச்சுக்காம அழகா எல்லாரும் ஸ்ரீசூர்ணம் இட்டுண்டு இருப்பா, அந்த பொண்ணும் அழகா மஹாலக்ஷ்மியாட்டம் ஸ்ரீசூர்ணத்தோட பளிச்னு இருந்தா. கல்யாணம் ஆகலைங்கர்துக்கு அடையாளமா ஸ்ரீசூர்ணம் சின்னதா இருந்தது.
பெருமாளுக்கு அந்த பக்கம் வந்துண்டு இருந்தா அந்த பொண்ணு, எனக்கு திருப்பி பாக்கனும்னு ஆவல் எல்லாம் ஒன்னும் இல்லாட்டாலும், எங்கையோ பாத்த மாதிரி இருந்ததால 2 -3 தடவை பாத்தேன்! மாமா சமாளிச்சார்.
அப்போ 20-30 தடவை பாத்துருக்கேள்னு அர்த்தம் இல்லையாப்பா?னு ஸ்ரீவத்சன் சிரிச்சுண்டே தொடர்ந்தான்.
இதுக்கு நடுல பெருமாள் குறுக்க குறுக்க வந்து அந்த பொண்ணை மறைச்சுண்டே இருந்தார். வேற யாராவதா இருந்தா, செத்தே தள்ளிக்கோங்கோ!னு விலக்கி விடலாம், பெருமாளை என்ன பண்ணமுடியும்?னு நான் யோசிசுண்டு இருக்கும்போது ஒரு மாமா என்னோட கைல ஒரு வெண்சாமரத்தை குடுத்து, ‘ஸ்வாமிக்கு வீசிண்டே வாடா அம்பி!’னு சொல்லி அந்த பொண்ணுக்கு பக்கத்துல ஒரு இடத்தையும் காட்டினார். அந்த மாமா என்னோட கண்ணுக்கு பெருமாளாவே தெரிஞ்சார். ‘பெருமாள்!! யூ ஆர் ரியலி கிரேட்!’னு பெருமாளை சிலாகிச்சுண்டு (அந்த பொண்ணை பாத்துண்டே)சாமரமும் வீசிண்டு வந்தேன்!னு மாமா விவரித்தார்.
சாமரம் பெருமாளுக்கு போட்டேளா? இல்லைனா பெருமாளுக்கும் போட்டேளா?னு வைஷுகுட்டி மாமாவின் வாயை பிடிங்கினாள்.
இப்படியே ஒரு வாரமா நித்யம் சாமர கைங்கர்யம் பண்ணின்டே நாச்சியாரையும் பாத்துண்டே இருந்தேன். ஆனால் அந்த பொண்ணு என்னை பாத்ததாவே தெரியலை!னு மாமா குறைபட்டுக்கொண்டார்.
அச்சச்சோ! அப்ப அந்த பொம்ணாட்டி ஒரு தடவை கூட உங்களை திரும்பி பாக்கலையாப்பா?னு வைஷு வருத்தப்பட்டாள்.
அவளுக்கு அன்பே வா! எம்ஜியார் பிடிக்காதோ என்னவோ?னு விஜி மாமி சமயம் பாத்து காலைவாரினாள்.
போடி அசடு! இந்த பொம்ணாட்டிகள் நம்பளை எதேசையா கூட பாக்காத மாதிரி காட்டிண்டானா நம்மை மட்டும்தான் கவனிச்சுண்டு வரானு அர்த்தம்!னு வரதாச்சாரி உற்சாகமா தொடர்ந்தார். இந்த வரதாச்சாரியோட யூகம் சோடை போகலை, ஒரு நாள் மெதுவா என்னை பாத்து ரேஷன் basis-ல சிரிச்சா!னு தனது வெற்றியின் முதல் அறிகுறியை விவரித்தார் மாமா.

7-வது நாள் உத்ஸவத்து அன்னிக்கு சாயங்காலம்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது...........(தொடரும்)

(குறிப்பு - வார்த்தைகள் எதுவும் புரியலைனா கமண்ட்ல வந்து கேளுங்கோ தக்குடு அல்லது தெரிஞ்ச யாராவது உங்களுக்கு பதில் சொல்லுவா சரியா!!..;) )

Friday, May 14, 2010

புளியோதரையும் தச்சு மம்முவும்

திருவல்லிக்கேணியின் அழகான ஒரு தெருவில் இருக்கும் அந்த வீட்டின் கதவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ரெங்கமன்னார் ஸ்வாமி கோதை நாச்சியார் சகிதமாக சிரித்த முகத்துடன் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார். அதை தாண்டி உள்ளே வருபவர்களுக்கு ஸ்ரீரங்கத்து ரெங்கனாதரும் தாயார் சகிதமாக ஹாலில் காட்சியளித்துக்கொண்டிருந்தார். இன்று அந்த வீட்டின் நிலைவாசலில் மாவிலை தோரணங்கள் பொலிவோடு காட்சி அளித்தது. வீட்டின் மூத்த வரதாச்சாரி மாமா பூஜை ரூமில் சாலிக்கிராம பூஜையை பூர்த்தி பண்ணிட்டு சக்கரத்தாழ்வார் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருந்தார். இனிமே உள்ள விஷயம் முழுவதும் நாம அவாத்துக்கே போய் பாக்கலாம்.

சரக்! சரக்!னு சத்தம் போடும் புது பட்டுப்புடவையை(ரெங்காசாரியில் வாங்கினது) அழகான ஐயங்கார்கட்டு கட்டிண்டு வந்த கோமளவல்லி மாமியை அவாத்து கடை குட்டி வைஷ்ணவி வழிமறித்தாள்.
யே கோமளா!கல்யாணப்பொண்ணு மாதிரி இருக்கைபோ! நோக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆச்சு!னு சொன்னா ஒருத்தரும் நம்ப மாட்டா! ஆனா கோமளா, பட்டுப்புடவையை விட உனக்கு கோராகாட்டந்தான் நன்னா இருக்கும்.
(வெட்கம் கலந்த குரலில்) போறுமே! அம்மாவை பேர் சொல்லி கூப்டதோடு இல்லாம ஜாதகப் பேரை சொல்லி கூப்பட்ரையா!!னு கோமளா மாமி பொய் கோவம் கொண்டாள். மாமிக்கு விஜி!னு கூப்டாதான் பிடிக்கும் கோமளா!னு அவாத்து மாமா மட்டும் தான் கூப்பட்லாம்.
டே வத்ஸூ! இங்க வந்து பாருடா நம்பாத்து கல்யாணப்பொண்ணை!னு வைஷூ ஹால்லேந்து கத்தினாள்.
அழகா ஸ்ரீவத்ஸன்னு இருக்கர உங்க அண்ணா பேரை எதோ கல்யாண பந்தில வெண்பொங்கலை களத்துல போட்டுண்டு 'மாமா கொஞ்சம் கொத்ஸு!'னு கூப்பட்ரமாதிரி கூப்பட்ரீயேடி கழுத!!னு விஜி மாமி செல்லமா கோவப்பட்டாள். இதுக்கு நடுவில் பூஜையை முடிக்கப்போறார்ங்கர்துக்கு அடையாளமா குஞ்சு ஆஞ்சனேயரை கைபிடியாக கொண்ட கைமணியை அடித்தார் அவாத்து மாமா. மொத்த குடும்பமும் கர்பூரஹாரத்தி பாக்கர்துக்கு பூஜை ரூம் முன்னாடி ஆஜர் ஆனது. விஜி மாமி 10 நிமிஷம் முன்னாடியே நன்னா மணக்க பச்சக்கர்பூரம் எல்லாம் போட்டு திருக்கண்ணமுது நிவைத்யத்தை ஒரு வெள்ளி பாத்ரத்தில் விட்டு இலை கிழிசலால் மூடி ரெங்கனாதர் படம் பக்கத்துல வச்சுட்டா. 'ராஜாதி ராஜாய' நீராஜன மந்த்ரம் முழங்க கர்ப்பூர ஹாரத்தியும் அதை தொடர்ந்து பல்லாண்டும் சாதிச்சார் மாமா.

ஹாரத்தியை எல்லாரும் ஒத்திண்டதுக்கு அப்பரம் ஸ்வாமி சேவிச்சுட்டு, அப்பரம் விஜி மாமி மாமாவை சேவிச்சா, யே பட்டூ!(சந்தோஷமான சில தருணங்களில் இப்படியும் கூப்டுவார்)வருஷத்துல இந்த ஒரு நாள்தாண்டி நீ பெரிய 'பதிவ்ரதா சிரோண்மணி' மாதிரி நேக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணரை!னு மாமியோட வாயை கிண்டினார்.
போறும்! போறும்! கல்யாணம் ஆன பொண்ணையும், ஆகப்போற புள்ளையாண்டானையும் வச்சுண்டு பேசர பேச்சா இது?னு நமஸ்காரம் பண்ணி எழுந்திருச்சுண்டே பதில் சொன்னாள். வரதாச்சாரியோட குடும்பத்துல ஒளிவு மறைவே கிடையாது, எல்லாருமே ஆத்துக்குள்ள பிரண்ட்ஸ் மாதிரிதான் பேசிப்பா, வைஷ்ணவியோட ஆத்துக்காரர் ரெங்கபாஷ்யம் அமெரிக்கால பாஸ்டன் சிட்டியில் சாப்ட்வேர்ல வேலை பார்க்கும் சாப்டான ஒரு பையன். குட்டி ரெங்கபாஷ்யம் இன்னும் 3 மாசத்துல வெளில வந்துடுவார்ங்கர்துனால வைஷூ அம்மாவாத்துக்கு வந்துருக்கா.
அப்பா! அப்பா! உங்களோட ஓல்ட் லவ்ஸ்டோரியை ஒரு தடவை சொல்லுங்கோளேன்!னு வைஷூ ஆரம்பிக்க, ஸ்ரீவத்சனும் ஜோதியில் ஐக்யமானான். உங்களுக்கு வேற வேலையா இல்லையா?னு சிணுங்கிக்கொண்டே சுவாரசியமாகவும் ஹாஸ்யமாகவும் இட்டுக்கட்டி அழகாக கதை சொல்லும் அவாளோட ஆம்படையானோட லவ் ஸ்டோரியை கேக்கர்துக்கு விஜி மாமியும் தயாரானாள்.

ரவிசந்திரன்,பாலையா, நாகேஷ் நடிச்ச ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்கு அப்பரமா அவாத்து மாமா சொல்லும் அந்த ஓல்ட் லவ்ஸ்டோரிதான் ரொம்ப பிடிக்கும்.
ஹஹம்ம்!னு தொண்டையை சரி பண்ணிண்டு மாமா தன்னோட ஓல்ட் லவ்ஸ்டோரியை சொல்ல ஆரம்பிச்சார்.
அப்போ நான் அன்பே வா! எம்ஜியார் மாதிரி இருப்பேன் பாக்கர்துக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர்ல பி.ஏ, பி.ல் பண்ணிட்டு நெல்லை ஜங்கஷன்ல இருந்த சீனியர் கிரிமினல் லாயரான என்னோட தாயதிக்காரர் ஸ்ரீ முஷ்னம் நரசிம்மமூர்த்தி மாமாட்ட அஸிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணின்டு இருந்தேன். அவரோட பேருதான் எதோ மிருதங்கவித்வான் மாதிரி இருக்கே தவிர மஹாகெட்டிக்காரர்.சனிக்கிழமை தோறும் அங்க இருக்கும் ஜங்ஷன் வரதராஜபெருமாள் கோவிலுக்கு போவேன், பக்தியெல்லாம் ஒன்னும் கிடையாது, சனிக்கிழமை காத்தால அந்த ஸ்வாமிக்கு இலுப்பசட்டி தோசை வார்த்து நிவைத்யேம் பண்ணுவா, அங்க மட்டும்தான் அது உண்டு. திருனெல்வேலில இருக்கர்துனாலையோ என்னவோ அங்க இருக்கர ஸ்வாமிக்கு கூட நாக்கு 4 முழம். இப்படியே எல்லா சனிக்கிழமையும் தவறாம போய் அங்க இருக்கர ஸ்வாமீட்ட நல்ல பேரு வந்ததோ இல்லையோ, நிறையா மாமிகளுக்கு என்னை பிடிச்சு போச்சு! (விஜி மாமி முகத்தை வெட்டிக்கொண்டாள்).
ம்ம்ம்! அப்பரம் என்ன ஆச்சு?னு வைஷூ ஆர்வமா அவசரபடுத்தினா .
கதை சொல்றவாளுக்கு பெரிய பூஸ்டே அதை கேக்கரவா ஊமையாட்டம் இருக்காம கரக்டா இடைவெளி விட்டு ம்ம்ம்!சொல்லனும்(ப்ளாகா இருந்தா, ஒழுங்கா கமண்ட் போடனும்..:)), அதை வைஷூ கணகச்சிதமா செய்வாள்.

பட்டூ! கொஞ்சம் தேர்த்தம் கொண்டுவாமா!னு வரதாச்சாரி சொல்லிமுடிக்கர்துக்குள்ள குதிரை உசரத்துக்கு இருக்கும் ஒரு டம்ப்ளர் நிறைய தேர்த்தம் அவருடைய கையில் இருந்தது.க்ஹா!னு அதை குடிச்சுட்டு பாகவதர் மாதிரி கதையை தொடர்ந்தார்.
இப்படியே போய்ண்டிருந்த போது , ஒரு சனி கிழமை நரசு மாமாவாத்து மாமி கோவிலுக்கு வந்துட்டா! மாமிகள் பட்டாளத்துக்கு நடுல அங்க நான் பேசிண்டு இருந்ததையும் சிரிச்சுண்டே பாத்துட்டு போய்ட்டா, எனக்கு கொஞ்சம் பயம், மாமி ஒரு வேளை நம்மை பத்தி தப்பா எடுத்துண்டுருவாளோ?னு. ஆனா அந்த மாமிக்கு தங்கமான மனசு, அவாளே இரண்டு நாள்ல(மாமா இல்லாதபோது) அதை பத்தி பேச்சை ஆரம்பிச்சா.
கோந்தை வரதா! கோவில்ல நோக்கு பெரிய ரசிகைகள் பட்டாளமே இருக்கு போலருக்கு?(குசும்புக்கார வைஷு இப்போ அம்மாவோட முகத்தை பாத்தது). வரதா! சும்மா கல்யாணம் ஆன வயசான மாமிகள்ட பேசிண்டு இருந்தா ஒரு பிரயோஜனமும் கிடையாதுடா கோந்தை!னு ரொம்ப சாதாரணமா ஒரு பெரிய உண்மையை எனக்கு எங்க மாமி சொன்னா. அப்போதான் எனக்கு புரிஞ்சது, அட மூளை கெட்ட வரதா! எவ்ளோ நாளை பாழாக்கி இருக்கைடா!னு எனக்கு நானே சொல்லிண்டேன். அடுத்த சனிக்கிழமை வரதராஜர் கோவிலுக்கு போன போது மாமிகள் யார்டையும் ரொம்ப நேரம் எல்லாம் பேசலை, திடீர்னு தீபாராதனைக்காக அங்க இருந்த பெரிய மணியை டைண்! டைண்!னு யாரோ அடிச்சா, இசை வந்த திசை பார்த்து திரும்பினேன். அங்க பார்த்தா.............
(தொடரும்)

குறிப்பு - முதல் தடவை கதை முயற்சி பண்ணியிருக்கேன். அதனால குத்தம் எல்லாம் சொல்லக்கூடாது. கதை எழுதர்து எவ்ளோ கஷ்டமா இருக்கு! (த்ரில்லர் கதை எழுதின நம்ப கழக போர்வாள் 'சியாட்டில் சிங்காரி'க்கு சிலைதான் வைக்கனும். அடப்பாவி தங்ஸ்சையும் சேர்த்துதான். நம்ப ஹரிணி மேடம் கதையும் சூப்பரா இருந்தது.). கதை கேட்டவா எல்லாரும் ஒழுங்கு மரியாதையா வந்து கமண்ட் பொட்டில ம்ம்ம்!கொட்டிட்டு போங்கோ! இல்லைனா ராத்ரி ஸ்வப்னத்துல பெருமாள் வந்து சத்தம் போடுவார்...:)

Friday, May 7, 2010

ஐந்து பாடகர்கள்

உப்புமா, காரட் சாதம்!னு மொக்கையா போட்டுத்தள்ளும் நம்ப LK-வுக்கு ஞானோதயம் வந்து இசைபாடகர்கள் பத்தி எழுதிட்டு மறக்காம தக்குடுவையும் எழுத சொல்லியிருந்தார். சினிமா பாடகர்கள் எல்லாரையும் பத்தி நம்ப பாஸ்டன் நாட்டாமையும், சங்கர் மஹாதேவன் பத்தி ‘பாத்ரூம்’ முன்னனி பாடகியான அனன்யா மஹாதேவனும் ஏற்கனவே சொல்லி விட்டதால் அடியேன் கர்னாடக இசை கலைஞர்கள் பத்தி சொல்லலாம்னு இருக்கேன்.

மகாராஜபுரம் சந்தானம்

சங்கீத உலகில் மறக்க முடியாத ஒரு மஹானுபாவர். நல்ல சாரீரமும் சரீரமும் அமையப்பெற்ற சங்கீத மகாராஜா. 'தக்காளிபழ' கலர்ல ஒரு சால்வை போட்டுண்டு மேடைல ஜைஜாண்டிக்கா இவர் உக்காசுண்டார்னா, கம்பீர நாட்டையை நேர்ல பார்த்த மாதிரி இருக்கும். என்ன ஒரு குரல்!!! நாட்டையில் அமைந்த ஜெகதானந்தகாரகா(அன்னியன்ல ‘ஐயங்காரு வீட்டு அழகு’ பாட்ல கூட வரும்)என்னோட ஆல் டைம் பேவரிட், ஊத்துக்காடு வேங்கடகவி இவருக்காகவே க்ருதிகளை அமைச்சாரோ??னு பிரமிக்க வைக்கும். காம்போதி ராகத்தில் குழல் ஊதினால் எல்லா மனங்களும் கொள்ளைகொண்டு போகும். இவருடைய ‘போ சம்போ!’ பாடலுக்கு பரதம் பயின்ற கால்கள் அனைத்தும் ஆடத்துடிக்கும். என்னோட அப்பா இவரோட 'உச்சிஷ்டகணபதி' ஆல்பம் கேட்டுண்டு இருக்கும் போதுதான் நான் ராங்க்கார்ட்ல கையெழுத்து வாங்குவேன்...:)))



ஹரிதாஸ் கிரி

நாமசங்கீர்தனத்துக்கு புது ரத்தம் பாய்ச்சின அற்புதமான மஹாத்மா, பாடிக் கொண்டே நடுவில் அந்த பாட்டோ/ஸ்லோகமோ இடம் பெற்ற இடத்துக்கே கேட்பவர்களை அழைத்துப் போகும் ஆற்றல் உடையவர். கச்சேரி பண்ணரவா அடுத்து அடுத்து பாடிண்டே ஈசியா போயிடலாம், ஆனால் நடுவில் பாட்டை நிறுத்தி விட்டு ஒரு குட்டி கதை சொல்லிட்டு மீண்டும் அதே சுருதி தாளம் தப்பாமல் பாடலை தொடர்வது என்பது வேகமாக போகும் ஒரு பஸ்லேந்து குதிச்சு ஒருத்தர்ட்ட பேசிட்டு மீண்டும் அடுத்த ஸ்டாப்ல அதே பஸ்ஸை புடிக்கரமாதிரியாக்கும். அந்த விஷயத்துல இவரை யாராலும் மிஞ்சமுடியாது. தேசாசாரம், வட்டார வழக்கு, பேச்சு வழக்கு எல்லாம் இவருடைய நிகழ்ச்சிகளில் ரசிக்கலாம். ஒரு சின்ன காவி துண்டுதான் கட்டிண்டு இருப்பார், ஆனால் பஜனைக்குரிய எந்த பந்தாவும் குறையே வைக்கமாட்டார். ஒரு ராதா கல்யாண சம்பாஷனையில் சப்த நதிகளுக்கும் சீனியரான கங்கா work allocation பண்ணின்டு இருந்தாளாம், அப்போ அங்க ஓரமா தாமிரபரணி நின்னுன்டு பாத்துண்டு இருந்தாளாம். டி, தாமிரபரணி! வெளியூர்லேந்து வரவா எல்லாருக்கும் குடிக்கர்துக்கு தண்ணி கேட்டா நீ குடு! ஏன்னா, எல்லாரோட டேஸ்டுக்கும்/டெஸ்டுக்கும் ஒத்துப்போகக்கூடியவள் நீதாண்டி!னு கங்கா சொன்னதாக அவர் சொன்ன விதம் அருமையோ அருமை.



விசாகா ஹரி

சமீபகாலமாக பிரபல்யம் ஆகி வரும் மற்றுமொரு நல்ல இசைக் கலைஞர். 21வது நூற்றாண்டு வந்தாச்சு, அதனால நம்ப மூத்தவர்கள் சொன்னதை எல்லாம் கேட்காம மனம் போனபடி வாழலாம் எனும் எண்ணம் மேலோங்கி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அழகான அந்த பழைய பாரம்பர்யத்தை போற்றும்படியாக இவரது உடை, பேச்சு, இசை எல்லாம் அமையப்பெற்ற மாண்பு பாராட்டுதலுக்குரியது. அதுக்காக இவா படிக்காத பட்டிக்காடுனு நினைக்க வேண்டாம் பர்ஸ்ட் அடம்டுலையே CA கிளியர் பண்ணியிருக்கா. ஸ்வாமியோட நாமாவையே எப்போதும் ஸ்மரணம் பண்ணுவதாலோ என்னவோ அந்த அக்கா முகத்துல தான் என்ன ஒரு தெய்வீக கலை/களை!! எனக்கு எங்க ஊர் அறம் வளர்த்த நாயகி அம்பாளை பார்த்த மாதிரி இருக்கும். இவாளோட சுந்தரகாண்டம் & ஆண்டாள் கல்யாணம் கேட்டுண்டே இருக்கலாம். சுந்தரகாண்டத்தில் இவருடைய 'குஞ்சு ஆஞ்சனேயர்' பற்றிய வர்ணனை ஹாஸ்யமா இருக்கும். சமயம் கிட்டினா நீங்களும் கேட்டுதான் பாருங்கோளேன்!!



நித்யஷ்ரீ மஹாதேவன்

'பாலக்காடு' மணிஐயர் குடும்பத்துல மட்டும் வராமல் இசை பாரம்பர்யத்லயும் வந்து கொண்டு இருக்கும் இனிமையான இசை கலைஞர். திருமதி. பட்டம்மாள் இசை உலகுக்கு விட்டுச் சென்ற பாட்டம்மாள். ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடல் மூலமாக அனைவரின் கண்களுக்கும் புலப்படத் தொடங்கியவர். பாடும் போதும் சரி மந்திரம் சொல்லும் போதும் சரி அக்ஷர சுத்தம் என்பது அத்தியாவசியமான ஒரு தகுதியாகும். வார்த்தைகளை வஞ்சனை செய்யாமல் நன்னா 'பளிச்'னு பாடனும். அந்த விஷயத்துல நித்யஷ்ரீ அவர்கள் முதலிடம். அதே போல் கீர்த்தனைக்குரிய பாவத்தோட பாடுவதிலும் இவருக்கு நிகர் இவரே. கண்ணை மூடிக்கொண்டு இவர் பாடும் முருகன் பற்றிய விருத்தங்களால் எண்ணில்லா முருகனடிமைகள் இவருடைய சங்கீத அடிமைகள் ஆனார்கள்.



நாகூர் ஹனீபா

என்னடா இது ஒரு இஸ்லாமிய இசை கலைஞரை பத்தி தக்குடுவுக்கு என்ன தெரியப் போகர்துன்னுதானே நினைக்கரேள்?? இசைக்கும் பேதமே கிடையாது. எனக்கு ஸ்கூல்லையும் சரி காலேஜ்லையும் சரி ஏகப்பட்ட முஸ்லீம் & கிறிஸ்டியன் ப்ரெண்ட்ஸ் உண்டு. இந்த ஹனீபா அவர்களோட 'இறைவனிடம் கை ஏந்துங்கள்' என்னும் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப லயிச்சு பாடியிருப்பார். ஸ்கூல் படிக்கும் காலங்களில் நெல்லை வானொலியில் கார்த்தால 6.30 இந்த பாட்டு வரும். எந்த ஸ்வாமியா இருந்தா என்ன? பக்தியும் பாவமும் தான் முக்கியம்.அவரோட அந்த பாட்டை அதீதமா கேட்டதுனாலதான் இப்போ கத்தார்ல வந்து ஒட்டகம் மேய்ச்சுண்டு இருக்கேன்...:) (ராமன் அப்துல்லாவில் வரும் “உன் மதமா என் மதமா?ஆண்டவன் எந்த மதம்” பாடினது இவர்தான் என்பது உபரி தகவல்).



குறிப்பு - தொடர்பதிவுக்கு அடுத்து அஞ்சு பேரை அழைக்கனும்னு ரூல்ஸ் இருக்கு. தக்குடு மேல ரொம்ப இஷ்டம்/பாசம் உள்ளவா & செளகர்யப்படரவா எல்லாரும் இதை தொடரலாம். ஆனால் பதிவு போடுட்டு எனக்கு சொல்லனும் சரியா?? (அப்பாடி தப்பிச்சாச்சு!!)...;)