Thursday, May 26, 2011

நேயர் விருப்பம்

லோகத்துல நல்லதுக்கே காலம் இல்லை கேட்டேளா? நாம பாட்டுக்கு பாணிபூரி,குலோப்ஜாமூன் அப்பிடின்னு எல்லா மனுஷாளுக்கும் பிரயோஜப்படும் படியான விஷயங்களை சொல்லிண்டு "சிவ சிவா ராம ராமா!"னு யார் வம்புக்கும் போகாம காலத்தை ஓட்டினாலும் தக்குடு வாயை பிடுங்கர்தே குறி!னு இருக்கரவாளை என்னனு சொல்லமுடியும்!! அவாளை சொல்லியும் குத்தம் இல்லை. எப்ப பாத்தாலும் பருப்பு கஞ்சியையும் சுட்ட அப்பளாமுமே சாப்டுண்டு இருக்கமுடியுமா? கொஞ்சம் ' நறுக்கு'னு காரம் சாரம் எல்லாம் வேண்டிதான் இருக்கு.

பல மாசமாவே "சமைத்துப் பார்", "சாப்பிட்டும் பார்", So & So அடுக்களை,Mrs. மடப்பள்ளி இந்த மாதிரி எந்த ப்ளாக் பக்கமும் தலை வெச்சே படுக்கர்து கிடையாது. So & So எதுக்கு போட்டு இருக்கை?னு யாரும் கேக்காதீங்கோ! நாம அஹஸ்மார்த்தா எதாவது பேர் போட்டா கூட அந்த பேர்ல ஒரு சமையல் ப்ளாக் இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த ‘பாங்க்’ மாமி, ‘நைஜீரியா’ மாமி எல்லாரோட வாய்க்கும் நாம தான் அவல்.

சமையல் ப்ளாக் எழுதரவாளோட முக்கியமான பிரச்சனையே அவாளோட பதிவுக்கு போடும் போட்டோ தான். எல்லாரோட ஆத்துக்காரரும் பானோசானிக் / சோனி எல்லாம் வாங்கி தரமாட்டா, அதனால அங்க இங்கேர்ந்துதான் போட்டோவை ஆட்டையை போட்டு போஸ்ட் போட வேண்டி இருக்கு. இதுல சிலபல பஞ்சாயத்து எல்லாம் வந்துடர்து. பஞ்சாயத்துகளை தவிர்க்க சில யோசனைகளை பார்கலாம்.

‘தேங்காய் சாதம்’னு போஸ்ட் போடும் போது தேங்காயோட படம் எல்லாரும் போடத்தான் செய்வா, அதுக்காக “இந்த தேங்காயோட படம் என்னோட ப்ளாக்ல நான் போட்டது!”னு குழந்தையாட்டமா குத்தம் சொல்லகூடாது. போஸ்ட் போடறவாளும் கூகுளாண்டவர் கிட்ட ‘தேங்காய்’னு சர்ச்ச் குடுத்தாக்க பொள்ளாச்சில விளைஞ்ச தேங்காய்ல தொடங்கி பிலிபைன்ஸ்ல மூக்கு சப்பையா இருக்கும் ஒரு மாமா கைல வச்சுண்டு இருக்கும் தேங்காய் வரைக்கும் குடுக்கர்து. சமயத்துல பிள்ளையார் கோவில் வாசல்ல உடைச்ச சிதறு தேங்காய் படம் கூட வருது! அதுல எதாவது ஒன்னை எடுத்து போட்டுக்கோங்கோ!

இந்த டம்பளர் வசந்தபவனில் ஆட்டய போட்டது'னு பேர் எழுதி வெச்ச மாதிரி இருக்கும் போட்டோலையும் கை வைக்காம இருங்கோ. இதுல என்ன காமெடின்னா ஆத்து மனுஷாளை போட்டோ எடுத்து மூஞ்சி புஸ்தகத்துல போட்டாலும் சிலபேரோட போட்டோல "J@#i’s கிச்சன்" வாட்டர்மார்க் இல்லாம இருக்காது. “இந்த அக்கா எதுக்கு எல்லா போட்டோவையும் அடுக்களைல வெச்சே எடுத்துண்டு இருக்கா?”னு ரொம்ப நாளைக்கு புரியாம முழிச்சுண்டு இருந்தேன்.

பதார்தத்துக்கு பேர் குடுக்கும் போதும் எதாவது வித்தியாச குடுத்தாக்க பிரச்சனை வராது. பிள்ளையார் கோவில் விஷேஷத்துல ராத்ரி நோட்டீஸ் போர்டுல அதிகாலை "கஜ கிண்டி ஹோமம்"னு எழுதி வெச்சுட்டோம். காத்தால 5 மணிக்கு கோவில் வாசல்ல வழக்கம் போல ஒரே மடிசார் & பஞ்சகச்ச கூட்டம். கணபதி ஹோமம்தான் நடந்துண்டு இருந்தது. கணபதி ஹோமத்துக்கு யானை எல்லாம் வந்து இருந்தது. கூட்டத்துல இருந்த ஒரு மாமி மெதுவா “கஜகிண்டி ஹோமம்னு போட்ருக்கேளே?”னு இழுக்கவும், “ஆந்திரால எல்லாம் கணபதி ஹோமத்தை இப்படி தான் சொல்லுவா!”னு முகத்தை பாவமா வெச்சுண்டு சொன்ன போது கொஞ்சமா நம்பினாலும் அதுக்கு அப்புறம் கொஞ்சூண்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சு ‘போஸ்டாபிஸ்’ ஹரிகுட்டி காரியத்தையே கெடுத்துட்டான்.

பிலிப்ஸ் ரேடியோல திருனெல்வேலி ஸ்டேஷன்லேந்து அவசரமா இலங்கை ஸ்டேஷன் திருப்பின மாதிரி செல்லமா மன்னி நம்ப காதை முறுக்கிட்டா. ரெண்டு நாளைக்கு காது மடல்ல செம வலி. நிற்க! நீங்களும். இந்த மாதிரி ‘பிசிபேளாபாத்’ பத்தின போஸ்ட் போட்டாலும் ‘பகாளாபாத்'னு தலைப்பு குடுத்தாக்க கொஞ்சம் வித்தியாசமா இருக்குமோ இல்லையோ? அதுக்கு அப்புறம் கூகுள்ல ‘பகாளாபாத்’னு யாராவது தேடினா கூட நம்பளோடுது தான் முதல்ல வந்து நிக்கும். எதிகாலத்துல ‘பகாளாபாத்’னு போஸ்ட் போடும்போது பெயர் உபயம் தக்குடு!னு போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை..:)



Mr. கஜராஜன்

எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா இந்த மாதிரி எந்த பொல்லாப்புலையும் மாட்டிக்கவே மாட்டா. “கார்திகை பொரிக்கு பாகு செலுத்துவது எப்பிடி”, “பிள்ளையார் கொழுக்கட்டைக்கும் பிடிச்ச கொழுக்கட்டைக்கும் என்ன வித்தியாசம்?” இந்த மாதிரி பதிவா போட்டு எல்லாருக்கும் ப்ரண்ட் ஆயிட்டாங்க. நோம்பு அடையை பத்தி சொல்லவே இல்லையே?னு யாரும் கேக்காதீங்கோ!..:)) சிங்கபூர்ல இருக்கும் இந்த ‘நோம்பு அடை’ அக்காவோட வீடு ‘சரவணபவன்’ ஹோட்டல் மாதிரி எப்ப பாத்தாலும் விருந்தாளிகளால ரொம்பி வழியர்தா அங்க உள்ள லோக்கல் நியூஸ் பேப்பர்ல வந்து இருக்கு. இப்ப எல்லாம் சிங்கபூருக்கு போறவா அந்த ஊர்ல இருக்கும் சிங்கத்துக்கு பக்கத்துல நின்னுண்டு போட்டோ எடுக்கராளோ இல்லையோ நேரா இவாத்து காலிங் பெல்லை அடிச்சு ஒரு வேளை சாப்பாடாவது இவாத்துல சாப்பிடாம வரர்து கிடையாது. யாராவது கெஸ்ட் வரர்தை பாத்தாலே இவாளோட ரங்கமணி(அதான் நம்ப அத்திம்பேர்) "மேடத்துக்கு ஒரு ரவாஆஆஆ தோசை"னு ராகமா சொல்லி நக்கல் சிரிப்பு சிரிச்சுட்டு போறாராம்.

இன்னொரு அக்காவோட பானகம் போஸ்டை பத்தி ஒன்னுமே சொல்லலையே தக்குடு?னு ‘பாங்க்’ மாமி வம்புக்கு இழுத்தாலும் நான் எதுவும் வாயை திறக்க மாட்டேன்பா! பானகம் போஸ்டை எல்லாம் நக்கல் அடிச்சாக்க ராமர் உம்மாச்சி ராத்ரி ஸ்வப்னதுல வந்து கண்ணை குத்துவார்! அவாளோட ப்ளாக்ல அனேகமா கோகுலாஷ்டமிக்கு 'சுக்கும் சக்கரை' போஸ்ட் வந்தாலும் வரலாம், வந்தாக்க ஒரு வார்தை எனக்கும் சொல்லுங்கோ!..:)

குறிப்பு - இந்த போஸ்ட் சும்மா 'லூலூவாயிக்கு'தான். அதனால பத்தினி தெய்வங்கள் யாரும் தக்குடுவை திட்டி தீர்க்காதீங்கோ! அப்பிடியே திட்டினாலும் சம்பந்தப்பட்டவா மட்டும் திட்டுங்கோ,”ஒரு பிள்ளைபூச்சி சிக்கியிருக்கான் சும்மா இருந்தா வாடி!”னு அடிக்கர்துக்கு உங்க ப்ரண்டையும் போன் போட்டு கூட்டிண்டு வராதீங்கோ!...:) எல்லாரோட அர்சனையையும் நைஜீரியா மாமிக்கு அனுப்பி வைங்கோ!...:)

Thursday, May 19, 2011

வேலை தேடும் வேலை

Part 1 படிங்கோ முதல்ல

நாளும் பொழுதும் வேகம் வேகமா ஓடித்தே தவிர உருப்படியான வேலை எதுவும் கிடைக்கலை. நானும் எத்தனை நாளைக்கு தான் பாணி பூரி சாப்பிடரவாளோட வாயை பாத்துண்டு பொழுதை கழிக்கர்து? சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிலையும் எனக்கு தெரியாத கேள்வியை மட்டுமே கேட்டுண்டு இருந்தா. (இருக்காதா பின்ன, ஊர்ல உள்ள மாமா/மாமிகளோட எல்லா சாபத்தையும் மொத்த கான்ட்ராக்ட் எடுத்து வெச்சுருக்கேனே!) ஒரு கட்டத்துல ராத்ரி தூக்கத்துல கூட “ஐ யம் தக்குடு! தின்னவேலி வெட்டி ஆபிசர், லுக்கிங் பார் ய குட் ஜாப்! மேனஜர் போஸ்ட் ஆல்ஸோ ஓக்கே!”னு பொலம்ப ஆரம்பிச்சுட்டேன்.

அம்மன் கோவில் கொடைவிழா பத்திரிக்கை மாதிரி என்னோட பயோடேட்டா இல்லாத கம்பேனியே இல்லைனு ஆயிடுத்து. ரகுமான் மியூஜிக் போட்டு குடுத்த ஒரு செல்போன் கம்பேனில சிம் கார்ட் விற்கும் வேலைக்கு கூட உள்ள நுழைஞ்சு பாத்தேன், கன்னடம் தெரியலைனு சொல்லி ' நோ' சொல்லிட்டா! லூசாடா நீ!னு எங்க அண்ணாச்சி காய்ச்சி எடுத்துட்டான். 'தாட்பூட் தஞ்சாவூர்!'னு கோவம் வந்தா கத்துவானே தவிர என் மேல அவனுக்கு பாசம் ஜாஸ்தி.

ஐயப்ப படி பூஜைல "ஒன்னாம் திருப்படி சரணம் பொன்னயப்பா"னு பாடர மாதிரி எங்க போனாலும் மொதல்ல ஒரு எழுத்து தேர்வு அப்புறம் 3 - 4 ரவுண்ட் நேர்முகம்/மறைமுகம் எல்லாம் வரும். ரெண்டு மாசமா படை எடுக்கர்தால உள்ள நுழைஞ்ச உடனேயே சரணம் போட ஆரம்பிச்சுருவேன். என்னிக்கும் இல்லாத திருநாளா ஒரு கம்பேனில எனக்கு தெரிஞ்ச கேள்வியை மட்டும் பிரிண்ட் பண்ணி குடுத்த மாதிரி ஒரு டெஸ்ட் குடுத்தா. "அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி! டைண் டைண் டைண்!"னு எனக்கு பாடனும் போல இருந்தது. சீக்கரமே டெஸ்ட் எழுதி முடிச்சதால அங்க இருந்த ஹெச் ஆர் பிகர் ஏன் லைட்டா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு இருக்கா?னு ரொம்ப தீவிரமா யோசிச்சுண்டு இருந்தேன். ‘கிக் பாக்ஸிங்’ மாதிரி எல்லா ரவுண்டையும் முடிச்சு ஒரு பெரிய தலையோட பேசர்துக்கு போயாச்சு. பாக்கர்துக்கு நன்னா சிரிச்ச முகமா இருந்தார். என்னமோ காதலை சொல்ல தவிக்கும் காதலர்கள் மாதிரி ஹலோ! ஹவ் ஆர் யூ? எல்லாமே ரெண்டு பேரும் ஒரே சமயத்துல சொல்லிண்டோம். இது கதைக்கு ஆகாது!னு முடிவு பண்ணி, நீங்க முதல்ல சொல்லுங்கோ!னு கூலா சொல்லிட்டேன். அவருக்கு பயங்கர ஆச்சரியம் & சிரிப்பு.



பெரியதலை & தக்குடு...:)

உக்காச்சுண்டு இருத்த சேர்ல ஆடிண்டே நெஞ்சுல கை வெச்சுண்டு நர்சரி ஸ்கூல் குழந்தையாட்டமா அழகா சொன்னார். சிரிச்சமுகத்தோட டை கட்டின அந்த எஜமான் சொன்னதை எல்லாம் கை கட்டி உக்காசுண்டு இருந்த நான் ரசிச்சு கேட்டேன். அவர் சொன்னதுலேந்து அந்த ஆபிஸ்ல சுமாரா ஒரு 500 பேருக்கு அவர்தான் நாட்டாமைனு புரிஞ்சது. அவர் எல்லாம் சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் "ஹை! ஐ யம் சஞ்சய்ராமசாமி!" ஸ்டைல்ல நான் பேச ஆரம்பிச்சேன். எனக்கும் என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனுக்கும் பொம்ணாட்டிகளுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கு ‘கைனகாலஜிஸ்ட்’னு கூட சொல்ல தெரியாது. என்னமோ ‘லேடிஸ்’ டைலர் மாதிரி ‘லேடிஸ்’ டாக்டர்னு தான் சொல்லுவோம் அந்த அளவுக்கு இங்கிலீபீஷ்ல பெரிய அப்பாடேக்கரா இருந்தாலும் அதை எல்லாம் வெளில காமிச்சுக்காம நம்ப விபா அக்கா மாதிரி "ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்டாங்க, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்டாங்க!"னு அள்ளிவிட்டேன். எல்லாத்தையும் கேட்டுட்டு "செம்மொழி குறித்து தனிகுழு விவாதிக்கும்! கனிமொழி பற்றி பொதுகுழு முடிவெடுக்கும்!"னு நம்ப தாத்தா ஸ்டைல்ல எதோ சொல்லிட்டு ஹெச் ஆர் பிகரை பார்த்து கைகாட்டிட்டு அந்த பெரிய தலை போய்டார்.

காத்தால இருந்த அதே ஹெச் ஆரும் நானும் ஒரு கண்ணாடி கூண்டு மாதிரி இருந்த ரூம்ல சம்சாரிக்க ஆரம்பிச்சோம். இந்த தடவை ஒழுங்கா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு வந்துருந்தா என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல தக்குடு கடமைபட்டுள்ளான். கூண்டுக்கு வெளில வைரமுத்து இருந்திருந்தா "கைவளை குலுங்கும் கண்மணியே! உனைகண்ணாடி கூண்டுக்குள் அடைத்தது யாரடி? யூகங்கள் பல செய்தும் பூகம்பம் மட்டும் எஞ்சுகிறது என் நெஞ்சில்"......னு பாட ஆரம்பிச்சு இருப்பார். இட்லி மாமியா இருந்தா ஒரு 'உ' கவிதையை அவுத்து விட்டுருப்பா..:)



கோட் போட்ட சப்பாத்தி...:)


“நீங்க என்ன எதிர்பாக்கறேள்?”னு கல்யாணப் பொண்ணோட தாய்மாமா மாதிரி அவங்க தான் ஆரம்பிச்சாங்க. “மூனு வேளை சாப்பாடு போட்டு முப்பது ரூபா தாங்கோ மூனு நாள் கண் முழிச்சு ஆணி பிடுங்கறேன்!”னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். அப்புறம் அவாளே ஒரு நல்ல தொகையை சம்பளமா சொல்லி தக்குடு வாழ்க்கைல விளக்கேத்தி வைச்சா. ‘செவ்வாய் புதன் வடக்க சூலம்’ அதனால வியாழக்கிழமைலேந்து வேலைக்கு வரட்டுமா?னு கேட்டேன் “பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது”(சோனா மிலேகா, புதவார் நயி மிலேகா) எல்லாம் அவாத்துல சொல்லிக்கமாட்டா போலருக்கு அதனால அவாளும் " வியாழக்கிழமை வாங்கோளேன்!!"னு சொல்லி வழியனுப்பி வைச்சா. வெளில வந்ததுக்கு அப்புறம் தான் நம்ப ஆபிஸ் எந்த இடத்துல அமைஞ்சுருக்குனு எனக்கு விளங்கித்து. வடக்கே இமயமலையும், தெற்கே இந்திய பெருங்கடலும்னு பள்ளிகூடத்துல நாம படிச்ச மாதிரி வலது பக்கம் சென்ட்ரல் மாலும், இடது பக்கம் கருடா மாலும்,ஒரு நடை எடுத்து வெச்சா பிரிகேட் ரோடு & கமர்ஷியல் தெரு என கலகலப்பான சூழ்நிலையோடு ரம்மியம் கொஞ்சும் அழகான ஒரு பிருந்தாவனம்னு சொன்னா அது மிகையாகாது.

இந்த மால் எல்லாமே புத்தி இல்லாம செலவழிக்கும் வடக்கத்தி சப்பாத்திகளை கணக்கு பண்ணி கட்டிவெச்சுருக்கும் மாயலோகம். 50 பைசாவுக்கு ‘வைராவி அண்ணா’ டெண்ட் கொட்டாய்ல அச்சுமுருக்கு வாங்கி சாப்பிட்ட நம்ப மாதிரி அரைடிக்கெட்டுகளுக்கு எல்லாம் ஒத்து/ நாயனம் எதுவுமே வராது. கரும்பு ஜூஸுக்கு 40 ரூபா குடுக்கர்துக்கு தக்குடு என்ன அகர்வாலாத்து சமத்துகுடமா? இருந்தாலும் பொழுது போகாதபோதெல்லாம் அங்க போய் எத்தனை சமத்துகள் காசை கரியாக்கிண்டு இருக்கு?னு பாத்துட்டு வருவோம். சுருக்கமா சொன்னா ‘சமைத்துப்பார்’ புஸ்தகம் மாதிரி தான், எந்த புஸ்தகத்துலையும் சமைச்சுட்டு சாப்பிடு!னு போடவே மாட்டான். லதாஜி நன்னா பாத்துக்கோங்கோ! இங்க சமையல் ப்ளாக் பத்தி தக்குடு எதுவும் சொல்லலை...:)

ஆபீஸுக்கு உள்ள எப்பிடி இருந்தது தெரியுமோ????.......

(கனவுகள் வளரும்)

Thursday, May 5, 2011

பாணி பூரி

சின்ன வயசுலேந்தே எனக்கு பெங்களூர்னா ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உண்டு. “யாம் அறிந்த மொழிகளிலே”னு கடையத்து மாப்பிள்ளை சொன்ன மாதிரி நமக்கு தெரிஞ்ச நகரங்கள்ல பெங்களூர் மாதிரி எதுவும் வராது. “தக்குடு! அது பெண்களூர்ங்கர்துனால தானே நோக்கு பிடிக்கும்?”னு சில மன்னார்குடிகாரா வலையை விரிக்க முயற்சி பண்ணலாம். ஆனா அது மட்டுமே காரணம் கிடையாது. எங்க தெருல கோடை விடுமுறைக்கு வரும் பெங்களூர்காராளோட "அங்க அப்பிடியே பாலும் தேனுமா கரைபுரண்டு ஓடர்து, குடிக்கர்துக்குதான் ஆளே இல்லை" மாதிரியான சம்பாஷனைகள் கூட ஒரு காரணமா இருக்கலாம்.

நான் போய் பெங்களூர்ல இறங்கின அன்னிக்கி வியாழக்கிழமை அதனால வெள்ளிக்கிழமை சாயங்காலம்தான் "வெளில போய் 4 கடை கன்னி எல்லாம் காட்டரேன்"னு சொல்லி எங்க அண்ணா கூட்டிண்டு போனான். நம்ப ஊர் மாதிரி வெள்ளிக்கிழமை இங்க கோவிலுக்கு எல்லா பயலும் படை எடுக்க மாட்டான். ஆனா சனிக்கிழமை எந்த கோவிலுக்கு உள்ளேயும் நுழைய கூட முடியாது. மூனு முக்கு தாண்டினா ஒரு அனுமார்கோவில் கட்டாயமா இருக்கும். சனிக்கிழமை அன்னிக்கி இந்த அனுமார் எல்லாம் சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன்,எக்ஸ்மேன் அலங்காரங்களில் 100 - 120 பூ மாலையுடன் காட்சி தருவார். எல்லா கோவில்லையும் பிரசாதம் கை நிறைய தருவா. சனிக்கிழமை சாயங்காலம் ஆனா நானும் எங்க அண்ணாவும் நாலு கோவிலுக்காவது கட்டாயமா போயிட்டு வருவோம்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கோவில் எல்லாம் ஈ ஆடும். ஸ்வாமியும் எதோ விசு படத்துல வரும் கதானாயகி மாதிரி ஒரே ஒரு முழம் மல்லி பூவும் ஒத்தை ரோஜாவும் வெச்சுண்டு ரொம்ப விஷ்ராந்தியா இருப்பார். எல்லா கூட்டமும் மால் பக்கத்துலையும், தியேட்டர்லையும் கும்மி அடிச்சுண்டு இருக்கும். ‘திருச்சந்தூரில் கடலோரத்தில்’ பாட்டுல வரும் டி.எம்.ஸ் & சீர்காழி மாதிரி நானும் எங்க அண்ணாச்சியும் மால்ல போய் நிப்போம். சப்பாத்தி பிகர்கள் கும்பலா கடந்து போகும் போதெல்லாம் " “நம்பியவர் வந்தாஆஆஆர்! நெஞ்சுருகி நின்றாஆஆஆர்"னு எல்லாம் முகத்துல உணர்ச்சி பெருக்கை காட்டமாட்டோம்.



நானும் அண்ணாச்சியும்....:)

எஸ்கலேட்டர் பக்கத்துல நாம நின்னுன்டு இருக்கும் போது 40 படி இருக்கும் ஒரு மாடிப்படில ஒரு கொய்யாப்பழ மூட்டையோட ஏறிண்டு இருக்கும் போது 35வது படில வச்சு மூட்டை கைலேந்து தவறி மூட்டையோட வாய் திறந்து மூட்டைல உள்ளது எல்லாம் வெளில வந்து படில குதிச்சு வந்த மாதிரி எதாவது ஒரு அமீர்கான் படத்தை பாத்துட்டு 4வது ப்ளோர்லேந்து திடீர்னு ஒரு சப்பாத்தி கோஷ்டி அச்சாஹை! குச்சாஹை!னு பேசிண்டே நம்மை தாண்டி போகும். அதுக்கு எல்லாம் நம்ப மனசு கிலேசமடையக்கூடாது.

ஆரம்பத்துல இவாளோட கன்னட பாஷை ஒரு எழவும் புரியாம இரட்டை மரியாதையோட(திருதிருனு தான் எப்போதும் சொல்றோமே) முழிச்சுண்டு இருந்தேன், தொடர்ந்து முயற்சி பண்ணினா நாமளும் நன்னா கன்னடா பேசலாம். ஒரு சமயத்துல கோவில்ல ரெண்டு பொம்ணாட்டிகளுக்கு நடுல நடந்த சண்டையை தீர்த்து வச்சு மத்யஸ்தம் பேசர அளவுக்கு கன்னட மொழில புலமை பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சுடுத்துன்னா பாத்துக்கோங்கோளேன்.( என்னோட ஜாதக ராசி, அங்க போயும் பொம்ணாட்டிகள் சண்டைலதான் மத்யஸ்தம்). தமிழ் நாட்டுலேந்து இங்க பொழப்புக்கு வந்த பலபேர் என்னவோ பொறந்ததுலேந்தே பாணிப்பூரி, பேல்பூரியோட ரெட்டைபுள்ளையா ஒட்டி பொறந்த மாதிரி பொலந்துகட்டுவா. சில பேர் காணாதுகண்ட மாதிரி மத்தியானம் 12 மணிக்கு எல்லாம் 'லபக் லபக்'னு பேல்பூரியை வி@#ரோ ஆபிஸ் வாசல்ல நொசிக்கிட்டு அப்புறம் ரெஸ்ட்ரூம்ல போய் ஒரு மணி நேரமா 'டமால் டுமீல்'னு வெடிவழிபாடு பண்ணிண்டு இருப்பா( 'I am in the middle of one important meeting'-நு ரெஸ்ட்ரூம்லேந்து செல் போன்ல பேசி காமெடி பண்ணுவா).

பாணிபூரி சாப்பிடர்துக்கு எல்லாம் ஒரு சம்பிரதாயம் இருக்கு. தத்தியாட்டமா ஒரு தட்டுல 6 பாணிபூரியை வெச்சு ஒரு கிண்ணத்துல ஜீரக ஜலத்தை வெச்சுண்டு சாப்டரவாளை பாத்தாக்க எனக்கு சிப்பு சிப்பா வரும். கோரமங்கலால(பெண்களூர்ல ரம்மியமான ஒரு பகுதியோட பேர்) நாங்க இருந்த போது ராத்ரி 8.30க்கு மேல ஒரு வடக்கத்திக்காரர் அவரோட பாணிபூரி கூடையை கொண்டு வந்து அவுப்பார். கிருஷ்ணரை சுத்தி நிக்கும் கோபிகாஸ்த்ரீகள் மாதிரி முக்கால் காலுக்கு டவுசர் போட்ட சப்பாத்தி பிகர்கள் சுத்தி நிக்க ஆரம்பிச்சுடுவா. “ஒரு குலாப்ஜாமூனே பாணிபூரி சாப்பிடுகிறதே! அடடா ஆச்சரியகுறி”னு சொல்லும்படியா ஆசை ஆசையா சாப்டுவா. காய்ஞ்ச இலைல பண்ணின ஒரு தொண்னையை எல்லார் கைலயும் குடுத்துட்டு ஜல்ஜீரால முக்கி முக்கி வட்டமா எல்லாருக்கும் "அம்மாவுக்கு ஒரு வாய்! அப்பாவுக்கு ஒரு வாய்! கோந்தைக்கு ஒரு வாய்!" மாதிரி தொண்னைல போடுவார். அந்த குட்டி பூரிக்கு உள்ள இருக்கும் ஜலம் வெளில சிந்தர்துக்கு முன்னாடி நம்ப வாய்ல போட்டுக்கனும். நானும் எங்க அண்ணாவும் எதிர் எதிர் திக்குல இரண்டு சப்பாத்திக்கு நடுல போய் ஜோதில ஐக்கியமாயிடுவோம். நாம கொஞ்சம் சாப்பிட தெரியாம சிரமபட்டாக்க “ஏ நயி! ஓ நயி!”னு சப்பாத்தி பொண்ணு அழகா நமக்கு சொல்லி தரும். அது சொல்லி தர அழகுக்கே ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு எப்பிடி சாப்பிடனும்ங்கர விஷயம் மறந்து போயிடும்னா பாத்துக்கோங்கோ...:)



சப்பாத்திகள் சொக்கி விழும் வஸ்து....:)

பந்தில ‘கிள்ளு’ பாயாசம் விட்டு தயிர் பச்சடி வரர்துக்குள்ள வழிச்சு நக்கும் நம்மோட அசகாய வேகத்தை எல்லாம் பாணிப்பூரி சாப்பிடும் போது காட்டினாக்க ஜல்ஜீரா மூக்குல போய் பொரையேரிண்டு அப்புறம் ‘அம்மா நினைச்சுக்கரா! ஆட்டுகுட்டி நினைச்சுக்கர்து!’னு சொல்லிண்டு நமக்கு நாமே தலையை தட்டிக்க வேண்டி இருக்கும். அதுக்காக மோர் விடும் போது ரசத்துக்கு சாதம் கேக்கும் படியா மெதுவா சாப்டாக்கா பாணிபூரிகாரருக்கு கணக்கு ஒலம்பிடும். இயல்பான வேகத்துல சாப்பிடனும் (தெரியலைனா பக்கத்துல நொசுக்கும் குலாப்ஜாமூனை பாத்துக்கலாம்).

கனவுகள் தொடரும்....:)