Thursday, March 27, 2014

ஆஸ்பத்திரி

எலெக்ஷன் சமயம் மட்டும் தொகுதியை எட்டிப் பார்க்கும் எம் பி கதை ஆயிடுத்து நம்ப கதை. 'பிள்ளையை பெத்துப்பாரு பாம்பெர்ஸை போட்டுப்பாரு"னு சும்மாவா சொல்லிவச்சுருக்கா. ரொம்ப பிஸியோ பிஸி! நானும் கொஞ்சம் ஃப்ரீ ஆனதுக்கு அப்புறம் எழுதலாம் எழுதலாம்னு தள்ளிண்டே இருக்கேன். தமிழக பி ஜே பி-யோட தொகுதி உடன்பாடு மாதிரி முடிவுதெரியாம போயிண்டே இருக்கு. கடைசி நாள்ல வந்து வேட்புமனு தாக்கல் பண்ணற மாதிரி ஒரு வழியா வந்தாச்சு அதனால பெரிய மனசு பண்ணி எல்லாரும் மன்னிச்சுக்கோங்கோ.

கல்யாணம் கழிஞ்சதும் மராத்தான் ரேஸ் உண்டுனு நான் நினைச்சு கூட பாக்கலை. தமிழ் நாடு கேரளா கர்னாடகானு பெர்மிட் வாங்கின லாரியாட்டமா சுத்தி சுத்தி வந்துண்டு இருந்தோம். என்னோட டூர் ப்ளானை பாத்துட்டு தங்கமணிக்கு உள்ளூர கோபமும் எரிச்சலுமா இருந்தாலும் கூட்டணி தர்மத்துக்காக பொறுமையா வந்தா. எல்லா ஊர் தண்ணியையும் குடிச்சுட்டு நல்ல குளிர்ல தோஹாவுக்கு வந்தா இங்கையும் குளிர்காலம். வந்த இரண்டாவது நாள் நெஞ்செல்லாம் கபம் கட்டிண்டு மிமிக்கிரி ஆர்டிஸ்ட் மாதிரி குரல் மாறிண்டு இருந்தது. இந்தியால இருந்த தங்கமணி கிட்ட விஷயத்தை சொன்னா கவலைபடுவானு சொல்லாம போன்ல “ஓ! எனக்கென்ன குத்துக்கல்லாட்டமா செளக்கியமா இருக்கேன்!”னு புளுகிட்டேன்.

அடுத்த நாள் காத்தால கைகால் நடுங்க ஆரம்பிச்சதால காரோட்ட முடியலை. பக்கத்துல இருந்த ஒரு தெரிஞ்சவாளுக்கு போன் பண்ணி ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போகமுடியுமா?னு ஜாரிச்சேன். அவாளும் வந்து பக்கத்துல இருக்கும் ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டுபோனா. அந்த ஆஸ்பத்திரி நம்ப ஊர்ல எல்லாருக்கும் ரொம்ப பரிச்சியமான ஒரு ஆஸ்பத்திரிதான். முன்னாள் அமைச்சர்களை சி பி ஐ விசாரிக்கவருதுன்னு கேள்விப்பட்டா உடனே போய் படுத்துக்கர இடம், நம்ப ஊர்ல எல்லா பக்கமும் இருக்கும் போட்டோ ஸ்டூடியோவுக்கும் இவாளோட பேர்தான், உள்ள நுழைஞ்சாலே தீவட்டிகொள்ளைதான்னு சொல்லாமசொல்ற மாதிரி ஒரு நர்ஸ் கைல தீவட்டி/ஜோதி ஏந்தின மாதிரி லோகோ இருக்கும். ரிஷப்ஷன்ல மலையாளிங்கிலிஷ் பேசும் ஒரு ஓமணக்குட்டி தான் உக்காசுண்டு இருந்தா. நான் புதுசா வந்துருக்கர்தால 'ஒரு ஓஃபர் உண்டு'னு பேச ஆரம்பிச்சது. நான் பாக்கர்துக்கு கொஞ்சம் மலையாளத்தான் மாதிரி இருக்கர்தை வெச்சுண்டு, ஏசியானெட்டை ஓன் பண்ணினமாதிரி வேகமா மலையாளத்துல “ஈ ஓஃபர் எடுத்தா மூனு திவசம் ஃப்ரீ கன்சல்டிங் கிட்டும்!”னு ஆரம்பிச்சா. கூட்டிண்டு வந்த என்னோட ப்ரெண்டுக்கு ஒரே குழப்பமா ஆயிடுத்து. “கடங்காரி! உள்ள நுழையும் போதே திவசம்/மாசியம்/செளண்டினு அபசகுனமா பேசராளே?னு யோசிக்கரமாதிரி இருந்தது. “இவா ஆஸ்பத்திரில வச்சு நாம போய்சேர்ந்தா மூனு வருஷத்துக்கு ப்ரீயா திவசம் போடுவாளாம்”னு மெதுவா நக்கல் அடிச்சேன். செல்போன் ரீசார்ஜ் கடைல வேலைபாக்கரவா மாதிரி மறுபடியும் விடாம அடுத்த ஓஃபர் பத்தி சொல்ல ஆரம்பிச்சா. “அம்மா மலையாளபகவதி! திவசமெல்லாம் தாமிரபரணி நதிகரைல நாங்க எங்காத்து வாத்தியாரை வச்சு போட்டுக்கறோம் நீ எனக்கு ஒரு அப்பாயிண்மெண்ட் மட்டும் போடு!”னு சொன்னதுக்கு அப்புறம் வேற வழியில்லாம டோக்கன் குடுத்தா.



தீவட்டி கொள்ளை


எண்ணெய் சட்டிலேந்து எம்பி குதிச்சு வெண்ணீர் பானைல விழுந்த கதையா அங்க ஒரு டாக்டர் இருந்தார். எனக்கு முன்னாடி வந்து பாத்துட்டு போனவரை பத்தி விலாவாரியா சொல்லிட்டு “பாவம் பொழைக்கர்தே கஷ்டம்”னு முடிச்சார். நாக்கை நீட்டு! மூக்கை காட்டு!னு சொல்லிட்டு ஒரு எக்ஸ்ரே எடுத்துண்டு வந்துடுங்கோ!னு அனுப்பினார். “பர்ஸ்ட் நைட் ரூம்ல மூனு பேர் எங்கையும் கேள்விபட்டதில்லை கேட்டையா?”னு புலம்பும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ கமலாட்டமா “காய்ச்சல்/ஜலதோஷத்துக்கு எக்ஸ்ரே இங்கதான் முதல் முதலா கேள்விபடறேன்”னு பொலம்பிண்டே போய் எடுத்தேன். எதிர்பாத்தமாதிரியே ரிப்போர்ட்ல ஒன்னும் வரலை ஆனா பலசரக்கு சாமான் லிஸ்ட் மாதிரி ஒரு 8 மருத்து எழுதினார். வெளில வந்துட்டு எனக்கு அடுத்து உள்ள வரர்துக்கு காத்துண்டு இருந்தவர் கிட்ட “எனக்கு ரெண்டு நாளா கொஞ்சம் காய்ச்சல்/ஜலதோஷம், அதனால எக்ஸ்ரே எடுத்து மருந்து வாங்கபோயிண்டு இருக்கேன்”னு சொல்லிட்டு வந்தேன். ‘எப்பிடியிருந்தாலும் உள்ள போனா டாக்டர் சொல்லபோறார் அதான் நானே சொல்லிட்டேன்.

சமீபத்துல ரெண்டு மாசம் முன்னாடி வேற ஒரு ஆஸ்பத்திரில தலைவலிக்கு செக்பண்ணினா ப்ளெட்ல சுகர்/பிரஷர் எல்லாத்தையும் செக் பண்ணனும்னு சொல்லி எழுதிட்டா. சாம்பிள் எடுக்கரதுக்கு உள்ள போன உடனே ஒரு தடியன் பெரிய்ய்ய்ய சிரிஞ்சை எடுத்துண்டு வந்தான். 'ஆள்காட்டி விரல்ல குண்டூசியை குத்தி ஈஷிண்டு போவாளே அது இல்லையா'னு கேட்டேன். 'அதெல்லாம் காணாது'னு சொல்லிண்டே நரம்பை தேட ஆரம்பிச்சுட்டான். 'ஒரு நிமிஷம் என்னோட தங்கமணியை உள்ள வரசொல்லுங்கோ அவளோட கையை பிடிச்சுக்கனும்'னு நான் சொல்லவும் வினோதமான பிராணியை பாக்கரமாதிரி பாத்துட்டு 'சாம்பிள்தான் எடுக்கபோறேன் ஆப்ரேஷன் எல்லாம் பண்ணலை'னு சொல்லிண்டே ‘நசக்’னு குத்தி கால் லிட்டர் ரத்தம் எடுத்துட்டான். எனக்கு தலையை சுத்திண்டு மயக்கம் வந்து டாக்டர் நர்ஸ்னு ஒரே களோபரம் ஆயிடுத்து. அடுத்த நாள் டாக்டர் ரிசல்டை பாத்துண்டே “கொஞ்சம் கொழுப்பு இருக்கே”னு கேட்டபோது “கொஞ்ச கொழுப்பா இருக்கு உடம்பெல்லாம் கொழுப்புதான்”னு சொல்லற மாதிரி தங்கமணிக்கு நக்கல் சிரிப்பு. ‘ஒரு மண்டலம் மாத்திரை போட்டுண்டு வந்து மறுபடியும் ப்ளெட்டெஸ்ட் எடுங்கோ’னு சொன்னார். இந்த தடவை டெஸ்ட் எடுக்கும் போது தங்கமணி பக்கத்துலேயே நின்னுண்டா & தாகசாந்திக்கு ஜூஸ் தயாரா இருந்தது. சொல்லமறந்துட்டேனே! இந்த தடவை வலிக்காம அழகா சாம்பிள் எடுத்தது ஒரு ஓமணக்குட்டி நர்ஸ். “ஆத்துக்காரி பக்கத்துல இருந்தா தெம்பா இருக்கேளே?”னு போனதடவை இரத்தம் எடுத்த தடியன் கேட்டதும் தங்கமணிக்கு கொஞ்சம் பெருமிதம்.

தங்கமணி கையை பிடிச்சுக்கர்து & மணிபர்ஸ்ல தங்கமணி போட்டோ வெச்சுக்கர்துல ஒரு சூட்சுமம் இருக்கு தெரியுமோ! வாழ்க்கைல ஒரு கட்டத்துல நாம நினைச்சு பாக்கமுடியாத அளவுக்கு பெரிய கஷ்டமோ இல்லைனா சோதனையோ வரும்போது மணிபர்ஸை திறந்து உங்க தங்கமணியை பாத்துண்டேள்னா மனசுல ஒரு புது தெம்பும் புத்துணர்ச்சியும் வரும். அந்த உத்வேகத்தோட எந்த பிரச்சனையையும் சமாளிச்சுடலாம். எனக்கு தெரிஞ்ச ஒரு மாமா இதை ஏடாகூடமா அவாத்து மாமிட்ட சொல்லி அடி வாங்கியிருக்கார். “போன வருஷம் ஒரு பெரிய பிரச்சனை வந்த போது பர்ஸை திறந்து உன்னோட போட்டோவை பாத்தேன்! கண்ணெல்லாம் ஜலம் கட்டிண்டு ‘இந்த பிரச்சனையையே வாழ்க்கைலை சமாளிச்சுண்டு இருக்கோமே இதை விடவா ஒரு பெரிய பிரச்சனை வந்துடபோகர்து’னு நினைக்கவும் மனசு அப்பிடியே லேசாயிடுத்து”னு உளறினா அந்த மாமி சும்மாவிடுவாளா!

அத்வைதா தோஹாவுக்கு வந்ததுலேந்து தடுப்பூசி போடர்துக்கு ஒரு தடவை கூட உள்ள போகர்தே இல்லை. எல்லாம் அம்மாதான் பாத்துக்கரா. நமக்கெல்லாம் உள்ள போனா மனசு தாங்காது. அதுலையும் இந்த ஊர்ல டாக்டர் ஊசி போடமாட்டார் ஊசி போடர்துக்கு தனி ரூம்ல ஒரு கம்பவுண்டர் இருப்பார். போன தடவை வேற ஒரு குழந்தைக்கு ஊசிபோடர்துக்கு அவர் ஊசியை கைல பிடிச்சுருந்த ஸ்டைலை பாத்தா திருனவேலி ஆண்டி நாடார் பாத்திரகடைல அண்டா/குண்டால பேர் எழுதர ஆசாரியாட்டமா இருந்தார். நமக்கு பிடிக்கர்தோ இல்லையோ நித்தியம் கரெக்டா சாப்பிடும் போது வரும் கக்கூஸ் க்ளீனிங் விளம்பரம் கண்ணுல படற மாதிரி சகிச்சுக்கதான் வேண்டியிருக்கு. இவாளோட கூத்தை பாக்கும் போது எங்க ஊர்ல முப்பது ரூபாய்க்கு வைத்தியம் பாக்கும் எங்க டாக்டர் உம்மாச்சியா கண்ணுக்கு தெரியரார்.